சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 25, 2016

சொல்லாதே யாரும் கேட்டால்



“ரகசியம்” எத்தனை வகைப்படும் என்று கேட்டால், வெளியே சொல்லக்கூடியது, சொல்லக்கூடாதது என்று இருவகைப்படும் என்று சொல்லக்கூடாது. ரகசியம் என்றாலே அது வெளியே சொல்லக்கூடாதது என்று தான் பொருள். ஆனால், ரகசியம் என்பது என்ன? அடுத்தவர் நம்மிடம் “இதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.” என்று சொன்னால் அது தான் ரகசியம் என்று நாம் நினைத்திருப்போம். அதுதான் இல்லை. யாரும் நம்மிடம் ரகசியம் என்று சொல்லாவிட்டாலும் சில விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது. 


ரகசியம் இருவகைப்படும். ஒன்று நம்மைப்பற்றிய ரகசியம், இன்னொன்று பிறரைப்பற்றிய ரகசியம். இந்த இரண்டாவது வகையில் நம் உறவினர் தொடங்கி அரசாங்க ரகசியம் வரை அடங்கும்.


முதலில் நம்மைப்பற்றிய ரகசியத்தைப்பார்ப்போம். சிலர் பெருமை என்று நினைத்துக்கொண்டு வீடு கட்ட ஆன செலவு, புதிதாய் வாங்கிய நகை எல்லாவற்றையும் வெளியே சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இது தேவையா? இப்போதெல்லாம் எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. “நான் ஒருமாசம் வெளிநாட்டில் என் மகன் வீட்டில் போய் தங்கப்போகிறேன்.” “இதோ வீட்டைவிட்டு கிளம்பிட்டேன்” “இப்ப விமானநிலையம் வந்துட்டேன்.” என்றெல்லாம் வழிநெடுக சொல்லிக்கொண்டே போகிறார்கள். இது சில சமயம் ஆபத்தாகவும் முடியலாம் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை? எல்லாவற்றையும் எல்லாரிடமும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொதுவாக பெண்களுக்கு ரகசியத்தை பாதுகாக்க தெரியாது என்பார்கள். ஆனால், அது முழு உண்மையில்லை. தங்களுக்கு ஏதேனும் பாதிப்புவரும் என்றால் அந்த ரகசியத்தை பெண்கள் பாதுகாக்கவே செய்கிறார்கள்.


அடுத்தது, பிறரை பற்றிய ரகசியங்கள். இவை சுவாரசியம் மிகுந்தவை. இதில் அண்டை அயலார் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரும் அடங்குவர். “எனக்கு இன்னாரை பற்றிய இந்த ரகசியம் தெரியும்.” என்று சொல்லிக்கொள்வதில் ஒரு தனி இன்பம். சொல்வதையும் சொல்லிவிட்டு,”நான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.” என்று கோரிக்கை வேறு வைக்கப்படும். நீங்கள் காப்பாற்றாத ரகசியத்தை அடுத்தவர் மட்டும் காப்பாற்றுவார் என்பது என்ன நிச்சயம். மேலும், உங்களுக்கு கிடைத்த தகவல் உண்மையானதாக இல்லாதபட்சத்தில் நீங்கள் வதந்தியாளராகும் வாய்ப்பும் உண்டு. “அவ எப்பவுமே இப்படித்தான்ப்பா யாரையாவது பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லிகிட்டே இருப்பா. ஆனா, பாதிக்கு மேல பொய் தான்.” என்று உங்களைபற்றி பேசிக்கொள்வார்கள். 

       
நாம் பணிபுரியும் நிறுவனத்தின் ரகசியங்கள், அரசாங்க ரகசியங்கள், ராணுவ ரகசியங்கள், பிரபலங்களைப்பற்றிய ரகசியங்கள் என்று ஏகப்பட்டது இந்த வகையில் அடங்குகின்றன. முதல் வகையில் பாதிக்கப்படுபவர் நாம் தான் என்றால் இரண்டாவது வகையில் பாதிக்கப்படுவர்களின் பரப்பளவு மிகப்பெரியது. இதில், சுவாரசியத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நீங்கள் வெளிப்படுத்தும் ரகசியம் உங்களை சிக்கலில் மாட்டிவிடும் அபாயம் அதிகம். 


ஒருவர் உங்களை நம்பி சொன்ன விஷயத்தை வெளியே சொல்லிவிட்டு மாட்டிக்கொண்டப்பின்,”இதை வெளியே சொல்லகூடாதுன்னு நீ சொல்லவே இல்லீயே!!!” என்று சாமர்த்தியமாக கேட்காதீர்கள். நாம் தான் ஒரு விஷயத்தை வெளியே சொல்லலாமா கூடாதா என்று முடிவு செய்யவேண்டும். அதை எப்படி முடிவு செய்வது? ஒருவிஷயம் சம்பந்தபட்டவர்களுக்கோ இல்லை மற்றவர்களுக்கோ எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துமானால் அதை வெளியே சொல்லக்கூடாது.


சிலர் தெரிந்தே எதிர்மறையான விளைவுகளை பிறருக்கு ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லுவார்கள்.  உதாரணமாக சிலர்,“அவளுக்கும் உனக்கும் எதாவது சண்டையா என்ன? அவ நேத்து என்வீட்டுக்கு வந்து பேரனுக்கு பேர் சூட்டு விழா ரொம்ப பேரை கூப்பிடலை,ரொம்ப நெருங்கின வட்டத்துல தான் கூப்பிட்டிருக்கேன் ன்னு சொன்னா.  நீ தானே அவளோட நெருங்கின தோழி உன்னை கூப்பிட்டாளா?”இந்தமாதிரி கொளுத்தி போடுவார்கள். அதனால்  அவங்களை  பார்த்தாலே எல்லோரும் ஓட்டம் எடுப்பார்கள். அதோடு அவர்கள் சொன்னால்  யாரும் நம்பவும் மாட்டார்கள். மொத்தத்தில்  எல்லோரின்  நன்மதிப்பையும், நம்பிக்கையையும் இழந்து வாழவேண்டியிருக்கும்.


அதனால்,எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்படியாக தெரிந்தோ தெரியாமலோ பேசக்கூடாது. “அதெப்படி!! ஒவ்வொரு வாட்டியும் இப்படி யோசிச்சுகிட்டே இருக்கமுடியுமா? ஒரு ப்ளோல வந்துடுதுல்ல.” என்கிறீர்களா? 


அதற்குத்தான் தேவையில்லாத விஷயங்களை பேசாதீர்கள் என்பது. அதோடு, “நாம் முகநூல் உள் பெட்டியில் தானே அவர்களை பற்றி பேசினோம். அலைபேசியில் தானே சொன்னோம். இது யாருக்கு தெரிந்துவிடப்போகிறது!!” என்று எண்ண வேண்டாம். தொழிற்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் எதுவுமே ரகசியம் கிடையாது. எந்த ஒரு விஷயத்தையும் வெளியே சொல்வதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.

பயனுள்ளவற்றை மட்டும் பகிருங்கள். தேவையில்லாத விஷயங்கள் அது யாரைபற்றியதாக, எதை பற்றியதாக இருந்தாலும் வெளியே சொல்லாதீர்கள். ஏனென்றால் ரகசியம் என்பது உங்களோடே இருப்பது மட்டும் தான்.    

வெள்ளி, நவம்பர் 25, 2016

உடலினை உறுதி செய்


நானும் என் தம்பியும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது, ஒரு சில நண்பர்களை பற்றிய பேச்சு எழுந்தது. 

"அவங்க ஏன் வரலை?"

"இவர் உடனே கிளம்பிட்டார் இல்ல?"

இப்படி பலவிதமாக பேசும் போது ஒரு விஷயம் பொதுவாக இருந்தது. 

அதுதான் "உடல்நிலை".

பலருக்கும் இதுதான் பிரச்சனை. விரதம் இருக்கமுடியாது?

என்னை ஒரு நிகழ்ச்சி நடத்த சொல்லி ஒருவர் கேட்டபோது, "எனக்கு பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது அக்கா, எனக்கு நிகழ்ச்சி நல்லபடியாக முடியவேண்டுமே என்ற பயத்தில் தலைவலி வந்துவிடும். அப்புறம் ரொம்ப கஷ்டம் ஆகிடும்", என்றேன். அவமானமாக இருந்தது.

பொறுப்பை ஏற்றுகொள்ள தயக்கம். காரணம் உடல்நிலை. "இப்படி இருந்தால் நாளை மகள் திருமண வேலைகளை எப்படி செய்வாய்?" என்று என் மனசாட்சி கேட்டது, 

நிறைய பேருக்கு சிறு வயதிலேயே நீரிழிவு நோய். அதனால், நிறைய நேரம் பசியோடு இருக்க முடியாது, இயற்கை உபாதைகளின் தொல்லை, பலருக்கும் உடல் பருமனால் மலை ஏற முடியாது இப்படி பல.

இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் "உடல் நிலை".

சில தலைமுறைகளாகவே நாம் உடற்பயிற்சியின் அவசியம் தெரியாதவர்களாவே வளர்ந்திருக்கிறோம். “படிப்பு தான் முக்கியம்!, படிச்சாத்தான் சோறு கிடைக்கும் !” என்பதாக நம் மனதில் பதிந்திருக்கிறது. வெறும் ஏட்டு படிப்பால் நிறைய பணம் சம்பாதித்தோம் ஆனால், அந்த பணத்தால் பயன் என்ன?

ஆண்களில் சிலராவது விளையாட வாய்ப்பு கிடைக்க பெற்றிருப்பார்கள். ஆனால், பெண்குழந்தைகள். “அடக்க ஒடுக்கமா வீட்டுல இரு!” “விளையாடி கைய கால ஓடிச்சிகிட்டியானா எவன் கட்டிப்பான்.” “எல்லாம் குனிஞ்சு நிமுந்து வேலை செஞ்சா போதும்!” தனியா என்ன விளையாட்டு வேண்டிகிடக்கு!” போன்ற கட்டளைகள் பெண்களுக்கு பிறப்பிக்கபட்டன. சொன்னவர்கள், வியாதியில் விழுந்த போது அவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டிய பெண்களும் நோயில் விழுந்திருந்தார்கள்.

பல வீடுகளில் பெற்றோர் காலமான போது, நீரிழிவு நோயால் தாக்கப்பட்டு இறுதி காரியங்களை செய்ய கூட பசி தாங்க முடியாமல் அவதிப்பட்ட பிள்ளைகளை பார்த்திருக்கிறேன்.

உடல் உறுதியாக இல்லாவிட்டால் நாட்டிற்கு ராணுவ சேவை செய்ய ஆள் கிடைப்பது எப்படி? கைலாஷ் மானசரோவர் யாத்திரை போவது எப்படி? பெற்றோருக்கு இறுதி கடமைகளை எப்படி செய்வது? பெண் குழந்தைகளின் பேறு காலத்தை கவனிப்பது எப்படி? அட ! இதெல்லாம் கூட பரவாயில்லை, நம் உடலை நாமே சுமப்பது எப்படி?   

 நான் பார்த்த பலரும் சிறுவயதிலேயே உடல் பெருத்து, மூன்று வேளையும் சாப்பாட்டைவிட அதிகமாக மருந்து சாப்பிடுகிறார்கள். சகல ரோகங்களும் மிக,மிக இளம் வயதிலேயே அவர்களிடம் முகாமிட்டு விடுகின்றன.எல்லாம் தெரிந்திருந்தாலும் உடலை பேணுவது என்பதை ஏதோ சுயநலமாக இருப்பதாக கற்பித்துக்கொண்டு தவிர்க்கிறார்கள். 

என் மகள்களை வெளியே விளையாடவிட்டால், ஏதோ பாவகாரியத்தில் அவர்களை நான் ஈடுபடுத்துவது போல் பார்ப்பவர்கள் பலர். குழந்தைகளை டிவி, டேப் முதலியவற்றுக்கு அடிமையாகவிட்டு விட்டு,” என்னங்க செய்யறது? வெளிய விளையாட அனுப்பினா சண்டை வருது.” என்கிறார்கள் சிலர். 

வரட்டுமே! அதை எப்படி கையாள்வது என்று சொல்லிக்கொடுங்கள். அதுக்கெல்லாம் எங்களுக்கு ஏது நேரம்? டிவி பார்க்கணும், நாங்களும் வாட்சாப், பேஸ்புக் என்று நேரம் ஓட்ட வேண்டும்.    
  
ஆக மொத்தத்தில் நாம் நோயாளிகளானது அறியாமையினால், அடுத்த தலைமுறையை நோயாளிகளாக்குவது சோம்பலினால். 

போதும் ! இத்தோடு இது நிற்கட்டும்! திருமணம் போன்ற விசேஷங்களுக்கு உடலுக்கு பட்டுடுத்தி, அரிதாரம் பூசிக்கொண்டு சென்றுவிட்டு பந்தியில் பரிமாறப்படும் இனிப்பை சுவைக்க முடியாத சங்கடம் இனிவேண்டாம். 

சாப்பிட்டு முடிந்ததும் அவரவர் கொண்டுவந்திருக்கும் நடமாடும் மருந்துக்கடையை திறக்கும் நிலை இனிவேண்டாம்.

“எனக்கு சுகர் ! உனக்கு பி.பீயா?” என்ற குசல விசாரிப்புகள் இனி வேண்டாம்.

“நான் பைபாஸ் பண்ணிண்டுட்டேன், நீங்க எப்போ பண்ணிண்டீங்க? எவ்வளவு செலவாச்சு?” என்று ஏதோ பெண்ணின் கல்யாணம், வீடு கட்டுவது மாதிரி அறுவை சிகிச்சையை அந்தஸ்தின் அடையாளம் போல் பேசுவது இனி வேண்டாம்.    

நம் உடல் நமக்கே பாரமாகும் அவலம் இனி வேண்டாம்.
     
நாலு நாள் வாக்கிங் போய்விட்டு ஐந்தாவது நாள் நொண்டி சாக்கு சொல்லிக்கொண்டு தட்டிகழிப்பது இனி வேண்டாம். 

இனி ஒரு விதிசெய்வோம் ! அதை எந்த நாளும் காப்போம் !
 
சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளையே பழக்குவோம், வெள்ளை சர்க்கரை,மைதா போன்றவற்றை தவிர்ப்போம்,
வெளியே மைதானத்தில் விளையாடும் விளையாட்டுகளில்  குழந்தைகளை ஈடுபடுத்துவோம், நாமும் சேர்ந்து விளையாடுவோம்.

நாம் அன்பானவர்கள், அறிவானவர்கள் மட்டுமல்ல ஆரோக்கியமானவர்களும் கூட என்று நிரூபிப்போம்.



வியாழன், மார்ச் 28, 2013

நீங்கள் சரித்திரம் படைப்பவரா?, இல்லை படிப்பவரா?

 தலைப்பில் உள்ள வார்த்தைகளை சமீபத்தில் ஒரு சுயமுன்னேற்ற கட்டுரையில் படித்தேன். அதாவது, நீங்கள் சரித்திரத்தில் இடம்பிடிக்கும் வகையில் ஏதாவது  சாதிக்க போகிறீர்களா ? அல்லது மற்றவர்களின் சாதனை சரித்திரங்களை படிக்கும் சராசரியாக வாழப்போகிறீர்களா என்பது தான் அந்த கட்டுரையின் மைய கருத்து.

என்னை கேட்டால் சரித்திரம் படைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால், கட்டாயம் சரித்திரம் படியுங்கள் என்பேன்.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி படித்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்னவென்றால் 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் மிக மோசமான ஆள் பற்றாக்குறை ஏற்படும், என்பது தான் அது.

சரித்திரம் மற்றும் அது சம்பந்தமான அகழ்வாராய்ச்சி கல்வி படித்தவர்கள் மிக குறைவான பேர்களே உள்ளதே இதற்கு  காரணமாம்.  சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரிகளில் பி .ஏ மற்றும் எம்.ஏ  படிப்புகள் மிகவும் அருகிவிட்டன. அவற்றில் சேர மாணவர்களே வருவதில்லையாம். இப்போதெல்லாம் professional courses எனப்படும் வேலை உடனடியாக கிடைக்க கூடிய படிப்புகளுக்கு தான் வரவேற்பு அதிகமாக உள்ளது.

தமிழில் எம்.பில் பட்டம் பெற்ற என் தோழிக்கு கல்லூரிகளில் வாய்ப்புகள்  மிகவும் குறைந்து விட்டது.


"ஏன் ? சரித்திரமோ, தமிழோ படிக்ககூடாதா?" அதனால் என்ன பிரயோஜனம் என்ற கேள்வி வருகிறது. நாமும் இருக்கிறோம் நம்மால் மட்டும் என்ன பிரயோஜனம்? நம் முந்தையரின் வீர சரித்திரங்களை படித்து அவற்றை போல, அவற்றை விட மேலானதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை  அந்த சரித்திரங்கள் தூண்டாதா?

ஏன், அறிவியல் தான் மேலானது என்றால், நியூட்டன்,எடிசன்,ஐஸ்டின் போன்றவர்களின் கண்டுப்பிடிப்புகளும் ஒரு இன்று  சரித்திரமே.

வெளிநாட்டில் வாழும் ஒரு உறவினரிடம் சரித்திர புகழ் பெற்ற மாவீரர் ப்ரிதிவிராஜ்  சௌஹானை  பற்றி சொல்லிகொண்டிருந்தேன். அவர் அதை ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு, அவரது பதின்ம வயது மகனிடமும் கூறியுள்ளார்.

அவரது மகன் அதைக்கேட்டு  ஆசர்யமடைந்து,"உண்மையாகவே இப்படியெல்லாம் நிகழ்ந்ததா அம்மா ?" என்று கேட்டு  கூகுளில் அவரது சரித்திரத்தை தேடி படித்து விட்டு, "அம்மா ! இத்தனை  காலமும் எனக்கு ப்ரிதிவிராஜ்  என்றால் சினிமா நடிகர் ப்ரிதிவிராஜை தான் தெரியும். ஆனால் அவரோ கதாநாயகனாக நடிப்பவர், அதற்கு பணமும் பெற்றுகொள்கிறார். ஆனால்  இந்த மாவீரரின் சரித்திரமோ மகத்தானதாக இருக்கிறது. இவரைப்பற்றிய அறிமுகத்தை நமக்கு தந்த சித்திக்கு  நன்றி சொல்லவேண்டும்." என்றானாம்.

நம் சரித்திரத்தை, நம் சந்ததியினர் படிக்க வேண்டுமென்றால் நம் முன்னோர்களின் சரித்திரத்தை நாம் கட்டாயம் படிக்கவேண்டும். எல்லா  படிப்புகளிலும் சரித்திரமும், தாய்மொழியும் கட்டாயம் ஒரு பகுதியாக ஆக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால், நம் சாதனைகளும் நாளை யாருக்கும் தெரியாமலே போய்  விடும். நம் சந்ததியினருக்கு நாம் யாரோவாகிவிடுவோம்.ஏனென்றால்,"நம் முந்தையர் வரலாற்றை கேட்கும் போது மூச்சில் புது சக்தி பிறக்கும் என்று பாரதியார் சொல்லிருக்கிறார்.

மீண்டும் சொல்கிறேன், சரித்திரம் படைக்க, சரித்திரம் படியுங்கள்.

புதன், ஜூலை 04, 2012

இரு நல்லவர்கள்

சென்ற பதிவில் நான் எழுதி இருந்த கருத்துக்களை சற்றே விரிவாக இந்த பதிவில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

என் இரு தோழியர்களுக்குள் பெரிய ஈகோ பிரச்சனை. என்னை பொறுத்தவரை இருவரும் நல்லவர்களே.அவர்கள் எனக்கு தோழியரே தவிர அவர்களுக்குள் தோழமை இல்லை. இருவரும் என்னிடம் தனியாக கேட்ட ஒரே கேள்வி , "எப்படி தான் அவங்க கூட பிரெண்டா இருக்கீங்களோ ?"

நான் மனதிற்குள் நினைத்துகொண்டேன் ," எல்லாம், உங்ககூட பழகற அனுபவம் தான்." சொல்ல முடியுமா..? உண்மையை சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும் உறவு பாதிக்கபடும். "அப்படி பட்டவங்க கூட பிரெண்ட்ஷிப் வச்சிக்கணும்னு என்னங்க அவசியம் எவ்வளவு திமிரா பேசறாங்க பாருங்க. உங்க குழந்தைகளை நீங்க வளர்க்கறத பற்றி விமர்சனம் செய்றாங்க, அவங்க கிட்ட ஆயிரம் குறை இருக்கு அத நீங்க சொன்னா என்னாகும் ?" இது ஒரு தோழியின் கருத்து.

உண்மை தான், அவர்கள் யார் என்ன சொன்னாலும் கேட்காத வகையை சார்ந்தவர்கள். நீங்கள் அமிர்தத்தையே கொடுத்தாலும் குடிக்கமாட்டார்கள். அவர்களே கண்டுபிடித்த விஷத்தை தான் குடிப்பார்கள், நம்மையும் அந்த விஷத்தையே குடிக்கச்சொல்லி நிர்பந்திப்பார்கள்.

சரி, இதற்கு என்ன செய்யலாம்?

1. அவர்கள் நாம் என்ன சொன்னாலும் ஏற்றுகொள்ள போவதில்லை என்னும் போது அவர்களுக்கு ஆலோசனை சொல்வதை நிறுத்துவது தான் நல்லது.

2. நாம் நம் கருத்தை சொன்னால் விவாதம் தான் வளரும். விவாதங்கள் என்றுமே முற்றுபெற்றதும் இல்லை. அவை நல்ல முடிவுகளை தந்ததும் இல்லை. எனவே, விவாதிக்காமல் அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டு விடுவது தான் நல்லது. பட்டு தெரிந்து கொள்ளட்டும்.

3. அவர்கள் உறவு நமக்கு தேவையா? ஆம், தேவைதான் அவர்களிடமும் பல நல்ல குணங்கள் நிறைந்திருக்கின்றன. நம்மிடமும் பல குறைகள் இருக்கின்றன. அதோடு, இந்த குணம் கொண்டவர்கள் தான் நம்மை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் அவர்கள் குறைக்காக நாம் விலக்கிக்கொண்டே போனால் நமக்கு யார்தான் மிஞ்சுவார்கள்?

4. அதற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கவேண்டுமா? ஆம், கேட்கத்தான் வேண்டும். ஆனால், செயல்படுத்த வேண்டியதில்லை. இந்த குணம் உள்ளவர்களிடம் நீங்கள் அவர்கள் சொல்லும்போது சரியென்று கேட்டுகொண்டாலே போதும், அவர்கள் திருப்தியாகி விடுவார்கள். அதையும் மீறி அவர்கள் நம்மை நிர்பந்தித்தால் அதை நாசூக்காக மறுத்துவிட வேண்டும்.

5. இப்படி எதற்குமே சரிப்பட்டு வரவில்லை என்றால் அவர்கள் உறவை விலக்கிவிடலாம் .ஆனால் ,அப்போதும் அது எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்து கொள்ளக்கூடிய வகையில் இருக்கவேண்டும். பணம், பதவி எல்லாவற்றையும் விட மனித உறவுகள் விலை மதிக்க முடியாதவை அவற்றை க்ஷண நேரத்தில் முறித்து கொள்வது நல்லதல்ல.

6. அவர்கள் சொல்வதையும், செய்வதையும் நாம் நகைச்சுவை உணர்வோடு ரசிக்க கற்றுகொண்டால், உறவும் சீராக இருக்கும். அவ்வப்போது நமக்கு நல்ல பதிவுகளும் கிடைக்கும்.


ஏதோ ஒரு துணிக்கடையில் (போத்திஸ் என்று நினைக்கிறேன்.) துணி வாங்கும் போது "உறவுகள் மேம்பட" என்று சில ஆலோசனைகள் பிரிண்ட் செய்த அட்டைகள் தருவார்கள். நாமும் அதை பெருமையாக நம் வீட்டில் கதவிலும், இன்னும் பல இடங்களிலும் ஒட்டி வைத்திருப்போம். அந்த அட்டையில் உள்ளவற்றை நாம் வாழ்நாளில் பின்பற்றி பார்த்தாலே போதும் நமக்கு இந்த உலகமே உறவாகி விடும்.

ஒ..கே. இப்ப ஒரு ஜோக். நேற்று, ஒரு மாறுவேட போட்டிக்கு குழந்தைகளை அழைத்து சென்றிருந்தேன் (இதை பற்றிய பதிவை விரைவில் எழுதுகிறேன்.) 

அங்கே கர்ணன் வேடம் போட்ட குழந்தை "நான் தான் கர்ணன்! என் தாய் குந்தி !" என்று வசனம் பேசியவுடன், பெரியவள் என்னிடம் அம்மா !, "குந்தி தின்றால் குன்றும் மாளும் ன்னு பழமொழி சொல்லி கொடுத்தாங்களே எங்க மிஸ், குந்தி அவ்வளவா சாப்பிடுவாங்க? அதனாலதான் அவங்க மகனான பீமனும் நிறைய சாப்பிடறவரா பொறந்துட்டாரா...?" :)))

ஞாயிறு, ஜூன் 24, 2012

"EGO", you go ! (Let it go !)

தலைப்பை பார்த்தவுடனேயே எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும். ஆமாங்க, இந்த "ஈகோ" ன்னு ஸ்டைலா ஆங்கிலத்தில் சொல்லப்படற விஷயம் என்னன்னு ரொம்ப நாளா யோசிச்சிகிட்டே இருந்தேன். 

"ஈகோ" ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு என்னோட ஈகோவை விட்டுவிட்டு ஆங்கில அகராதியை புரட்டிப்பார்த்தேன். அதுல "நான் என்னும் அகங்காரம்" அப்படின்னு அர்த்தம் போட்டிருந்தது.

"நான்" என்னும் எண்ணம் அழிய வேண்டும் அதுவே மனிதன் உயர்வதற்கான வழின்னு எல்லா பெரியவங்களும் சொல்லியாச்சு. ஆனா,"நான் தான் பெரியவன் "ன்னு சண்டை வராத இடமே இல்லைன்னு தான் தோணுது.

இந்த விஷயத்துல்ல எனக்கு தோணினதை சொல்லலாமென்று நினைக்கிறேன்.

இந்த "ஈகோ"வால வீட்ல,ஆபீஸ்ல,பொது இடத்துல எங்க சண்டை வந்தாலும் அதனால வேலை பாதிக்கபடுது,உறவுகள் பாதிக்கப்படுது.


அதனால, "நான்" முக்கியமில்லை. இப்போ இந்த வேலை நல்லவிதமா முடியணும் அதுதான் முக்கியம் அப்படிங்கிற பொறுப்புணர்ச்சி வந்துட்டா ஆட்டோமட்டிக்கா நாம விட்டுகொடுக்க தயாராகி விடுவோம்.


முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா,செயல்படுத்தி பார்த்தால் அதனால விளையற நன்மைகளை பார்க்கும்போது நமக்கே விட்டுகொடுக்கிறது ஒண்ணும் பெரிய தியாகமில்லை, இதில் நம் தன்மானம் எதுவும் குறைஞ்சிட போறதில்லைன்னு புரியும். 

யாராவது நம்மிடம் அகங்காரத்தோடு பேசினால் அவர்கள் சொல்லவதை அப்படியே ஏற்று கொண்டுவிடுங்கள். உதாரணத்திற்கு, "சிகாகோ  ஆப்ரிக்காவில் தான் இருக்கிறது." என்று ஒருவர் உங்களிடம் அடித்து பேசுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள்," ஆமாமாம், ரொம்ப கரெக்ட்!", என்று சொல்லிவிட்டு வந்து உங்கள் ஸீட்டில் உட்கார்ந்து மனசுக்குள் சிரித்து கொள்ளுங்கள். அதோடு அந்த விஷயத்தை விட்டுவிடுங்கள். 


நாம் அப்படியெல்லாம் இல்லையே என்று எதிர்த்து பேசினால் அவர்கள் வீம்பு தான் அதிகமாகும்.அதுவுமல்லாமல் அட்லஸை எடுத்துவந்து சிகாகோ ஆப்ரிக்காவில் இல்லை என்பதை நிரூபிக்க முயலாதீர்கள். அவர்கள் தோல்வி அடைந்ததாகவும், அவமானபடுத்தப்பட்டதாகவும் எண்ணக்கூடும். அதனால், உங்கள் மேல் அவருக்கு வெறுப்பு வளரக்கூடும்.  அவருடனான உறவு பாதிக்கப்படுவதால் உங்களுக்கு அவரிடமிருந்து எப்போதாவது ஏதாவது  உதவி தேவைப்பட்டால் அப்போது அது உங்களுக்கு கிடைக்காமல் போகக்கூடும்.

அப்படியல்லாமல் நாம் பேசாமல் இருந்து விட்டால் ,கால போக்கில் அவர்கள் கருத்து தவறு என்பது பின்னர் வரும் சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டு விடும். அத்தோடு, "அவரா ரொம்ப  தங்கமான மனுஷன் யாரையும் ஒண்ணுமே சொல்லமாட்டார்." என்ற நற்சான்றிதழும் உங்களுக்கு இலவச இணைப்பாக கிடைக்கும்.


அதே போல் நம் கருத்து தவறாக இருந்தாலும் யார் சுட்டிக்காட்டினாலும் திருத்திக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

இவற்றோடு மிக முக்கியமாக நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நம்மை நாமே கிண்டல் செய்து கொள்ள தயாராக இருந்தால் தான் நம் ஆணவம் அழியும். ஆணவம் அழியும் போது பிறரிடம் கற்றுக்கொள்ளும் எண்ணம் வளரும். பிறரிடம் நமக்கு தெரியாததை கற்றுக்கொள்ளும் போது அறியாமை நீங்கி அறிவு வளரும். அறிவு விசாலப்படும் போது வெற்றிக்கான வழி திறக்கும்.


இந்த விஷயம் ரொம்ப பெரிசு ஒரு பதிவுல இதபத்தி எழுதி முடிக்க முடியாது. அதனால ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கேன். விஷயம் தெரிஞ்சவங்க சொன்னா தெரிஞ்சுக்க தயாரா இருக்கேன்.


இப்போ ரொம்ப வருஷம் முன்பு நான் படிச்ச, மறக்க முடியாத ஒரு ஜோக் இங்கே:




பைத்தியக்கார ஆஸ்புத்திரியில் :

டாக்டர் (பைத்தியத்திடம்) : என்ன எழுதற ?

பைத்தியம் : லெட்டர்.

டாக்டர் : யாருக்கு?

பைத்தியம் : எனக்கு தான்.

டாக்டர் : அப்படியா ! அதுல என்ன எழுதி இருக்கு ?

பைத்தியம் : அதெப்படி டாக்டர் இப்போ எனக்கு தெரியும், நாளைக்கு போஸ்ட் மென் வந்து லெட்டர் குடுத்து அதை படிச்சு பார்த்தா தானே தெரியும்.

(நானே பதிவெழுதி, நானே படித்து கொள்ளும் போது எனக்கு நினைவுக்கு வரும் ஜோக் இது.) :)))



புதன், நவம்பர் 16, 2011

தங்கச்சி பாப்பா பிறந்தநாள் (நவம்பர் 19)





"ஐயோ பாவம் நீ !, பேர்சொல்ல உனக்கு ஒரு ஆண்வாரிசு இல்லையே?"

நான் மனதிற்குள் :  "இங்கே எனக்கு என்ன சாம்ராஜ்ஜியமா இருக்கிறது , அடுத்த  பட்டத்திற்கு இளவரசன்  இல்லாமல் தவிப்பதற்கு?"

"பையன் தான் வச்சு சோறு போடுவான்."

நான் மனதிற்குள் :      "நான் என்ன நாயா..? பூனையா...? என்னை வச்சு ஒருத்தர் சோறுபோட.இல்ல எல்லா பையன்களும் அவங்க அவங்க அப்பா அம்மாவ வச்சு சோறு போட்டுகிட்டு தான்  இருக்காங்களா?"

"உனக்கு ஆம்பள பையன் இல்லையே யாரு கொள்ளி போடுவா? யாரு கர்மா பண்ணுவா?" பாவம் பண்ணினவங்களுக்கு தான் கர்மா பண்ண புள்ளைல்லாம இருக்குமாம். ஏதோ ஒரு புஸ்தகத்துல படிச்சேன்."

நான் மனதிற்குள் : அந்த கவலை உங்களுக்கெதற்கு? என் பாவத்தையும் புண்ணியத்தையும் கணக்கு பண்ண நீங்கள் என்ன சித்ரகுப்தனா? பையன் இருக்கிரவங்களுக்குமே அவங்க செத்ததுக்கப்புறம், யாரு கொள்ளி போடறங்கன்னு  தெரியாது. அதைப்பற்றி எனகென்ன கவலை."


இதை யாரும் தயவு செய்து கற்பனை என்று எண்ணி விட வேண்டாம். இப்படியெல்லாம் அடுத்தவர் மனதை புண்படுத்துவதற்காகவே பேசுபவர்கள்  இன்னமும் நிறையவே இருக்கிறார்கள். நான் அவர்கள் பேசுவதை இப்போதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.


"குழந்தை பெறுவதில் அல்லது ஆண் குழந்தை பெற்றதில் உங்கள் சாதனை என்ன?" என்று கேட்கவேண்டும் என்று நினைப்பேன் .ஆனால், இவர்களுடன் விவாதம் செய்வதை விட இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்து விட்டேன்.

என்னிலை எவ்வளவோ மேல். இளம் விதவையான ஒரு தோழியும், குழந்தை இல்லாத ஒரு தோழியும் படும் அவமானங்கள் வார்த்தையால் விவரிக்க முடியாதவை.

அவர்கள் தங்கள் நிலையை என்னிடம் சொல்லி வருந்திய  போது அவர்களிடம் நான் கேட்ட கேள்வி இது தான்," உங்களுக்கு ஜான்சி ராணி லக்ஷ்மி பாயை தெரியுமா?"

"தெரியும்"

"யார்?"

"சுதந்திர போரட்ட வீராங்கனை."

"அப்படியானால் ஜான்சி ராணி என்றதும் உங்களுக்கு என்ன நினைவிற்கு வருகிறது?"

"அவர்களின் வீரமும், தேச பக்தியும்."

"அவர்களுக்கு குழந்தை இல்லை(ஒரு மகன் பிறந்து சிறிது நாட்களிலேயே இறந்து விட்டது) என்பதும், அவர்கள் விதவை என்பதும் நினைவிற்கு வரவில்லையல்லவா?"

"!!!!!!!!!!"

நாம், நம் செயல்களினாலேயே அறியபடுகிறோம். நம் பாக்யங்களினால் அல்ல .

வாழ்கையில் உருப்படியாய் ஏதும் சாதிக்காதவர்கள் தான், தன் பாக்யங்களையே தன் சாதனைகள் போல் காட்டிகொள்வார்கள்.

ஜான்சி ராணி காசியில் ஒரு அந்தண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இளம் வயதிலேயே போர் கலைகள் பயிற்சி மற்றும் கல்வியறிவும் பெற்றிருந்தார். ஜான்சியின் மகாராஜா கங்காதர் ராவ் லக்ஷ்மி பாயை அவர் வீரம், அறிவு, அழகு,குணம் ஆகியவற்றை விரும்பியே மணந்தார்.

ராணி லக்ஷ்மி பாயின் இயற்பெயர் மணிகர்ணிகா, செல்லமாக மனு. மனுவிற்கு ராஜா கங்காதர் ராவ்வுடன் திருமணம் நடந்த போது அவர் பதிமூன்று வயது குட்டி பெண் (இந்த காலமாக இருந்தால் அம்மா கட்டிகொடுக்கும் லஞ்ச்சை எடுத்து கொண்டு ஸ்கூல் போகும். ஏழாவதோ, எட்டாவதோ படித்து கொண்டிருந்திருப்பார்). 

ஆனால், மனு குட்டி அந்த வயதிலேயே ஒரு ராஜ்ஜியத்தின் மகாராணி பொறுப்பை ஏற்றார். 


சொத்திற்காக புகுந்த வீட்டில் கலகம் செய்யும்  பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், ராணி லக்ஷ்மி பாயோ தன் கணவரின் ராஜ்யதுக்காக அந்நியர்களுடன் தான் போர் புரிந்தார், குடும்பத்துக்குள் அல்ல.

மகாராஜா கங்காதர் ராவ் இறந்த பின் ஜான்சி மக்களை தன் சொந்த குழந்தைகளை போலவும், ஜான்சியை தன் உயரினும் மேலாகவும் காத்தார் என்பது வரலாறு சொல்லும் செய்தி.

அந்த  காலத்தில், கணவன் இறந்து விட்டால் உடன் கட்டை ஏறுவார்கள். இந்த காலத்தில் பிறந்த வீட்டிற்கு போய் விடுவார்கள். ஆனால், லக்ஷ்மி பாயோ தன் கணவரின் விருப்பப்படி அவர்கள் ச்விகார  புத்திரனை அரியணையில் அமர்த்தினார். அதற்கு எதிர்ப்பு வந்த போது மகனை முதுகில் சுமந்தபடி போர்களத்தில் பாய்ந்தார்.

பெற்ற குழந்தையையே ஆயாவிடம் விட்டு செல்லும் பெண்களும் உண்டு. ராணி நினைத்திருந்தால் யாராவது தாதியிடம் குழந்தையை விட்டு விட்டு போருக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

மகாராணி லக்ஷ்மி பாய் இந்த உலகத்தில் வெறும் இருபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்(இளம் பெண்). அவரை விட இரண்டு மூன்று மடங்கு அதிக வருடங்கள் வாழ்ந்து எத்தனை பேர் சாமானியர்களாகவே மடிகிறோம்.

இதுபோன்ற தலைமை பண்புகள் இயல்பிலேயே அமைய பெற்ற மகாராணி லக்ஷ்மி பாயை என் ஆதர்ச தலைவியாக எண்ணுகிறேன். 

எனவே, நம்  பாக்கியங்களை குறித்து நினைக்காமல், நம் செயல்களை திருத்திக்கொண்டு, நம் வாழ்க்கையை பயனுள்ளதாக ஆகிக்கொள்ளவேண்டும்.

" வாழ்பவர் கோடி, மறைபவர் கோடி 
 மக்களின் மனதில் நிற்பவர் யார் ?"

"மாபெரும் வீரர், மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்."




                                               *************************




டெயில் பீஸ் : தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு. 

என் பெரியவளிடம் "நவம்பர் 19 உன் தங்கச்சி பிறந்த நாள்" என்று சொன்னால். 

"ஜான்சி ராணிக்கும் அன்றைக்கு தான் பிறந்த நாள்" என்று சட்டேன்று சொல்லுவாள். 

"சபாஷ் மகளே !"