சின்னவள் பிறந்த பின் இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு வீட்டு வேலைகளை செய்ய ரொம்ப கஷ்டமாக இருந்ததால் கீழ் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மீனாம்மாவை வேலைக்கு வைத்து கொண்டேன்.
நகர்புற வீடுகளில் வேலை செய்யும் பெண்மணிகளின் சகல லக்ஷணங்களும் மீனாம்மாவிடம் இருந்தன. குடிகார கணவன்,பொறுப்பில்லாத குழந்தைகள், எப்போதும் தேவைகள், சொல்லாமல் மட்டம் போடுவது முதலியன.
அவள் குழந்தைகளிலேயே மீனா தான் பொறுப்பு உள்ளவள். பதிமூன்று, பதினான்கு வயதிருக்கும், தன் அம்மாவிற்கு உதவியாக வந்து வேலை செய்யும். நகராட்சி பள்ளியில் படித்து வந்தாள். நான் அடிக்கடி மீனாம்மாவிடம்,"மீனாவை வீட்டு வேலை செய்ய வைக்காதீங்க மீனாம்மா." என்று கண்டித்து கொண்டே இருப்பேன். எப்போதும் பொறுப்பானவர்களிடம் தான் எல்லோரும் அதிகமாக எதிர்பார்கிறார்கள். மீனாவை வஞ்சித்து அவள் சகோதரனுக்கும், சகோதரிக்கும் அதிகமாக செய்வாள் மீனாம்மா. எனக்கு அதில் வருத்தம் தான். ஆனால் அடுத்தவர் வீட்டு விஷயத்தில் நாம் எப்படி தலையிட முடியும்?
அதே காலகட்டத்தில் என் அம்மா வீட்டில் அஞ்சம்மா என்பவர் வேலை செய்து வந்தார். தலைவர் அங்கு சென்றால் "FIVE MUMMY வந்தாச்சா?" என்று விளையாட்டாக கேட்டு வந்தார். உடனே என் சகோதரர்கள்,"அதென்ன உன் வீட்டுக்காரர் எங்க வீட்டு வேலைகாரம்மாவுக்கு பெயர் வைப்பது? நாங்கள் உங்கள் வீட்டு வேலைகாரம்மாவுக்கு பெயர் வைக்கிறோம் ,"FISH MUMMY" என்று பெயர் வைத்து விட்டார்கள்.
மீனாம்மாவிற்கும் தலைவருக்கும் எட்டாம் பொருத்தம் தான். "அந்தம்மா நல்லா பெருக்க மாட்டேன்குது, சுத்தமா தொடைக்க மாட்டேன்குது, அத ஏன் வேலைக்கு வச்சிருக்க? அனுப்பிடு !" இப்படி தினமும் என்னை படுத்துவது போதாதென்று அந்தம்மாவிடமும்,"மீனாம்மா அங்க பாருங்க தூசி, இங்க சரியாய் தொடைங்க !" என்று விரட்டி கொண்டே இருப்பார்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மீனாம்மாவிற்கு நான் போடும் டீ பிடிக்காதாம். தலைவர் போடும் டீ தான் பிடிக்குமாம். "அந்த வீட்டுல்ல அந்த ஐயா தான் நல்லா டீ போடுவாரு, அந்தம்மா டீ வேணுமான்னு கேட்டா நான் வேணாமுன்னு சொல்லிடுவேன்." என்று கீழ் வீட்டில் சொன்னாளாம்.
இதை நான் சொன்னதும் தலைவர்,"பார்த்தாயா ! நானா கொண்டு உன் டீயை அட்ஜஸ்ட் பண்ணி குடிக்கிறேன். " என்று சொல்லி சிரித்தார்.
இதை படித்தால், தக்குடு தங்கமணிக்கு "இட்லிமாமி" என்று பெயர் வைத்தது போல் எனக்கும் "டீ டீச்சர்" (tea masterக்கு பெண்பால்) என்று பெயர் வைக்க கூடும்.
கடைசியில் தலைவரின் ஆசை நிறைவேறியது. மீனாம்மா நிறைய வீடுகளில் வேலை செய்ய ஆரம்பித்ததால், குறித்த நேரத்திற்கு வருவதில்லை. அவளாலும் இங்கு தொடர முடியவில்லை. கை வலி, கால் வலி என்று சொல்லிக்கொண்டு மூன்று வருடங்களாக நானே எல்லா வேலைகளையும் செய்வது தொடர்கிறது.
இந்த பதிவை தொடர நான் அழைபவர்கள் :
மதுராகவி ரமாஜி : என் முதல் வாசகி, தற்சமயம் வரையில் ஒரே வாசகியும் கூட. அவரை நான் அழைப்பது "வாசகிக்கு மரியாதை" என்ற முறையில்.
UNDER THE MANGO TREE (லலிதா அக்கா) : சென்னை மாவடி வைகும் இவர் முறையில் எனக்கு தமக்கை என்றாலும், தோழி,குரு,நலம் விரும்பி என்று பல பல அவதாரங்களை எடுத்து எனக்கு வழி காட்டுபவர். இவரை உங்களுக்கு காட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தக்குடு : என்னதான் என்னை "ஓசி பேப்பர்" என்று கிண்டல் செய்தாலும், நான் இவரை இந்த தொடரை தொடர அழைத்திருக்கும் காரணம் ஆண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் தருவதற்காக என்று நான் சொன்னால் அது உண்மையல்ல. எனக்கு பதிவுலகில் வேறு யாரையும் தெரியாது என்பது தான் உண்மை. தக்குடுவின் நகைச்சுவை ததும்பும் எழுத்து வன்மையும் ஒரு காரணம்.


