தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

கடை நிலை ஊழியர்கள் - (தொடர் பதிவு) இறுதி பகுதி.



 மீனாம்மா :  மீனாம்மாவின் உண்மையான பெயர் இன்றுவரை எனக்கு தெரியாது. மீனாவின் அம்மா மீனாம்மா அவ்வளவு தான். மீனாம்மாவிற்கு மூன்று குழந்தைகள். ஒரு மகன், இரண்டு மகள்கள். மீனாதான் கடைசி. 

சின்னவள் பிறந்த பின் இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு வீட்டு வேலைகளை செய்ய ரொம்ப கஷ்டமாக இருந்ததால் கீழ் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மீனாம்மாவை வேலைக்கு வைத்து கொண்டேன்.

நகர்புற வீடுகளில் வேலை செய்யும் பெண்மணிகளின் சகல லக்ஷணங்களும் மீனாம்மாவிடம் இருந்தன. குடிகார கணவன்,பொறுப்பில்லாத குழந்தைகள், எப்போதும் தேவைகள், சொல்லாமல் மட்டம் போடுவது முதலியன.

அவள் குழந்தைகளிலேயே மீனா தான் பொறுப்பு உள்ளவள். பதிமூன்று, பதினான்கு வயதிருக்கும், தன் அம்மாவிற்கு உதவியாக வந்து வேலை செய்யும். நகராட்சி பள்ளியில் படித்து வந்தாள்.  நான் அடிக்கடி மீனாம்மாவிடம்,"மீனாவை வீட்டு வேலை செய்ய வைக்காதீங்க மீனாம்மா." என்று கண்டித்து கொண்டே இருப்பேன். எப்போதும் பொறுப்பானவர்களிடம் தான் எல்லோரும் அதிகமாக எதிர்பார்கிறார்கள். மீனாவை வஞ்சித்து அவள் சகோதரனுக்கும், சகோதரிக்கும் அதிகமாக செய்வாள் மீனாம்மா. எனக்கு அதில் வருத்தம் தான். ஆனால் அடுத்தவர் வீட்டு விஷயத்தில் நாம் எப்படி தலையிட முடியும்?

அதே காலகட்டத்தில் என் அம்மா வீட்டில் அஞ்சம்மா என்பவர் வேலை செய்து வந்தார். தலைவர் அங்கு சென்றால் "FIVE MUMMY வந்தாச்சா?" என்று விளையாட்டாக கேட்டு வந்தார். உடனே என் சகோதரர்கள்,"அதென்ன உன் வீட்டுக்காரர் எங்க வீட்டு வேலைகாரம்மாவுக்கு பெயர் வைப்பது?  நாங்கள் உங்கள் வீட்டு வேலைகாரம்மாவுக்கு பெயர் வைக்கிறோம் ,"FISH MUMMY" என்று பெயர் வைத்து விட்டார்கள்.

மீனாம்மாவிற்கும் தலைவருக்கும் எட்டாம் பொருத்தம் தான். "அந்தம்மா நல்லா பெருக்க மாட்டேன்குது, சுத்தமா தொடைக்க மாட்டேன்குது, அத ஏன் வேலைக்கு வச்சிருக்க? அனுப்பிடு !" இப்படி தினமும் என்னை படுத்துவது போதாதென்று அந்தம்மாவிடமும்,"மீனாம்மா அங்க பாருங்க தூசி, இங்க சரியாய் தொடைங்க !" என்று விரட்டி கொண்டே இருப்பார்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மீனாம்மாவிற்கு  நான் போடும் டீ பிடிக்காதாம். தலைவர் போடும் டீ தான் பிடிக்குமாம். "அந்த வீட்டுல்ல அந்த ஐயா தான் நல்லா டீ போடுவாரு, அந்தம்மா டீ வேணுமான்னு கேட்டா நான் வேணாமுன்னு சொல்லிடுவேன்." என்று கீழ் வீட்டில் சொன்னாளாம். 

இதை நான் சொன்னதும் தலைவர்,"பார்த்தாயா ! நானா கொண்டு உன் டீயை அட்ஜஸ்ட் பண்ணி குடிக்கிறேன். " என்று சொல்லி சிரித்தார்.

இதை படித்தால், தக்குடு தங்கமணிக்கு "இட்லிமாமி" என்று பெயர் வைத்தது போல் எனக்கும் "டீ டீச்சர்" (tea masterக்கு பெண்பால்) என்று பெயர் வைக்க கூடும்.

கடைசியில் தலைவரின் ஆசை நிறைவேறியது. மீனாம்மா நிறைய வீடுகளில் வேலை செய்ய ஆரம்பித்ததால், குறித்த நேரத்திற்கு வருவதில்லை. அவளாலும் இங்கு தொடர முடியவில்லை. கை வலி, கால் வலி என்று சொல்லிக்கொண்டு மூன்று வருடங்களாக நானே எல்லா வேலைகளையும் செய்வது தொடர்கிறது.

இந்த பதிவை தொடர நான் அழைபவர்கள் : 

மதுராகவி ரமாஜி : என் முதல் வாசகி, தற்சமயம் வரையில் ஒரே வாசகியும் கூட. அவரை நான் அழைப்பது "வாசகிக்கு மரியாதை" என்ற முறையில்.
UNDER THE MANGO TREE (லலிதா அக்கா) : சென்னை மாவடி வைகும் இவர் முறையில் எனக்கு தமக்கை என்றாலும், தோழி,குரு,நலம் விரும்பி என்று பல பல அவதாரங்களை எடுத்து எனக்கு வழி காட்டுபவர். இவரை உங்களுக்கு காட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தக்குடு : என்னதான் என்னை "ஓசி பேப்பர்" என்று கிண்டல் செய்தாலும், நான் இவரை இந்த தொடரை தொடர அழைத்திருக்கும் காரணம் ஆண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் தருவதற்காக என்று நான் சொன்னால் அது உண்மையல்ல. எனக்கு பதிவுலகில் வேறு யாரையும் தெரியாது என்பது தான் உண்மை. தக்குடுவின் நகைச்சுவை  ததும்பும் எழுத்து வன்மையும் ஒரு காரணம்.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கடை நிலை ஊழியர்கள் (தொடர் பதிவு) - பகுதி 2

முத்தம்மா :  நங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்த பிளட்திற்கு பூ விற்க வரும் பெண்.  அந்த பிளாட்டில் நிறைய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள். அங்கு இருந்த 48 வீடுகளுக்கும் செல்ல பெண். இரண்டு ஆண் குழந்தைகள். 

நல்ல மனம், கல கலப்பான பேச்சு இது முத்தம்மாவின் முத்திரை. 

நான் குடி போனவுடன் ஆடிமாதம் ஆரம்பித்திருந்தது. அந்த ஆடி பூரதிற்கு எல்லோருக்கும் வளையல் வாங்கி கொடுத்தேன். முத்தம்மாவிற்கும் கொடுத்தேன். அவள் அந்த வளையளுக்கே மிக மகிழ்ந்து,"அம்மா, நீங்க எனக்கு வளையல் குடுக்கறீங்க, உங்களுக்கு கூடிய சீக்கிரம் வளைகாப்பு வந்து நான் உங்களுக்கு வளையல் போடனும்மா." என்றாள்.

அப்போது எல்லோரும் எங்களை புதுமண தம்பதிகள் என்று எண்ணி இருத்தாலும், நான் என் முதல் குழந்தையை இழந்திருந்த விவரம் யாருக்கும் தெரியாது. முத்தம்மாவின் வார்த்தைகள்  எனக்கு தெய்வ வாக்காகவே தோன்றியது. 

அவள் மகன்களை என்னிடம் கொண்டுவந்து விட்டு, "அம்மா, இதுங்களுக்கு கொஞ்சம் இங்கிலீஷ் சொல்லிகுடுமா. எப்படியாவது இதுங்களை நல்ல படியா படிக்க வச்சிரணும்னு நினைச்சிருக்கேன். இவனுக அப்பன மாதிரி ஆவ கூடாதும்மா. அவன் குடிக்கிறான், கூத்தியா வச்சிருக்கான்." என்றாள்.

எதிர் வீட்டு மாமி வம்பாக,"அவள சித்தின்னு கூப்பிட சொல்லிக்குடுடி முத்தம்மா." என்றார்கள்.

உடனே அவள், "என் சக்களத்தி எப்படிம்மா இதுங்களுக்கு சித்தி ஆவா, என் தங்கச்சி தான் என் புள்ளைங்களுக்கு சித்தி. என்ன இருந்தாலும் ஆம்பள பசங்க அப்பன் இல்லனா தறுதலையா போய்டுங்க. அதனால வீட்டுல ஆம்பளைன்னு ஒருத்தன் இருக்கட்டுமேன்னு தான் என் புருசனையே வீட்ல விட்டு வச்சிருக்கேன்." என்ற புரட்சிகரமான பெண் முத்தம்மா.

ஒரு நாள் கதிரி கோபால்நாத் இன் மகுடி காசெட் போட்டிருந்தேன். முத்தம்மா
வழக்கம் போல் பூ விற்க வந்தாள். திடீரென்று,"அம்மா, அந்த பாட்ட நிறுத்துங்கம்மா, எனக்கு மகுடி கேட்டா சாமி வரும், நான் ஆட ஆரம்பிச்சிருவேன்." என்றவள் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் பாம்பு படமெடுப்பது போல் வைத்து கொண்டு ஆட தயாரானாள்.

பயந்து போன என் மாமியார்,"அய்யய்யோ.....! அந்த காஸ்செட்ட நிறுத்துங்கோ, இவளுக்கு சாமி வந்துடுது போலிருக்கே." என்று அலறவும், கேசட் நிறுத்தப்பட்டது. முத்தம்மாவின்னுள் இருந்த சாமி விடை பெற்றுக்கொண்டது.

இன்றும் அந்த கேசட் போடும் போதெல்லாம் தலைவர், "முத்தம்மா இருந்திருந்தா சாமி வந்து ஆடி இருப்பா." என்று சொல்லி சிரிப்பது வழக்கம்.

நான் பெரியவளை கர்ப்பமாக இருந்த போது முத்தம்மா அவளாகவே வந்து,"உனக்கு குழந்தை பொறந்த உடனே உன்வீட்டு வேலை எல்லாம் நான் செஞ்சுதறேன், நீ கவலையே படாதம்மா." என்றாள்.

எதிர் வீடு மாமியும்,"அவ நன்னா செய்வாடி, அவளையே வேலைக்கு வச்சிக்கோ. நல்ல மனசு, சூது,வாது தெரியாது." என்றார்கள்.

எல்லோரும் என் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்க கடவுளுக்கு என் மேல் அவ்வளவு கருணை இல்லை. நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த போதே மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி விட்டது. 

சென்னையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் கை குழந்தையை வைத்துகொண்டு திண்டாடிய போது முத்தம்மா இருந்திருந்தால் நம் குழந்தையை கொண்டாடி வளர்திருப்பாளே என்று நானும் தலைவரும் ஆதங்க பட்டுகொண்டோம்.

......தொடரும்.

கடைநிலை ஊழியர்கள் (தொடர் பதிவு)

எனக்கு எப்போதுமே வீட்டில் வேலை செய்யும் அம்மாள், அலுவலகத்தில் attender, peon போன்றவர்களோடு நல்ல நட்புறவுண்டு. அவர்களின் பாமரத்தனமான பேச்சிலும் ஒரு மேதமை இருக்கும். அவர்களின் வெகுளி தனமான அன்பில் உண்மை இருக்கும். அப்படிப்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.







பிரகாஷ்: நான் வேலை பார்த்த ஆடிட்டர் அலுவலகத்தில் attenderராக இருந்தவன். இளைஞன், எப்போதும் சிரித்த முகம். எல்லோரிடமும் நன்றாக பேசி பழககூடியவன். நான் வேலைக்கு சேரும் முன்பிலிருந்தே அவன் அங்கு வேலை பார்த்து வந்தான். 

நான் வேலைக்கு சேர்ந்து பலநாட்கள் ஆகியும் அவனுடன் அதிகமாக பேசி பழகவில்லை. ஒருநாள் என் அறையில் பல்பு பழுதாகி விட்டது. வேறு பல்பு கொண்டுவந்து மாற்ற சொன்னேன். அவனும் பல்பு மற்றிகொண்டிருந்தான்.

நான் அவனிடம் விளையாட்டாக, "ஏன் பிரகாஷ்... நீ மாற்ற இந்த பல்பு பிரகாசமா எரியுமா?" என்று கேட்டேன்.

திடீரென்று கேட்டதால் முதலில் விழித்து விட்டு, பின்னர் சிரித்தான். "silentஆ இருக்கியேன்னு நினைச்சா பயங்கர கிண்டல் பார்ட்டியா இருப்ப போலிருக்கே மேடம்?" என்றான்.

எல்லோரையும் ஒருமையில் தான் பேசுவான். ஒரு நாள் ஆடிடேர்ரிடம் ஜூனியர்ராக வேலை பார்த்தவர் இவனை "shabby gibbon" என்று திட்டி இருக்கிறார். இவனுக்கு ஏதோ திட்டுகிறார் என்று தான் புரிந்ததே தவிர் அர்த்தம்   புரியவில்லை. ஆனால் அவன் புத்திசாலி. அந்த வார்த்தைகளை ஞாபகம் வைத்துகொண்டு என்னிடம் வந்தான்(என்னை இங்கிலீஷ் புலவர் என்று நினைத்து கொண்டிருந்த அவன் அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்வது?).

"மேடம்,"shabby gibbon" ன்னா இன்னாது மேடம்?"

""shabby" ன்னா அழுக்கு தெரியும்,"gibbon" ன்னா என்னன்னு தெரியலையேப்பா. dictionary இருந்தா பார்க்கலாம்."

"auditor ரூம்ல dictionary இருக்கு. வா மேடம், வந்து இப்பவே பார்த்து சொல்லு" என்று என்னை வற்புறுத்தி  அழைத்து சென்றான்.

எங்கள் auditor ரோ பயங்கர உஷார் பார்ட்டி. யாரும் எடுத்து கொண்டு ஓடிவிட கூடாது என்பதற்காகவோ என்னவோ ஜனக மகாராஜரின் சிவ தனுசை போல் ஒரு பெரிய dictionary யை வாங்கி வைத்திருப்பார். அதை இருந்த இடத்தில் வைத்தே தான் அர்த்தம் பார்க்க முடியுமே தவிர தூக்க கூட முடியாது.

அதில் "gibbon" என்பதற்கு மனித குரங்கு என்று படத்துடன் தமிழிலும் அர்த்தம் போட்ருந்தது. "இதோ பாரு பிரகாஷ், கிப்பான்னா மனுஷ குரங்குன்னு அர்த்தம்."

"இன்னாது மன்ஸ கொரங்கா? அப்படியா போட்டிருக்குது?" எட்டி பார்த்தான்.

"இக்கும்....ஆமா அப்பிடித்தான் போட்டிருக்குது. அப்பிடின்னா நான் மன்ஸ கொரங்கா...?! அதுவும் அழுக்கு மன்ஸ கொரங்கா?!"

"ஏன் பிரகாஷ், உன்னை யாராவது அப்படி சொல்லிடங்களா?"

"ஆமா மேடம், என்னிய ஒருத்தன் அப்பிடி சொல்லிக்கிறான். அவன நா சொம்மா உடறதில மேடம்." என்றபடி விரைந்து சென்றான்.

அந்த ஜூனியர் வந்ததும் அவரை கும்மி எடுத்து விட்டான். நான் பயந்தே போய்விட்டேன்.

திடீரென்று அவனுக்கு தானும் கம்ப்யூட்டர் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தான். ஒரு நாள் என்னிடம் வந்து," இட் (IT)industry ன்னா இன்னாது மேடம்?" என்று கேட்டான்.

முதலில் புரியாமல் விழித்த நான்," ஒ...... ஐ.டி யா அது இட் இல்ல பிரகாஷ் IT."என்றேன்.

அவன் உடனே "ஒ....நம்ம ஆடிட்டர் அடிக்கடி IT office போறேன்,IT office போறேன், இங்கிறாரே அதானா இது."

"ஐயோ பிரகாஷ், அது income tax இது information technology." என்றேன்.

"என் அக்கா கூட இப்படித்தான் மேடம் உனைய மாதிரியே நிறைய படிச்சிருக்குது . நிறைய certificate எல்லாம் வாங்கி இருக்குது. அதெல்லாம் கொண்டுவந்து தரேன் நீ வச்சிக்க மேடம்."

"ஒருத்தர் பேர்ல்ல இருக்கிற certificates இன்னொருத்தர் உபயோக படுத்த முடியாது பிரகாஷ்.ஏன் அதெல்லாம் உன் அக்காவுக்கு வேண்டாமா? யாருகாவது கொடுத்தால் அவங்க திட்ட மாட்டாங்களா?"

"என் அக்கா தான் செத்து போச்சே மேடம். எங்க மாமா ரொம்ப கொடும பண்ணுனதால நெருப்பு வச்சிகின்னு செத்து போச்சு." என்றான்.

அதையும் அவன் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் சொன்னவுடன் அதிர்ந்து போனேன்.

இந்த அப்பாவி இளைஞனின் வாழ்வில் இப்படி ஒரு சோகம் இருக்கும் என்பதை  சற்றும் எதிர் பாராத நான் பேச்சற்று இருந்தேன்.

பின்னர் என் தோழிகளிடம் இது பற்றி பேசிய போது அவர்கள் சொன்னது. " ஆமா, உனக்கு தெரியாதா....? அவன் அக்கா குழந்தைகளும் அவன் வீட்டில் தான் வளர்கிறார்கள். அவன்னுக்கு அம்மாவும் கிடையாது. அவன் அப்பா ஏதோ ஒரு கம்பென்யில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார். அவன் வீட்டில் பெண்கள் யாரும் இல்லாததால் நம் ஆபீஸ் ஆண்கள் யாராவது ஒருத்தர் அவன்னுக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள்."

வேலையில் முழுகி என்னை சுற்றி இருக்கும் மனிதர்களை தெரிந்து கொள்ளாமல் இருந்த என் அறியாமையை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. ஒருவர் என்ன படித்திருந்தால் தான் என்ன, என்ன பட்டம் வாங்கி இருந்தால்தான் என்ன, எல்லாம் மரணத்தின் பின் பயனற்று தான் போகும். என்ற வாழ்கையின் நிலையாமையும் மனதில் எழுந்தது.

                                                                                                                           ........தொடரும்.