வியாழன், ஜனவரி 12, 2012

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்களுக்கான பதிவு)


"இது சனி பெயர்ச்சியா தானே இருக்க முடியும் !? எப்படி ராகு-கேது பெயர்ச்சியாச்சு!?"ன்னு நீங்க யோசிக்கலாம். வாஸ்தவம் தான் இந்த க்ரஹமும் சனி அத்தனைக்கு பொல்லாதது தான். ஆனால் சனிக்கு மகரம், கும்பம்னு இரண்டு சொந்த வீடுங்க இருக்கே. இந்த க்ரஹதுக்கு சொந்தமா ஒரு வீடும் கிடையாது. அது மட்டுமில்லாம இந்த கிரஹத்தோட ஜோடி கிரஹமும் இதுவும் எப்பவும் எதிர் எதிர் திசையில தான் இருக்கும்,யோசிக்கும்,செய்யும். அதனால இந்த கிரஹத்த ராகுனும் இதன் ஜோடி கிரஹத்த கேதுனும் வச்சிக்கலாம்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியானது இந்த மாச கடைசில நிகழ போகிறது. ரொம்ப வருசத்துக்கு பிறகு நடக்கிற ஒரு அதிசய வானவியல் நிகழ்வுங்கிறதால இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

பலன்கள் : இந்த கிரக  பெயர்ச்சியினால பதிவுலகத்துக்கு மகத்தான நற்பலன்கள் ஏற்பட போகின்றது. எப்படியும் இந்த கிரகம் அடுத்த வீட்டுக்கு போய் அந்த பலன்களை தரத்துக்கு ஒரு மாசமாவது ஆகுமே! பின்ன, போன் கனெக்சன் மாத்தி நெட் கனெக்சன் திரும்பவந்து, அங்க சாமான்களை எல்லாம் அரேஞ்சு பண்ணி செட்டில் ஆகிட்டு அப்புறமா தானே மற்றவர்களை படுத்துவதை பற்றி யோசிக்க முடியும். ஆக, இந்த பெயர்ச்சியினால் பதிவுலக மக்கள் அனைவருக்கும்  மொக்கை போஸ்டுகளில் இருந்தும். ரம்ப கமெண்ட்ஸ்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில் சொல்ல போனால் இந்த பெயர்ச்சியால் இந்த கிரகம் தான் பாடாய் பட போகிறது. 

இந்த கிரகம் போகிற புது ராசியின் பக்கத்துக்கு ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த கிரகத்தின் உப கிரகங்கள் இந்த கிரகத்தை விட பொல்லாதவை, அதிக வீரியமுள்ளவை. அவை எப்போதும் தான் இருக்கும் வீட்டில் இருந்து பக்கத்துக்கு வீடுகளை பார்க்கும் தன்மை உடையவை ஆதலால் கூடுதல் எச்சரிக்கை அவசியமாகிறது.

வக்கிர காலம் : இந்த அறிவிப்பு வெளியான உடனே கிரக பெயர்ச்சி ஏற்பட்டு விடாது. எனவே, அவ்வப்போது இந்த கிரகம் வக்கிரமாகி மீண்டும் பதிவுலகை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரம் : இந்த கிரகத்தை புகழ்ந்து தினமும் ஆயிரத்தெட்டு கமெண்டுகளால் அர்ச்சித்தால் கிரக தோஷம் நீங்கி அளவற்ற நற்பலன்களை பெறலாம்.


பின் குறிப்பு : ஹி....ஹி.....ஹி... வீடு மாத்த போறோம். அதுக்குதான் இந்த பதிவு.


அனைவருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

வெள்ளி, ஜனவரி 06, 2012

சார்பதிவாளரும், சலியாத மனஉறுதியும்

விஜி : ரமணியுடனான எனது நட்பு love marriage என்றால் விஜினுடனான நட்பு  ஒரு arranged marriage.  என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்த போது "தனியா அவ்வளவு தூரம் வரணும், கொஞ்சம் பார்த்துக்கோங்க மிஸ்!" என்று என் அம்மா புஷ்பா மிஸ்ஸிடம் சொல்ல, அவர்கள் பதிலுக்கு "இதோ இந்த பொண்ணு கூட அந்த ஏரியா லர்ந்து தான் வருது, உங்க பொண்ணை இவ கூட வர சொல்லுங்க." என்றார்.

அதோடு விஜியையும் கூப்பிட்டு, "இனிமே இந்த பொண்ணையும் உன் கூட கூட்டிகிட்டு போ என்ன?" என்றார்.

இப்படியாக, என் அம்மாவும், புஷ்பா மிஸ்ஸும் என்னை விஜியிடம் கை பிடித்து கொடுத்தார்கள். அன்று முதல் ஐந்து வருடங்கள் நானும் விஜியும் ஒன்றாகவே இருந்தோம்.

விஜி கட்டையான,குட்டையான,மாநிறமான ஆனால் நல்ல களையான முகம். ஒரு சாயலில் நடிகை ராதிகா போல் இருப்பாள். "நீ ராதிகா போல் இருக்கிறாய்." என்று யாரவது சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவாள்.

விஜி வறுமையிலேயே வாழ்ந்தவள். அதற்கு மேல் இங்கு எழுதுவது அவளை இழிவுபடுத்தியதாகி விடும். நாங்கள் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்ததால், பதினோராம் வகுப்பிற்கு இருவரும் வேறுவேறு பள்ளிகளில் சேர்ந்தோம்.

பள்ளி கடைசி நாளில் கட்டிபிடித்து அழுவது போன்ற எந்த விதமான உணர்வு பூர்வமான விஷயங்களும் இல்லாமல், இயல்பாகவே பிரிந்தோம்.

விஜி ரொம்ப அழுத்தமானவள். என் வீட்டிற்க்கு இது வரை ஒரே ஒரு முறைதான் வந்திருக்கிறாள். ஆனால்,நான் அடிக்கடி அவள் வீட்டிற்க்கு போவேன். இந்த மானம், ரோசமெல்லாம் நட்பில் கிடையாது.

பின்னர்,இருவரும் வேறு வேறு திசையில் போய் விட்ட போதும் நான் முடிந்த போதெல்லாம் அவள் வீட்டிற்க்கு போய் அவளுடன் தொடர்பில் இருப்பேன்.  வாழ்கையில் மிக பெரிய துயரங்களை சந்தித்தவள் அவள். அவற்றை தாண்டி எப்படி வாழவேண்டும் என்பதை நிகழ் காலத்தில் வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறாள்.

"விஜி, கல்யாணம் பண்ணிக்கோடீ!, நீ நல்லாஇருப்ப." என்று நான் கெஞ்சும் போதெல்லாம் "ப்ச், பார்க்கலாம், என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் நான் வேறு எதை பற்றியுமே யோசிக்கணும்."  என்று சொன்னவள், சொன்னபடியே உழைத்து வறுமையுடன் போராடி வெற்றி கண்டிருக்கிறாள். தன் தங்கைக்கு திருமணத்தை நல்ல விதமாக முடித்து வைத்து விட்டு தானும் ஒரு நல்லவரை பார்த்து திருமாணம் செய்து கொண்டிருக்கிறாள்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன் என் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு புகைப்படம் வந்தது. அதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விஜியின் திருமண புகைப்படமே அது.

இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் நினைக்கலாம். விஜி ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்திருந்தாள். இன்றைய தினம் நான் அதை குறிப்பிட கூடாது என்றாலும் அவளில் தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் எல்லோரும் அறியும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இதை குறிப்பிட்டேன்.


இன்று மார்கழி மாதம் ரோகினி நக்ஷத்திரம் சார் பதிவாளரான ரமணிக்கும், சலியாத மன உறுதி கொண்ட விஜிக்கும் பிறந்தநாள். என் நட்புகளுக்கு நான் செய்யகூடியது எதாவது உண்டென்றால் அது அவர்கள் நல்வாழ்விற்க்காக இறைவனை வேண்டுவதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.


என் அருமை தோழிகளின் பிறந்த நாளுக்காகவே இந்த பதிவு.


                                                          சுபம்

செவ்வாய், ஜனவரி 03, 2012

சார்பதிவாளரும், சலியாத மனஉறுதியும்

ரமணி : ரமணியும் நானும் நட்பானது ஒரு சுவாரசியமான நிகழ்வு. என் மகள் படிக்கும் வகுப்பிலேயே அவர்கள் மகனும் படிக்கிறான். சில வருடங்களுக்கு முன் அவன் இந்த பள்ளியில் சேர்ந்த புதிதில், பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக ஒரு மரத்தடியில் காத்திருப்போம். நான் யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்தேன். அப்போது ரமணி தானாகவே வந்து பழக்கமானார். அப்போது அவரை பற்றி பெரிய அபிப்பிராயம் எதுவும் இல்லை. ஆனால், சிறிது நாட்களிலேயே அவருக்கு ஒரு பள்ளியில் வேலை கிடைத்தது. அங்கு இரண்டு நாட்கள் தான் வேலை பார்த்தார். பின்னர், தாக்கு பிடிக்க முடியாமல் விட்டு விட்டார். ஆனால்,மீண்டும் மரத்தடி மாநாட்டில் அவர் ஆற்றிய உரைதான் அவரை நம்மவர் என்று என்னை எண்ணவைத்தது. 

அந்த இரண்டு நாட்கள் பள்ளி அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட விதம் அலாதியான நகைச்சுவை நிறைந்தது. பின்னர் நாங்கள் இருவரும் இணைந்தாலே அந்த மரத்தடிக்கு ஒரு ஈர்ப்பு வந்து விடும். நாங்கள் இருவரும் பேசுவதை கேட்கவே அந்த மரத்தடியில் ஒரு கூட்டம் கூட ஆரம்பித்தது. அதில் சிலருக்கு பொறாமையும் ஏற்பட்டது. எங்களில் ஒருவர் வரவில்லை என்றாலும், "என்ன உங்க பார்ட்னர் வரலையா?", என்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே தொடர்ந்திருந்தால் அந்த மரத்திற்கு எங்கள் பெயரையே வைத்திருப்பார்கள். ஆனால், அதற்குள் ரமணிக்கு வேறு ஒரு பள்ளியில் வேலை கிடைத்து விட்டதால் எங்கள் நட்பில் சிறு இடைவெளி ஏற்பட்டது. 

அவர் தமிழில் எம்.பில். பட்டம் பெற்றவர் என்பதால் உயர் நிலை வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியை ஆனார். இரண்டு வருடங்கள் வேலை பார்த்தபின் இப்போது மீண்டும் வேலையை விட்டுவிட்டு என்னோடு தான் வெட்டியாக சுற்றிகொண்டிருக்கிறார்.

இப்போதும் அவர் பள்ளி அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும் போது   உண்மையிலேயே அந்த பணியை அவர் எவ்வளவு நேசித்தார் என்பதை உணர முடிகிறது.

"அப்பா ! உங்களுக்கு அந்த வேலைல எவ்வளவு புதிய புதிய அனுபவங்கள் இல்லே ரமணி !?", என்று நான் கேட்டால், "அதுக்கு உங்களுக்கு தாங்க நன்றி சொல்லணும் நீங்க தானே அந்த விளம்பரத்த பார்த்து சொன்னிங்க", என்பார்.

"விளம்பரத்தை பார்த்து தானே சொன்னேன். வேலையே நானா பார்த்துவச்சேன்?" என்பேன்.

இப்போது பதிவெழுத ஆரம்பித்த பின் நாங்கள் சந்தித்து கொள்ளும் போதெல்லாம்  பதிவுலகம் பற்றித்தான் பேசுகிறோம். அவர் பதிவுகளை படிப்பதில்லை என்றாலும் நான் தினமும் நான் எழுதியதை, படித்ததை அவருடன் பகிர்ந்து கொண்டு விடுகிறேன். எனவே, பதிவுலகில் எனக்கு தெரிந்தவர்கள் எல்லோரையும் ரமணிக்கும் தெரியும்.

சென்ற வாரத்தில் ஒருநாள் ரமணிக்கு போன் செய்தேன். "ஏங்க, sub-registrar க்கு தமிழ்ல்ல என்னன்னு சொல்லுவாங்க?"

அவரும் நான் ஏதோ தமிழில் சந்தேகம் கேட்கிறேன் என்று எண்ணிக்கொண்டு "ம்...ம்...ம்...யோசிச்சு சொல்லறேங்க."

நான் உடனே,"சார்பதிவாளர் ன்னு வச்சிக்கலாமா?"

"ஆமாங்க, சார்பதிவாளர் தான் சரி!"

"சரி!, அப்படின்னா இன்னைலருந்து நீங்க சார்பதிவாளர் !"

"என்ன சொல்லறிங்க...!!!!"

"நான் பதிவிடுகிறேன் அதனால் நான் பதிவாளர், நீங்க என் மூலமா பதிவுகளை படிக்கிறீர்கள், கருத்துகளையும் சொல்கிறீர்கள் அதனால் நீங்கள் சார்பதிவாளர்."

"!!!!!!!!!" 

                                                                                                                                       .....தொடரும் 

திங்கள், டிசம்பர் 26, 2011

சித்தமெல்லாம் எனக்கு சித்தா மயமே !

கொஞ்ச வருடங்களாகவே முதுகு வலியும் வலது கை வலியும் என்னை ஒரு கைதியாகவே மாற்றி விட்டிருகின்றன. இதில் பயபடுத்தும் விஷயம் என்னவென்றால், இரவில் தூங்கும்போது கைகள் மரத்து சில்லிட்டு போய் விடும். கொஞ்ச நேரம் நின்றாலும் கால்கள் வலி பின்னி எடுத்து விடும். படுத்தால் மரத்து போய் விடும். இப்படியே வலிகளோடு என் வாழ்க்கை இணைக்கப்பட்டுவிட்டது.

"இவ்வளவு சொல்றியே அதற்கு என்ன சிகிச்சை எடுத்தாய்?" என்கிறீர்களா. நியாயமான கேள்வி தான். ஆனால், நான் பெரிசாய் சிகிச்சை என எதுவும் முயற்சிக்கவே இல்லை (அப்படி ஒத்துக்கோ !).

அதற்கு காரணம் சலித்து போன ஆஸ்புத்திரி வாசமே (அது சரி யாருக்கு தான் ஹாஸ்பிடல் போக பிடிக்கும்).

இந்நிலையில் தான் இங்கு பலரும் தாம்பரத்தில் உள்ள  தேசிய சித்த மருத்துவ கழகத்தில் நல்ல சிகிச்சை தருவதாகவும் தாங்கள்  அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள்.

அப்படி ஒரு நாள் என் தோழி ரமணியிடம் பேசி கொண்டிருந்த போது அவர்கள் கணவரும் அவரும் கூட அங்கு சிகிச்சை பெறுவதாகவும், நல்ல முறையில் குணம் தெரிவதாகவும் கூறினார்கள்.

சரி, நாமும் போய் பார்க்கலாமே என்று தோன்ற, ஒரு நாள் ரமணியுடன் அங்கு சென்றேன்.

உள்ளே நுழையும் போதே நல்ல மூலிகை மணம். அதை சுவாசித்தாலே பாதி நோய் குணமாகி விடும். அரசாங்க மருத்துவமனையா அது !? சுத்தம்,சுத்தம் எங்கும் பளிச்!...பளிச் !

முதல் முதலாய் பதிவு செய்து கொள்ள ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள். 

அறைகளின் பெயர்கள் எல்லாம் அழகு தமிழில் மருத்துவம்,நோய் நாடல் இப்படி.

உள்ளே ஒவ்வொரு அறையிலும் நிறைய மருத்துவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் உள்ளே நுழைந்து ஒரு அழகான, சற்று மாநிறமான, கிராமத்து களை (சித்த மருத்துவத்திற்கு பொருத்தமான முகம்) உள்ள இளம் பெண் டாக்டரை தெரிவு செய்து கொண்டேன்.

அன்பாக ,கனிவாக விசாரிக்கிறார்கள். மிகமுக்கியமாக நல்ல தமிழில் பேசுகிறார்கள்.

என்னம்மா தொந்தரவு?  
இனிப்பு அதிகமா சாப்பிடாதீங்க ! 
இதை சாப்பிடுங்க சுவையா இருக்கும்! 

ஐந்து நாட்களுக்கான மருந்து மட்டும் தான் தருகிறார்கள்.  அதிகமாக கொடுத்தால் சிலர் அவற்றை வெளியில் விற்று விடுகிறார்களாம். ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் போக வேண்டும். எனக்கு அந்த மருந்து ஒத்து கொள்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த மருத்துவ மனை எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் நிச்சயம் குணமாகும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

நான் இந்த பதிவின் தலைப்பை சொன்னவுடன் ரமணி "என்னங்க இன்னும் ஒரு வேளை மருந்து கூட நீங்க சாப்பிடலை அதற்குள் சித்த மருந்திற்கு இவ்வளவு பெரிய விசிறி ஆகிடீங்களே!?" என்றார்.

"மற்ற மருந்துகளை காட்டிலும் இதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது, காரணம் இது இறை நம்பிக்கையோடு தொடர்புடையது என்பது மட்டுமல்ல இங்கு இருக்கும் சுத்தம், இவர்களின் அன்பான கவனிப்பு ஆகியவற்றில் இருக்கும் நம்பிக்கை தான்." என்றேன்.

ரமணியும் அதை ஆமோதித்தார்.

எனக்கு அவர்கள் கொடுத்த குறிப்புக்கள் சிலவற்றை உங்களுக்கு தருகிறேன், உபயோகமாக இருக்கும்.

*சர்க்கரையில் உள்ள வேதி பொருட்கள், நம் எலும்புகளை வலுவிழக்க செய்து விடுமாம். வருட கணக்காய் சர்க்கரை சாப்பிட்டால் முதுகு வலி,கழுத்து வலி எல்லாம் நிச்சயம். எனவே, சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி உபயோகியுங்கள்.

* முளை கட்டிய பயறு தினமும் ஒரு கை பிடி அளவு கட்டாயம் சாப்பிட வேண்டும்.

* புளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்.

* கணினியில் வேலை செய்தால், வேலை முடிந்து எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதுகு வலி, கழுத்து வலிக்காக சிகிச்சை பெறுகிறவர்கள், கட்டாயம் இந்த குறிப்புகளையும் முயன்று பாருங்கள்.

பின் குறிப்பு : சமீபத்தில் bio-technology professor  ஒருவரை சந்தித்தேன். அவர் நம் பாரதத்தில் உள்ளது போல் bio-diversity உலகில் வேறு எங்குமே இல்லை என்றார்.  எத்தனையோ விதமான தாவரங்கள், உயரினங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு தேவையான வேலையை செய்து கொண்டிருகின்றன என்றார். நம் தேசத்தின் பொக்கிஷங்களை நாம் மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். சித்த மருத்துவமும் அப்படியே.



வெள்ளி, டிசம்பர் 02, 2011

இது நம்ம வீட்டு கல்யாணம்

நானும் நிறைய விஷயங்களை பற்றி கதை எழுத வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருக்கிறேன். ஆனால், அதற்குள் எதாவது சுவாரசியமான ஒரு உண்மை நிகழ்வு நடந்து அதை பற்றி எழுதும்படியாகிவிடுகிறது. 

;யாரோ இப்படி சுவாரசியமான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வேண்டுமென்றே என் எழுத்துபணியை தடை செய்து உங்கள் எல்லோரையும் காப்பாற்றி கொண்டிருக்கிறார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

இப்படி, தற்போதைய நிகழ்வு "தம்பி கல்யாணம்". 


தக்குடு மெயிலில் பத்திரிக்கை அனுப்பி அதை பிரித்து படிக்க கூட தெரியாமல் ஒரு நாலு நாட்கள் அல்லாடினேன். பின்னர், எதிர்வீட்டு பையன் தான் சொல்லிகொடுத்தான். 

படித்த பின்னர் தொடங்கி விட்டது என் குழப்பம். ஜனவாசத்துக்கு போறதா ?இல்லை கல்யாணத்துக்கு போறதா? 

இந்த குழப்பம் முப்பதாம் தேதி  மதியம் வரை நீடித்தது. காலையில் அலுவலகம் செல்லும் போதே தலைவர் "எப்போ போகனுங்கரத்தை சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லு, இன்னிக்கு போறதா இருந்தா போன் பண்ணு." என்று வழக்கம் போல் சிம்ம கர்ஜனை செய்து விட்டு சென்றார்.

குழப்பத்தோடு கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் தங்கமணியின் தளத்தில் "தக்குடு கல்யாண வைபோகம்" பதிவு. அதில் தி.ர.ச மாமா எல்லோரும் இரவு ஏழு மணிக்கு சந்திக்கவேண்டும் என்று பின்னுட்டத்தில் மிரட்டி இருந்தார். 

அப்போ குழந்தைகளை எங்கே விட்டுவிட்டு செல்வது? வேறவழி இழுத்துண்டே  போகவேண்டியது தான் என்று முடிவு செய்து செயலில் இறங்கினேன். வழக்கம்போல் எதையும் முன் கூட்டியே திட்டமிடாததால் "டென்ஷன்! டென்ஷன்!".

ரெண்டுத்தையும் டிரஸ் பண்ணி இழுத்துண்டு வந்து ஆட்டோ பிடித்து ஸ்டேஷன் வந்து ட்ரெயின் பிடித்து மாம்பலம் வந்து தலைவருடன் டூ வீலரில் கும்பலாக குமிந்து கொண்டு கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.


கல்யாண மண்டப வாசலில் வைத்து தலைவர் என்னிடம்,"இந்த கல்யாணம் தானா? அட்லீஸ்ட் யாராவது ஒருத்தரையாவது உனக்கு தெரியுமா? எதுவும் பிரச்சனை இல்லையே ?" என்று கேட்டபோது மனதிற்குள் ஒரு பயமும் கூடவே தலைவரை பயப்பட வைத்த திருப்தியும் ஏற்பட்டது.

எதையும் காட்டிக்கொள்ளாது "எல்லாம் எனக்கு தெரியும், பேசாம வாங்க." என்று ரொம்ப தைரியமாய் ஆணை இட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன்.

வாசலில் அழகாய் பூ கோலம் போட்டு இருந்தார்கள். பெண் வீட்டுகார பெண்மணிகள் கையில் சந்தனம்,கும்குமம்,சர்க்கரை,கல்கண்டோடு பெண்களூர் ரோஜா பூவும் கொடுத்து வரவேற்றார்கள்.

நாங்கள் ஏற்கனவே தலையில் பூ வைத்திருந்ததால் அந்த பூவை கையிலேயே வைத்திருந்தேன். பெரியவள்,"ஏம்மா பூவ கைலயே வச்சிண்டிருக்க? பாக்ல வச்சிக்கோயேன்." என்றாள்.

நான்,"பாக்ல வச்சா கசங்கி போய்டுமே, வாசன ரோஜா வாடி போகலாமா?, அதான் கைலயே வச்சிண்டிருகேன்." என்று சொன்னேன்.

 நாங்கள் போய் உட்கார்ந்து கொண்டு மிஸ்டர்,மிஸ்டர்னு (அதான் திரு,திருன்னு) முழிச்சிண்டே இருந்தோம்.

ரொம்ப தவிப்பான கணங்கள் அவை. யாரையுமே தெரியாமல் ஒரு கல்யாணத்துக்கு போக பயங்கர தில் வேணுங்கிறது எனக்கு அப்பதான் புரிஞ்சது.

தலைவர் வேற சும்மா இல்லாம "ஏய் ! அங்க பாரு அந்த மாமி ப்ளாக் ப்ரென்ட் தான் போலிருக்கு, இங்க பாரு இந்த மாமா ப்ளாக் ப்ரென்ட் போலிருக்கு" ன்னு ஒரே தொனப்பல்.

உங்களுக்கு எப்படி தெரியும்னா,அவாளும் நம்மள மாதிரியே முழிச்சிண்டிருக்கா  பாருங்கிறார்.

"என்ன திரு திருன்னு முழிகிரவால்லாம் ப்ளாக் ப்ரெண்ட்ஸ்ஸா?" என்று ஒரு முறை முறைத்த அப்புறம் தான் அடங்கினார்.

அப்புறம் தக்குடு தன் திருமதியோடு மேடையேறினான். இருவரும் மாலை மாற்றி கொண்டார்கள்.

நங்கள் மேடையில் ஏறி அறிமுகபடுத்திகொண்டு போட்டோ எடுத்துக்கொண்டோம்.



கீழே இறங்கி கொஞ்ச தூரம் போனபின்தான் தலைவருக்கு தான் கேமரா கொண்டு வந்த ஞாபகமே வந்தது. பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு போட்டோ எடுத்தார்.  நல்ல உணவு. வழக்கம் போல் சரியாய் சாப்பிடாமல் ரெண்டும்  நன்றாய் படுத்தின. சொல்ல சொல்ல கேட்காமல் ஐஸ் கிரீம் சாப்பிட்டன.

திருப்பியும் பதிவர்களை தேடும் படலம். தக்குடுவோட பெற்றோர், அண்ணா,மன்னி யாரையும் பார்க்காமல் எப்படி திரும்பிப்போவது?

அவன் அண்ணா யார் என்று தெரியவில்லை. அங்கே பார்த்தால் தக்குடு ஜாடையிலேயே ஒருத்தர் நின்னுண்டு இருந்தார். அவரை சுற்றி ஒரே பெண்கள்  கூட்டம். "அவர்தான் தக்குடுவின் அண்ணாவாய் இருக்கும் போய் விசாரியுங்கோ", என்றேன் தலைவரிடம்.

கடைசியில் பார்த்தால் அவர் கசின் பிரதர்ராம். "ஒ....ஒ.... கசின் பிரதருக்கே இவ்வளவு பெண்கள் கூட்டமா....?"

தக்குடுவோட அம்மாவை கண்டுபிடித்து அறிமுகபடுத்தி கொண்டேன். நன்றாய் பழகினார்கள்."ஒ.....தானை தலைவியா நன்னா தெரியுமே...நிறைய சொல்லிருக்கான்." என்றார்கள்.

"ஐயோ, நிறைய சொன்னானா...? என்னன்னு சொன்னானோ....?"

அவர்களே எங்களை அழைத்து போய் பதிவர்களை அறிமுகபடுத்தி வைத்தார்கள். எல்லோரும் ரொம்ப முக்கியமான இடத்தில் இருந்ததால் ஒன்றுமே பேச முடியவில்லை.T.R.C மாமாவும்,  R.V.S சாரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். பாலாஜி வெங்கட்டும்,எல்.கே வும் தனியாக வந்திருந்தார்கள்.


R.V.S சாரை வேங்கடசுப்ரமணியன் என்று T.R.C மாமா அறிமுகபடுத்தி வைத்தார் . இப்போது தான் இந்த பதிவை எழுதும்போது தான்  R.V.S சார்  தான்  வேங்கடசுப்ரமணியன்  என்பது தெரிந்தது (நீ ஒரு டயுப் லைட் என்று யாருங்க கமெண்ட் அடிக்கறது).

நாங்கள் எங்கள் கிராமத்துக்கு திரும்ப வேண்டி இருந்ததால் அவர்கள் சாப்பிட்டு விட்டு வரும்வரை காத்திருக்க முடியவில்லை. இதற்கே சின்னவள் சாமியாட ஆரம்பித்து விட்டாள்.

இங்கு முக்கியமான ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். அது தான் அங்கு நடந்த பஜனை கச்சேரி. அடாடாடாட.....அந்த மாமிக்கு என்ன ஒரு சாரிரம்.   அதையும் ஒரு மாமா ரசித்து தாளம் போட்டு கொண்டிருந்தார். அனேகமாக அவர் அவருடைய ஹியரிங் எய்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்திருப்பார் என்று நினைக்கிறன்.

தலைவர் வேற, "ஐயோ....!அந்த மாமிக்கு யாராவது ஐஸ் கிரீம் ஒரு நாலு குடுங்கோளேன். அதையும் ஒரு நாலு நாள் முன்னாடியே செஞ்சிருக்கணும்.அதோட பனிலையும் பத்து தரம் அலைய விட்டிருக்கணும்." என்று கமெண்ட் அடித்தார்.

முதல் பதிவர் சந்திப்பே மங்களகரமாய் கல்யாணத்தில் நடந்தது மகிழ்ச்சியாய் இருந்தது.

புதன், நவம்பர் 16, 2011

தங்கச்சி பாப்பா பிறந்தநாள் (நவம்பர் 19)





"ஐயோ பாவம் நீ !, பேர்சொல்ல உனக்கு ஒரு ஆண்வாரிசு இல்லையே?"

நான் மனதிற்குள் :  "இங்கே எனக்கு என்ன சாம்ராஜ்ஜியமா இருக்கிறது , அடுத்த  பட்டத்திற்கு இளவரசன்  இல்லாமல் தவிப்பதற்கு?"

"பையன் தான் வச்சு சோறு போடுவான்."

நான் மனதிற்குள் :      "நான் என்ன நாயா..? பூனையா...? என்னை வச்சு ஒருத்தர் சோறுபோட.இல்ல எல்லா பையன்களும் அவங்க அவங்க அப்பா அம்மாவ வச்சு சோறு போட்டுகிட்டு தான்  இருக்காங்களா?"

"உனக்கு ஆம்பள பையன் இல்லையே யாரு கொள்ளி போடுவா? யாரு கர்மா பண்ணுவா?" பாவம் பண்ணினவங்களுக்கு தான் கர்மா பண்ண புள்ளைல்லாம இருக்குமாம். ஏதோ ஒரு புஸ்தகத்துல படிச்சேன்."

நான் மனதிற்குள் : அந்த கவலை உங்களுக்கெதற்கு? என் பாவத்தையும் புண்ணியத்தையும் கணக்கு பண்ண நீங்கள் என்ன சித்ரகுப்தனா? பையன் இருக்கிரவங்களுக்குமே அவங்க செத்ததுக்கப்புறம், யாரு கொள்ளி போடறங்கன்னு  தெரியாது. அதைப்பற்றி எனகென்ன கவலை."


இதை யாரும் தயவு செய்து கற்பனை என்று எண்ணி விட வேண்டாம். இப்படியெல்லாம் அடுத்தவர் மனதை புண்படுத்துவதற்காகவே பேசுபவர்கள்  இன்னமும் நிறையவே இருக்கிறார்கள். நான் அவர்கள் பேசுவதை இப்போதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.


"குழந்தை பெறுவதில் அல்லது ஆண் குழந்தை பெற்றதில் உங்கள் சாதனை என்ன?" என்று கேட்கவேண்டும் என்று நினைப்பேன் .ஆனால், இவர்களுடன் விவாதம் செய்வதை விட இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்து விட்டேன்.

என்னிலை எவ்வளவோ மேல். இளம் விதவையான ஒரு தோழியும், குழந்தை இல்லாத ஒரு தோழியும் படும் அவமானங்கள் வார்த்தையால் விவரிக்க முடியாதவை.

அவர்கள் தங்கள் நிலையை என்னிடம் சொல்லி வருந்திய  போது அவர்களிடம் நான் கேட்ட கேள்வி இது தான்," உங்களுக்கு ஜான்சி ராணி லக்ஷ்மி பாயை தெரியுமா?"

"தெரியும்"

"யார்?"

"சுதந்திர போரட்ட வீராங்கனை."

"அப்படியானால் ஜான்சி ராணி என்றதும் உங்களுக்கு என்ன நினைவிற்கு வருகிறது?"

"அவர்களின் வீரமும், தேச பக்தியும்."

"அவர்களுக்கு குழந்தை இல்லை(ஒரு மகன் பிறந்து சிறிது நாட்களிலேயே இறந்து விட்டது) என்பதும், அவர்கள் விதவை என்பதும் நினைவிற்கு வரவில்லையல்லவா?"

"!!!!!!!!!!"

நாம், நம் செயல்களினாலேயே அறியபடுகிறோம். நம் பாக்யங்களினால் அல்ல .

வாழ்கையில் உருப்படியாய் ஏதும் சாதிக்காதவர்கள் தான், தன் பாக்யங்களையே தன் சாதனைகள் போல் காட்டிகொள்வார்கள்.

ஜான்சி ராணி காசியில் ஒரு அந்தண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இளம் வயதிலேயே போர் கலைகள் பயிற்சி மற்றும் கல்வியறிவும் பெற்றிருந்தார். ஜான்சியின் மகாராஜா கங்காதர் ராவ் லக்ஷ்மி பாயை அவர் வீரம், அறிவு, அழகு,குணம் ஆகியவற்றை விரும்பியே மணந்தார்.

ராணி லக்ஷ்மி பாயின் இயற்பெயர் மணிகர்ணிகா, செல்லமாக மனு. மனுவிற்கு ராஜா கங்காதர் ராவ்வுடன் திருமணம் நடந்த போது அவர் பதிமூன்று வயது குட்டி பெண் (இந்த காலமாக இருந்தால் அம்மா கட்டிகொடுக்கும் லஞ்ச்சை எடுத்து கொண்டு ஸ்கூல் போகும். ஏழாவதோ, எட்டாவதோ படித்து கொண்டிருந்திருப்பார்). 

ஆனால், மனு குட்டி அந்த வயதிலேயே ஒரு ராஜ்ஜியத்தின் மகாராணி பொறுப்பை ஏற்றார். 


சொத்திற்காக புகுந்த வீட்டில் கலகம் செய்யும்  பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், ராணி லக்ஷ்மி பாயோ தன் கணவரின் ராஜ்யதுக்காக அந்நியர்களுடன் தான் போர் புரிந்தார், குடும்பத்துக்குள் அல்ல.

மகாராஜா கங்காதர் ராவ் இறந்த பின் ஜான்சி மக்களை தன் சொந்த குழந்தைகளை போலவும், ஜான்சியை தன் உயரினும் மேலாகவும் காத்தார் என்பது வரலாறு சொல்லும் செய்தி.

அந்த  காலத்தில், கணவன் இறந்து விட்டால் உடன் கட்டை ஏறுவார்கள். இந்த காலத்தில் பிறந்த வீட்டிற்கு போய் விடுவார்கள். ஆனால், லக்ஷ்மி பாயோ தன் கணவரின் விருப்பப்படி அவர்கள் ச்விகார  புத்திரனை அரியணையில் அமர்த்தினார். அதற்கு எதிர்ப்பு வந்த போது மகனை முதுகில் சுமந்தபடி போர்களத்தில் பாய்ந்தார்.

பெற்ற குழந்தையையே ஆயாவிடம் விட்டு செல்லும் பெண்களும் உண்டு. ராணி நினைத்திருந்தால் யாராவது தாதியிடம் குழந்தையை விட்டு விட்டு போருக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

மகாராணி லக்ஷ்மி பாய் இந்த உலகத்தில் வெறும் இருபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்(இளம் பெண்). அவரை விட இரண்டு மூன்று மடங்கு அதிக வருடங்கள் வாழ்ந்து எத்தனை பேர் சாமானியர்களாகவே மடிகிறோம்.

இதுபோன்ற தலைமை பண்புகள் இயல்பிலேயே அமைய பெற்ற மகாராணி லக்ஷ்மி பாயை என் ஆதர்ச தலைவியாக எண்ணுகிறேன். 

எனவே, நம்  பாக்கியங்களை குறித்து நினைக்காமல், நம் செயல்களை திருத்திக்கொண்டு, நம் வாழ்க்கையை பயனுள்ளதாக ஆகிக்கொள்ளவேண்டும்.

" வாழ்பவர் கோடி, மறைபவர் கோடி 
 மக்களின் மனதில் நிற்பவர் யார் ?"

"மாபெரும் வீரர், மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்."




                                               *************************




டெயில் பீஸ் : தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு. 

என் பெரியவளிடம் "நவம்பர் 19 உன் தங்கச்சி பிறந்த நாள்" என்று சொன்னால். 

"ஜான்சி ராணிக்கும் அன்றைக்கு தான் பிறந்த நாள்" என்று சட்டேன்று சொல்லுவாள். 

"சபாஷ் மகளே !"


செவ்வாய், நவம்பர் 01, 2011

லக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி 3

மேடையில் பல விதமான லக்ஷ்மி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. க்ருஹ லக்ஷ்மி, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமன் காலடியில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி,விநாயகருடன் கூடிய லக்ஷ்மி, ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தில் சீதையாக உள்ள லக்ஷ்மி இப்படி பல விதமான லக்ஷ்மிகள்.

எனக்கு பாற்கடலில் இருந்து கற்பக விருக்ஷம், காமதேனு, தன்வந்திரி, சந்திரன் முதலியரோடு ஆவிர்பவித்து வரும் லக்ஷ்மி, பூஜை செய்ய கொடுக்கப்பட்டது. சந்நிதிக்கு நேரே உட்கார வைக்கப்பட்டேன். எனக்கு ரொம்ப குற்ற உணர்வாக இருந்தது. "நான் தான் இதையெல்லாம் கேலி செய்தேனே ! என்னையே பூஜை செய்ய வைத்து, இதென்ன விளையாட்டடி ?" என்று கேட்டேன்.

"இதென்ன, இனிமேல் தான் இருக்கிறது பார் !" என்று அவள் முடிவு செய்திருக்க, அதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

பூஜை தொடங்கியது. அவரவர் லக்ஷ்மிக்கு உபசாரங்கள் குருக்கள் சொல்ல சொல்ல செய்ய ஆரம்பித்தோம். நான் லக்ஷ்மிக்கு ஒவ்வொரு முறை சேவை செய்யும் போதும் முன்னால் இருக்கும் தன்வந்திரி பகவான் ஆட ஆரம்பித்தார். "அட ! இதென்னடா வம்பாய் போய்விட்டதே ! யாருக்கோ பத்திரமாய் திருப்பி தரவேண்டிய மூர்த்தி இப்படி ஆடுகிறதே ! உடைந்துவிட்டால் என்ன செய்வது !"   என்று என்னை கவலை பிடித்து கொண்டது. நான் தன்வந்திரியை பிடித்து கொண்டேன். ஒரு கையால் தன்வந்திரியை பிடித்து கொண்டே பூஜையை தொடர்ந்தேன். ஒருவேளை நம்ம health ஆட்டம் காண்ணறது என்பதை தான் இவர் symbolic ஆ சொல்றாரோ என்று கூட தோன்றியது.

லக்ஷ்மி அஷ்டோத்தரம்,கனகதாரா ஸ்தோத்ரம் எல்லாம் சொல்லி பூஜை நடந்தது. பூஜையின் நடுவில் சற்றே திரும்பி பார்த்தேன். கூட்டம் கூட்டமாய் மக்கள். மக்களுக்கும் மேடைக்கும் நடுவில் ஒரு கயறு கட்டி விட்டிருந்தார்கள். என் சின்ன பெண், "அம்மாவிடம் போவேன்", என்று என் அம்மாவை படுத்திகொண்டிருந்தாள்.

ஒருவழியாய் பூஜை நல்ல படியாய் முடிந்தது. அங்கு பிரசாதமாக பச்சை குங்குமம்,பச்சை ப்ளௌஸ்  பிட்,பச்சை கேசரி,மஞ்சள்,திருமாங்கல்ய சரடு முதலானவை வைக்கபட்டிருந்தன. அவற்றை எங்களையே எடுத்து கொள்ள சொன்னார்கள். 

பின்னர், பூஜை செய்தவர்கள் அவரவர் மூர்த்தங்களை எடுத்து கொண்டு சந்நிதிக்கு வந்து பிரசாதம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றார்கள். நாங்கள் பூஜை மட்டும் தானே செய்தோம் அதனால் உபயதரர்களே அவரவர் லக்ஷ்மியை எடுத்துக்கொண்டு சென்று பிரசாதம் வாங்கிகொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்.

முடிவில் டான்ஸ் ஸ்கூல் குழந்தைகளும் நாங்களும் அழைக்கப்பட்டோம். குழந்தைகள் அனைவரையும் வரிசையாக நின்று குரு வணக்கம் செய்ய சொன்னார்கள். குழந்தைகளும் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் சிறு மலர் சரம் சூட்டி ஒரு குபேரன் பொம்மை (நான் கேலி செய்தேனே ! அதே தான் ) பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயம் கொடுத்தார்கள்.

பின்னர், டான்ஸ் டீச்சரை கர்ப்ப கிருஹதிற்குள் அழைத்தார்கள். டீச்சரும் ஏறி நின்றார். பின்னர், கூட்டத்தில் குருக்கள் கண்களால் துழாவினார். அவர் பார்வை என்மேல் நின்றது. என்னை கை காட்டி,"நீங்க வாங்க !" என்றார்.

நானும், "சரி, டீச்சர் பெண் என்பதால் ஆண்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்ய முடியாது. அதனால், அவருக்கு மாலை போட நம்மை அழைக்கிறார்கள் போலிருக்கிறது." என்று எண்ணியபடியே மேலேறினேன்.

நான் மேலேறி நின்றதும் டீச்சரிடம்,"இவங்க தானே உங்களுக்கு அடுத்தபடி (assistant) !?" என்றார் குருக்கள். நான் திரு திருவென விழிக்க டீச்சரோ சட்டேன்று ,"ஆமாம்!" என்றுவிட்டார்.

நான்,"என்ன மிஸ்.....!?" என்று அதிர்ச்சியோடு நோக்க, அவரோ என்னை "எல்லாம் சரிதான் !" என்பது போல் பார்வையாலேயே கையமர்த்தினார். 

டீச்சருக்கு ஒரு ஒண்ணரையடி லக்ஷ்மி பொம்மையும்,குபேரன் பொம்மையும், பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயமும் தந்தார்கள்.

அடுத்ததாக எனக்கும் அதேபோல் ஒண்ணரையடி லக்ஷ்மி பொம்மையும்,குபேரன் பொம்மையும், பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயமும் தந்தார்கள்.

எல்லோரும், "உங்களுக்கு அதிர்ஷ்டம் ! " என்றார்கள்.

குழந்தைகள், "அந்த அம்பாள தாம்மா! கொஞ்சம் கொஞ்சிட்டு தரோம் !" என்றார்கள்.

"ம்ம்ம்... நான் பணம் கொடுத்து குபேரன் பொம்மை வாங்கினேன். இவள் என்னை கிண்டல் செய்தாள்,இவளுக்கு பணம் தராமலே, மூன்று குபேரன்,லக்ஷ்மி எல்லாம் கிடைச்சிருக்கு." என்று என் அம்மா எல்லோரிடமும் சொன்னார்கள்.


வீட்டிற்கு வந்து ஆரத்தி எடுத்து கொலுவில் வைத்தோம். எந்த குபேரன் பொம்மையை என் அம்மா வாங்கியதை கேலி செய்தேனோ அதே குபேரன் பொம்மை எனக்கும், குழந்தைகளுக்கும் ஆளுக்கொன்றாய் மூன்று வந்து வீட்டில் உட்கார்ந்திருக்கின்றனர்.

லக்ஷ்மி பொம்மையை கொலு பொம்மைகள் வைக்கும் பெட்டிக்குள் வைத்து மேலே வைக்க முயற்சி செய்தேன், முடியவில்லை. தனியாக ஒரு அட்டை பெட்டி கடையில் இருந்து வாங்கிவந்தேன். அதனுள்ளும் வைக்க முடியாமல் பெரியதாக இருப்பதால், என்னை தினமும் கேலி செய்து கொண்டு என் கண்ணெதிரிலேயே ஹால்லில் இருக்கிறாள் என் ச்வீகார புத்ரி.


ச்வீகார புத்ரி 

அடுத்தவருடம் இவள் உயரத்திற்கு தகுந்தார் போல ஒரு மகாவிஷ்ணுவை வாங்கி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தலைவரிடம் கூறியிருக்கிறேன். 

 பின்னே, பெண்ணை பெற்றுவிட்டால் பொறுப்பு வேண்டாமா !?

"வருந்தி அழைத்தாலும் வாராது, வாரா !
பொருந்துமெனில் போமினேன்றால் போகா"


சிறுவயதில் செல்வத்தை பற்றி படித்தது நினைவிற்கு வந்தது.

மூன்று குபேரர்கள்



அது சரி, சகோதர சகோதரிகளே! நீங்கள் சொல்லுங்கள், எல்லோரும் "உங்களுக்கு அதிர்ஷ்டம்! உங்களுக்கு அதிர்ஷ்டம்!" என்றார்களே. எனக்கு என்ன கிடைத்தது "அருளா?" "பொருளா?"