திங்கள், ஏப்ரல் 23, 2012

ஆட்டோ கிராப் - பிரபலமாகாத ஒரு பிரபலத்துடன் ஓர் சந்திப்பு.

பேட்டியாளர் : வணக்கம்.

 பிரபலம் : வணக்கம்.

பேட்டியாளர் : நீங்கள் இன்னமும் பிரபலமாகவில்லையே உங்களை போய்                   பேட்டி காண சொல்லி உள்ளார்களே என்று எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.

பிரபலம் : அப்படியெல்லாம் சொல்லகூடாது. இந்த பேட்டிக்கு பின் நான் பிரபலமாகிவிட்டு போகிறேன்.

பேட்டியாளர் : சரி ! நீங்கள் பிறந்த இடம்.

பிரபலம் : சிங்கார சென்னையில் ஒரு பிரபலமான அரசு மருத்துவமனையில்.

பேட்டியாளர் : உங்கள் பிறந்த தேதி.

பிரபலம் : அது என்ன காந்தி ஜெயந்தியா ! அத நீங்க தெரிஞ்சுகிட்டு என்ன ஆக போகுது. 

 பேட்டியாளர் : உங்கள் உடன் பிறந்தவர்கள் ?

பிரபலம் : அவங்கல்லாம் என் கூட எங்க பிறந்தாங்க?, உஷாரா என்ன முன்னாடி விட்டுட்டு எல்லோரும் பின்னாடி இல்ல பிறந்தாங்க.

பேட்டியாளர் : உங்கள் கல்வி தகுதி

பிரபலம் : காமராஜர் என்ன படிச்சாரா. அவர் முதலமைச்சர் ஆகல?

பேட்டியாளர் : இந்த கேள்விக்கு இது பதில் இல்லையே?

பிரபலம் : பின்ன, நான் ரொம்ப படிக்கலைங்கிரத என் வாயாலையே சொல்லவைக்க நீங்க முயற்சி பண்ணினா...இப்படித்தான் பதில் வரும்.

பேட்டியாளர் : உங்கள் வாழ்க்கை துணையை பற்றி...?

பிரபலம் : எங்கிருந்தோ வந்தான்,இடை ஜாதி நான் என்றான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.

பேட்டியாளர் : உங்கள் பிள்ளைகள் பற்றி....?

பிரபலம் : இப்போதான் பரிட்சை எழுதி கிட்டிருக்கேன். இன்னும் பல வருடங்கள் கழித்து தான் தெரியும் நான் பாஸா, பெய்லா என்பது.

பேட்டியாளர் : உங்களுக்கு பிடித்த உணவு.

பிரபலம் : சைவ உணவு.

பேட்டியாளர் : நீங்கள் கவலைப்படுவது?

பிரபலம் : என் உடல் நிலை குறித்து.

பேட்டியாளர் : நீங்கள் கவலைப்படாதது?

பிரபலம் : என் நிதி நிலை குறித்து.

பேட்டியாளர் : நீங்கள் பெருமை படுவது ?

பிரபலம் : இந்திய பெண்ணாய் பிறந்ததற்கு.

பேட்டியாளர் : நீங்கள் வருத்த படுவது?

பிரபலம் : அதிகம் படிக்க முடியாமல் போனதற்கு.

பேட்டியாளர் : உங்கள் பலம்?

பிரபலம் : சலியாத மனம்.

பேட்டியாளர் : உங்கள் பலவீனம்?

பிரபலம் : சோம்பேறித்தனம்.

பேட்டியாளர் : உங்கள் சாதனை என்று நீங்கள் நம்புவது?

பிரபலம் : சுற்றி இருப்பவர்கள் என்னிடம் பல திறமைகள் இருப்பதாக நம்பும்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருப்பது.

பேட்டியாளர் : சமீபத்திய சாதனை?

பிரபலம் : மேல் சொன்ன விஷயத்தையே உலகளாவிய முறையில் செய்து கொண்டிருப்பது. 

 பேட்டியாளர் : உங்களுக்கு பிடித்த உடை?

பிரபலம் : என்னை இளமையாய் காட்ட கூடிய உடை(அதை இன்னமும் நான் கண்டுபிடிக்க வில்லை).

பேட்டியாளர் : இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்வது?

பிரபலம் : உங்களை யாரவது பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்க்காமல், உங்களை நீங்களே பாராட்டி உற்சாகபடுத்தி கொள்ளுங்கள்.

பேட்டியாளர் : பெரியவர்களுக்கு நீங்கள் சொல்வது?

பிரபலம் : "உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல", என்று இளையவர்களை பார்த்து சொல்லும் முன் உங்களுக்கு அது இருக்கிறதா என்று ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள். 

 பேட்டியாளர் : பெண்களுக்கு நீங்கள் சொல்வது ?

பிரபலம் : தன்னம்பிக்கைக்கும், கர்வத்திற்கும் வித்தியாசம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள். 

 பேட்டியாளர் : ஆண்களுக்கு நீங்கள் சொல்வது?

பிரபலம் : பெண்கள் புத்திசாலிகளாய் இருப்பதை நினைத்து பயப்படாதீர்கள். நீங்கள் அவர்களை பயன்படுத்தி கொள்ளும் சாமர்த்தியசாலிகளாய் இருப்பதை நினைத்து சந்தோஷ படுங்கள். 

 பேட்டியாளர் : உங்கள் அடுத்த திட்டம்?

பிரபலம் : உருப்படியாய் எதாவது எழுதி கிழிக்க வேண்டும்.

பேட்டியாளர் : உங்கள் நீண்ட கால திட்டம் ?

பிரபலம் : நாட்டிற்கு எதாவது உருப்படியாய் செய்ய வேண்டும்.

பேட்டியாளர் : இப்போது கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள்?

பிரபலம் : "உண்மையிலே நீங்கள் தான் கடவுளா?" என்று கேட்பேன். (பின்ன, என்னமாதிரி ஆசாமிங்களுக்கே காட்சி கொடுக்கிறார்ன்னா சந்தேகம் வராதா?)

பேட்டியாளர் : கடைசியாக ஒரு கேள்வி, நட்பு பற்றி உங்கள் கருத்து?

பிரபலம் : அது பயன் கருதாமல் வருவது,கலப்படம் இல்லாதது.

பேட்டியாளர் : உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி, 
பேட்டியளித்தமைக்கு மிக்க நன்றி.வணக்கம்.

பிரபலம் : இது ஒன்னும் பெரிய விஷயமில்ல, எப்பவுமே நான் இப்படித்தான் நேரத்தை வெட்டியா வீணாக்கிக்கிட்டு இருப்பேன்.

இந்த பிரபலம் வேறு யாருமல்ல, இந்த தளத்தின் ஆசிரியர் தான். இந்த தளம் தொடங்கி ஒரு வருடமாவதை(April 1 ஆம் தேதியோடு) கொண்டாடும் வகையில் இந்த உரையாடல் வெளியிடப்படுகிறது.

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

வந்தேன் ! வந்தேன் ! மீண்டும் நானே வந்தேன் !

அப்பாடி ! ஒரு வழியா வீட்டை மாத்தி, பசங்க பரிட்சை முடிஞ்சு, தம்பி நிச்சயதார்த்தம் முடிஞ்சு சீக்கிரமாஆஆஆஆஆஆஆஆஆஆ வந்துட்டேன் இல்ல !? 

கடைசியா நான் எழுதின ஜோதிட பதிவு யாருக்குமே புரியலைன்னு நினைக்கிறேன்.தங்கமணி எழுதிய accounts கவிதை மாதிரி ஆகிவிட்டது. 

என் தம்பி கூட "என்ன ராகு,கேது பெயர்ச்சி அது இதுன்னு என்னமோ தத்து பித்துன்னு எழுதி வச்சிருக்க!?" என்று கடுமையாக விமர்சித்தான். 

பின்னர் நான் விளக்கி சொல்லிய பின்தான் அவனுக்கும் புரிந்தது. "அதனால இப்போ என்ன பண்ணபோற....?" என்று நீங்கள் பயத்தோடு கேட்பது புரிகிறது. ஆமாம், அதே தான், ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை எழுதலாம் என்று ஒரு எண்ணம்.

இதனால் என்னை ஒரு தேர்ந்த ஜோதிடர் என்று நீங்கள் எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். என் ஜோதிட அறிவு நான் படித்த ஜோதிட, ஆன்மீக இதழ் களில் இருந்து பெற்ற தகவல்களின் தொகுப்பே. நான் ஜோதிடத்தை பற்றி எழுதுவது என்பது, மருத்துவ கல்லூரி வாசலில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணி திடீரென்று கல்லூரியின்னுள் சென்று பாடம் நடத்துவது போல்தான்.

இருந்தாலும் அடிப்படையான விஷயங்களை யார்வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதால் தைரியமாக அடுத்த பதிவில் இருந்து துவங்கலாம் என்று இருக்கிறேன்.

ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை அதை பார்த்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை போய் விடும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஜோதிடத்தை சரியாக தெரிந்து கொள்ளாததே இதற்கு காரணமாகும்.

அதனால் அடுத்த பதிவில் உங்களுக்கு "கெரகம்" புடிக்கும் என்பதை இப்போதே கணித்து சொல்கிறேன்.

வியாழன், ஜனவரி 12, 2012

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்களுக்கான பதிவு)


"இது சனி பெயர்ச்சியா தானே இருக்க முடியும் !? எப்படி ராகு-கேது பெயர்ச்சியாச்சு!?"ன்னு நீங்க யோசிக்கலாம். வாஸ்தவம் தான் இந்த க்ரஹமும் சனி அத்தனைக்கு பொல்லாதது தான். ஆனால் சனிக்கு மகரம், கும்பம்னு இரண்டு சொந்த வீடுங்க இருக்கே. இந்த க்ரஹதுக்கு சொந்தமா ஒரு வீடும் கிடையாது. அது மட்டுமில்லாம இந்த கிரஹத்தோட ஜோடி கிரஹமும் இதுவும் எப்பவும் எதிர் எதிர் திசையில தான் இருக்கும்,யோசிக்கும்,செய்யும். அதனால இந்த கிரஹத்த ராகுனும் இதன் ஜோடி கிரஹத்த கேதுனும் வச்சிக்கலாம்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியானது இந்த மாச கடைசில நிகழ போகிறது. ரொம்ப வருசத்துக்கு பிறகு நடக்கிற ஒரு அதிசய வானவியல் நிகழ்வுங்கிறதால இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

பலன்கள் : இந்த கிரக  பெயர்ச்சியினால பதிவுலகத்துக்கு மகத்தான நற்பலன்கள் ஏற்பட போகின்றது. எப்படியும் இந்த கிரகம் அடுத்த வீட்டுக்கு போய் அந்த பலன்களை தரத்துக்கு ஒரு மாசமாவது ஆகுமே! பின்ன, போன் கனெக்சன் மாத்தி நெட் கனெக்சன் திரும்பவந்து, அங்க சாமான்களை எல்லாம் அரேஞ்சு பண்ணி செட்டில் ஆகிட்டு அப்புறமா தானே மற்றவர்களை படுத்துவதை பற்றி யோசிக்க முடியும். ஆக, இந்த பெயர்ச்சியினால் பதிவுலக மக்கள் அனைவருக்கும்  மொக்கை போஸ்டுகளில் இருந்தும். ரம்ப கமெண்ட்ஸ்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில் சொல்ல போனால் இந்த பெயர்ச்சியால் இந்த கிரகம் தான் பாடாய் பட போகிறது. 

இந்த கிரகம் போகிற புது ராசியின் பக்கத்துக்கு ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த கிரகத்தின் உப கிரகங்கள் இந்த கிரகத்தை விட பொல்லாதவை, அதிக வீரியமுள்ளவை. அவை எப்போதும் தான் இருக்கும் வீட்டில் இருந்து பக்கத்துக்கு வீடுகளை பார்க்கும் தன்மை உடையவை ஆதலால் கூடுதல் எச்சரிக்கை அவசியமாகிறது.

வக்கிர காலம் : இந்த அறிவிப்பு வெளியான உடனே கிரக பெயர்ச்சி ஏற்பட்டு விடாது. எனவே, அவ்வப்போது இந்த கிரகம் வக்கிரமாகி மீண்டும் பதிவுலகை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரம் : இந்த கிரகத்தை புகழ்ந்து தினமும் ஆயிரத்தெட்டு கமெண்டுகளால் அர்ச்சித்தால் கிரக தோஷம் நீங்கி அளவற்ற நற்பலன்களை பெறலாம்.


பின் குறிப்பு : ஹி....ஹி.....ஹி... வீடு மாத்த போறோம். அதுக்குதான் இந்த பதிவு.


அனைவருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

வெள்ளி, ஜனவரி 06, 2012

சார்பதிவாளரும், சலியாத மனஉறுதியும்

விஜி : ரமணியுடனான எனது நட்பு love marriage என்றால் விஜினுடனான நட்பு  ஒரு arranged marriage.  என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்த போது "தனியா அவ்வளவு தூரம் வரணும், கொஞ்சம் பார்த்துக்கோங்க மிஸ்!" என்று என் அம்மா புஷ்பா மிஸ்ஸிடம் சொல்ல, அவர்கள் பதிலுக்கு "இதோ இந்த பொண்ணு கூட அந்த ஏரியா லர்ந்து தான் வருது, உங்க பொண்ணை இவ கூட வர சொல்லுங்க." என்றார்.

அதோடு விஜியையும் கூப்பிட்டு, "இனிமே இந்த பொண்ணையும் உன் கூட கூட்டிகிட்டு போ என்ன?" என்றார்.

இப்படியாக, என் அம்மாவும், புஷ்பா மிஸ்ஸும் என்னை விஜியிடம் கை பிடித்து கொடுத்தார்கள். அன்று முதல் ஐந்து வருடங்கள் நானும் விஜியும் ஒன்றாகவே இருந்தோம்.

விஜி கட்டையான,குட்டையான,மாநிறமான ஆனால் நல்ல களையான முகம். ஒரு சாயலில் நடிகை ராதிகா போல் இருப்பாள். "நீ ராதிகா போல் இருக்கிறாய்." என்று யாரவது சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவாள்.

விஜி வறுமையிலேயே வாழ்ந்தவள். அதற்கு மேல் இங்கு எழுதுவது அவளை இழிவுபடுத்தியதாகி விடும். நாங்கள் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்ததால், பதினோராம் வகுப்பிற்கு இருவரும் வேறுவேறு பள்ளிகளில் சேர்ந்தோம்.

பள்ளி கடைசி நாளில் கட்டிபிடித்து அழுவது போன்ற எந்த விதமான உணர்வு பூர்வமான விஷயங்களும் இல்லாமல், இயல்பாகவே பிரிந்தோம்.

விஜி ரொம்ப அழுத்தமானவள். என் வீட்டிற்க்கு இது வரை ஒரே ஒரு முறைதான் வந்திருக்கிறாள். ஆனால்,நான் அடிக்கடி அவள் வீட்டிற்க்கு போவேன். இந்த மானம், ரோசமெல்லாம் நட்பில் கிடையாது.

பின்னர்,இருவரும் வேறு வேறு திசையில் போய் விட்ட போதும் நான் முடிந்த போதெல்லாம் அவள் வீட்டிற்க்கு போய் அவளுடன் தொடர்பில் இருப்பேன்.  வாழ்கையில் மிக பெரிய துயரங்களை சந்தித்தவள் அவள். அவற்றை தாண்டி எப்படி வாழவேண்டும் என்பதை நிகழ் காலத்தில் வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறாள்.

"விஜி, கல்யாணம் பண்ணிக்கோடீ!, நீ நல்லாஇருப்ப." என்று நான் கெஞ்சும் போதெல்லாம் "ப்ச், பார்க்கலாம், என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் நான் வேறு எதை பற்றியுமே யோசிக்கணும்."  என்று சொன்னவள், சொன்னபடியே உழைத்து வறுமையுடன் போராடி வெற்றி கண்டிருக்கிறாள். தன் தங்கைக்கு திருமணத்தை நல்ல விதமாக முடித்து வைத்து விட்டு தானும் ஒரு நல்லவரை பார்த்து திருமாணம் செய்து கொண்டிருக்கிறாள்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன் என் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு புகைப்படம் வந்தது. அதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விஜியின் திருமண புகைப்படமே அது.

இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் நினைக்கலாம். விஜி ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்திருந்தாள். இன்றைய தினம் நான் அதை குறிப்பிட கூடாது என்றாலும் அவளில் தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் எல்லோரும் அறியும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இதை குறிப்பிட்டேன்.


இன்று மார்கழி மாதம் ரோகினி நக்ஷத்திரம் சார் பதிவாளரான ரமணிக்கும், சலியாத மன உறுதி கொண்ட விஜிக்கும் பிறந்தநாள். என் நட்புகளுக்கு நான் செய்யகூடியது எதாவது உண்டென்றால் அது அவர்கள் நல்வாழ்விற்க்காக இறைவனை வேண்டுவதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.


என் அருமை தோழிகளின் பிறந்த நாளுக்காகவே இந்த பதிவு.


                                                          சுபம்

செவ்வாய், ஜனவரி 03, 2012

சார்பதிவாளரும், சலியாத மனஉறுதியும்

ரமணி : ரமணியும் நானும் நட்பானது ஒரு சுவாரசியமான நிகழ்வு. என் மகள் படிக்கும் வகுப்பிலேயே அவர்கள் மகனும் படிக்கிறான். சில வருடங்களுக்கு முன் அவன் இந்த பள்ளியில் சேர்ந்த புதிதில், பெற்றோர் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக ஒரு மரத்தடியில் காத்திருப்போம். நான் யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்தேன். அப்போது ரமணி தானாகவே வந்து பழக்கமானார். அப்போது அவரை பற்றி பெரிய அபிப்பிராயம் எதுவும் இல்லை. ஆனால், சிறிது நாட்களிலேயே அவருக்கு ஒரு பள்ளியில் வேலை கிடைத்தது. அங்கு இரண்டு நாட்கள் தான் வேலை பார்த்தார். பின்னர், தாக்கு பிடிக்க முடியாமல் விட்டு விட்டார். ஆனால்,மீண்டும் மரத்தடி மாநாட்டில் அவர் ஆற்றிய உரைதான் அவரை நம்மவர் என்று என்னை எண்ணவைத்தது. 

அந்த இரண்டு நாட்கள் பள்ளி அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட விதம் அலாதியான நகைச்சுவை நிறைந்தது. பின்னர் நாங்கள் இருவரும் இணைந்தாலே அந்த மரத்தடிக்கு ஒரு ஈர்ப்பு வந்து விடும். நாங்கள் இருவரும் பேசுவதை கேட்கவே அந்த மரத்தடியில் ஒரு கூட்டம் கூட ஆரம்பித்தது. அதில் சிலருக்கு பொறாமையும் ஏற்பட்டது. எங்களில் ஒருவர் வரவில்லை என்றாலும், "என்ன உங்க பார்ட்னர் வரலையா?", என்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே தொடர்ந்திருந்தால் அந்த மரத்திற்கு எங்கள் பெயரையே வைத்திருப்பார்கள். ஆனால், அதற்குள் ரமணிக்கு வேறு ஒரு பள்ளியில் வேலை கிடைத்து விட்டதால் எங்கள் நட்பில் சிறு இடைவெளி ஏற்பட்டது. 

அவர் தமிழில் எம்.பில். பட்டம் பெற்றவர் என்பதால் உயர் நிலை வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியை ஆனார். இரண்டு வருடங்கள் வேலை பார்த்தபின் இப்போது மீண்டும் வேலையை விட்டுவிட்டு என்னோடு தான் வெட்டியாக சுற்றிகொண்டிருக்கிறார்.

இப்போதும் அவர் பள்ளி அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும் போது   உண்மையிலேயே அந்த பணியை அவர் எவ்வளவு நேசித்தார் என்பதை உணர முடிகிறது.

"அப்பா ! உங்களுக்கு அந்த வேலைல எவ்வளவு புதிய புதிய அனுபவங்கள் இல்லே ரமணி !?", என்று நான் கேட்டால், "அதுக்கு உங்களுக்கு தாங்க நன்றி சொல்லணும் நீங்க தானே அந்த விளம்பரத்த பார்த்து சொன்னிங்க", என்பார்.

"விளம்பரத்தை பார்த்து தானே சொன்னேன். வேலையே நானா பார்த்துவச்சேன்?" என்பேன்.

இப்போது பதிவெழுத ஆரம்பித்த பின் நாங்கள் சந்தித்து கொள்ளும் போதெல்லாம்  பதிவுலகம் பற்றித்தான் பேசுகிறோம். அவர் பதிவுகளை படிப்பதில்லை என்றாலும் நான் தினமும் நான் எழுதியதை, படித்ததை அவருடன் பகிர்ந்து கொண்டு விடுகிறேன். எனவே, பதிவுலகில் எனக்கு தெரிந்தவர்கள் எல்லோரையும் ரமணிக்கும் தெரியும்.

சென்ற வாரத்தில் ஒருநாள் ரமணிக்கு போன் செய்தேன். "ஏங்க, sub-registrar க்கு தமிழ்ல்ல என்னன்னு சொல்லுவாங்க?"

அவரும் நான் ஏதோ தமிழில் சந்தேகம் கேட்கிறேன் என்று எண்ணிக்கொண்டு "ம்...ம்...ம்...யோசிச்சு சொல்லறேங்க."

நான் உடனே,"சார்பதிவாளர் ன்னு வச்சிக்கலாமா?"

"ஆமாங்க, சார்பதிவாளர் தான் சரி!"

"சரி!, அப்படின்னா இன்னைலருந்து நீங்க சார்பதிவாளர் !"

"என்ன சொல்லறிங்க...!!!!"

"நான் பதிவிடுகிறேன் அதனால் நான் பதிவாளர், நீங்க என் மூலமா பதிவுகளை படிக்கிறீர்கள், கருத்துகளையும் சொல்கிறீர்கள் அதனால் நீங்கள் சார்பதிவாளர்."

"!!!!!!!!!" 

                                                                                                                                       .....தொடரும் 

திங்கள், டிசம்பர் 26, 2011

சித்தமெல்லாம் எனக்கு சித்தா மயமே !

கொஞ்ச வருடங்களாகவே முதுகு வலியும் வலது கை வலியும் என்னை ஒரு கைதியாகவே மாற்றி விட்டிருகின்றன. இதில் பயபடுத்தும் விஷயம் என்னவென்றால், இரவில் தூங்கும்போது கைகள் மரத்து சில்லிட்டு போய் விடும். கொஞ்ச நேரம் நின்றாலும் கால்கள் வலி பின்னி எடுத்து விடும். படுத்தால் மரத்து போய் விடும். இப்படியே வலிகளோடு என் வாழ்க்கை இணைக்கப்பட்டுவிட்டது.

"இவ்வளவு சொல்றியே அதற்கு என்ன சிகிச்சை எடுத்தாய்?" என்கிறீர்களா. நியாயமான கேள்வி தான். ஆனால், நான் பெரிசாய் சிகிச்சை என எதுவும் முயற்சிக்கவே இல்லை (அப்படி ஒத்துக்கோ !).

அதற்கு காரணம் சலித்து போன ஆஸ்புத்திரி வாசமே (அது சரி யாருக்கு தான் ஹாஸ்பிடல் போக பிடிக்கும்).

இந்நிலையில் தான் இங்கு பலரும் தாம்பரத்தில் உள்ள  தேசிய சித்த மருத்துவ கழகத்தில் நல்ல சிகிச்சை தருவதாகவும் தாங்கள்  அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள்.

அப்படி ஒரு நாள் என் தோழி ரமணியிடம் பேசி கொண்டிருந்த போது அவர்கள் கணவரும் அவரும் கூட அங்கு சிகிச்சை பெறுவதாகவும், நல்ல முறையில் குணம் தெரிவதாகவும் கூறினார்கள்.

சரி, நாமும் போய் பார்க்கலாமே என்று தோன்ற, ஒரு நாள் ரமணியுடன் அங்கு சென்றேன்.

உள்ளே நுழையும் போதே நல்ல மூலிகை மணம். அதை சுவாசித்தாலே பாதி நோய் குணமாகி விடும். அரசாங்க மருத்துவமனையா அது !? சுத்தம்,சுத்தம் எங்கும் பளிச்!...பளிச் !

முதல் முதலாய் பதிவு செய்து கொள்ள ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள். 

அறைகளின் பெயர்கள் எல்லாம் அழகு தமிழில் மருத்துவம்,நோய் நாடல் இப்படி.

உள்ளே ஒவ்வொரு அறையிலும் நிறைய மருத்துவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் உள்ளே நுழைந்து ஒரு அழகான, சற்று மாநிறமான, கிராமத்து களை (சித்த மருத்துவத்திற்கு பொருத்தமான முகம்) உள்ள இளம் பெண் டாக்டரை தெரிவு செய்து கொண்டேன்.

அன்பாக ,கனிவாக விசாரிக்கிறார்கள். மிகமுக்கியமாக நல்ல தமிழில் பேசுகிறார்கள்.

என்னம்மா தொந்தரவு?  
இனிப்பு அதிகமா சாப்பிடாதீங்க ! 
இதை சாப்பிடுங்க சுவையா இருக்கும்! 

ஐந்து நாட்களுக்கான மருந்து மட்டும் தான் தருகிறார்கள்.  அதிகமாக கொடுத்தால் சிலர் அவற்றை வெளியில் விற்று விடுகிறார்களாம். ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் போக வேண்டும். எனக்கு அந்த மருந்து ஒத்து கொள்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த மருத்துவ மனை எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் நிச்சயம் குணமாகும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

நான் இந்த பதிவின் தலைப்பை சொன்னவுடன் ரமணி "என்னங்க இன்னும் ஒரு வேளை மருந்து கூட நீங்க சாப்பிடலை அதற்குள் சித்த மருந்திற்கு இவ்வளவு பெரிய விசிறி ஆகிடீங்களே!?" என்றார்.

"மற்ற மருந்துகளை காட்டிலும் இதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது, காரணம் இது இறை நம்பிக்கையோடு தொடர்புடையது என்பது மட்டுமல்ல இங்கு இருக்கும் சுத்தம், இவர்களின் அன்பான கவனிப்பு ஆகியவற்றில் இருக்கும் நம்பிக்கை தான்." என்றேன்.

ரமணியும் அதை ஆமோதித்தார்.

எனக்கு அவர்கள் கொடுத்த குறிப்புக்கள் சிலவற்றை உங்களுக்கு தருகிறேன், உபயோகமாக இருக்கும்.

*சர்க்கரையில் உள்ள வேதி பொருட்கள், நம் எலும்புகளை வலுவிழக்க செய்து விடுமாம். வருட கணக்காய் சர்க்கரை சாப்பிட்டால் முதுகு வலி,கழுத்து வலி எல்லாம் நிச்சயம். எனவே, சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி உபயோகியுங்கள்.

* முளை கட்டிய பயறு தினமும் ஒரு கை பிடி அளவு கட்டாயம் சாப்பிட வேண்டும்.

* புளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்.

* கணினியில் வேலை செய்தால், வேலை முடிந்து எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதுகு வலி, கழுத்து வலிக்காக சிகிச்சை பெறுகிறவர்கள், கட்டாயம் இந்த குறிப்புகளையும் முயன்று பாருங்கள்.

பின் குறிப்பு : சமீபத்தில் bio-technology professor  ஒருவரை சந்தித்தேன். அவர் நம் பாரதத்தில் உள்ளது போல் bio-diversity உலகில் வேறு எங்குமே இல்லை என்றார்.  எத்தனையோ விதமான தாவரங்கள், உயரினங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு தேவையான வேலையை செய்து கொண்டிருகின்றன என்றார். நம் தேசத்தின் பொக்கிஷங்களை நாம் மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். சித்த மருத்துவமும் அப்படியே.



வெள்ளி, டிசம்பர் 02, 2011

இது நம்ம வீட்டு கல்யாணம்

நானும் நிறைய விஷயங்களை பற்றி கதை எழுத வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருக்கிறேன். ஆனால், அதற்குள் எதாவது சுவாரசியமான ஒரு உண்மை நிகழ்வு நடந்து அதை பற்றி எழுதும்படியாகிவிடுகிறது. 

;யாரோ இப்படி சுவாரசியமான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வேண்டுமென்றே என் எழுத்துபணியை தடை செய்து உங்கள் எல்லோரையும் காப்பாற்றி கொண்டிருக்கிறார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

இப்படி, தற்போதைய நிகழ்வு "தம்பி கல்யாணம்". 


தக்குடு மெயிலில் பத்திரிக்கை அனுப்பி அதை பிரித்து படிக்க கூட தெரியாமல் ஒரு நாலு நாட்கள் அல்லாடினேன். பின்னர், எதிர்வீட்டு பையன் தான் சொல்லிகொடுத்தான். 

படித்த பின்னர் தொடங்கி விட்டது என் குழப்பம். ஜனவாசத்துக்கு போறதா ?இல்லை கல்யாணத்துக்கு போறதா? 

இந்த குழப்பம் முப்பதாம் தேதி  மதியம் வரை நீடித்தது. காலையில் அலுவலகம் செல்லும் போதே தலைவர் "எப்போ போகனுங்கரத்தை சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லு, இன்னிக்கு போறதா இருந்தா போன் பண்ணு." என்று வழக்கம் போல் சிம்ம கர்ஜனை செய்து விட்டு சென்றார்.

குழப்பத்தோடு கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் தங்கமணியின் தளத்தில் "தக்குடு கல்யாண வைபோகம்" பதிவு. அதில் தி.ர.ச மாமா எல்லோரும் இரவு ஏழு மணிக்கு சந்திக்கவேண்டும் என்று பின்னுட்டத்தில் மிரட்டி இருந்தார். 

அப்போ குழந்தைகளை எங்கே விட்டுவிட்டு செல்வது? வேறவழி இழுத்துண்டே  போகவேண்டியது தான் என்று முடிவு செய்து செயலில் இறங்கினேன். வழக்கம்போல் எதையும் முன் கூட்டியே திட்டமிடாததால் "டென்ஷன்! டென்ஷன்!".

ரெண்டுத்தையும் டிரஸ் பண்ணி இழுத்துண்டு வந்து ஆட்டோ பிடித்து ஸ்டேஷன் வந்து ட்ரெயின் பிடித்து மாம்பலம் வந்து தலைவருடன் டூ வீலரில் கும்பலாக குமிந்து கொண்டு கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.


கல்யாண மண்டப வாசலில் வைத்து தலைவர் என்னிடம்,"இந்த கல்யாணம் தானா? அட்லீஸ்ட் யாராவது ஒருத்தரையாவது உனக்கு தெரியுமா? எதுவும் பிரச்சனை இல்லையே ?" என்று கேட்டபோது மனதிற்குள் ஒரு பயமும் கூடவே தலைவரை பயப்பட வைத்த திருப்தியும் ஏற்பட்டது.

எதையும் காட்டிக்கொள்ளாது "எல்லாம் எனக்கு தெரியும், பேசாம வாங்க." என்று ரொம்ப தைரியமாய் ஆணை இட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன்.

வாசலில் அழகாய் பூ கோலம் போட்டு இருந்தார்கள். பெண் வீட்டுகார பெண்மணிகள் கையில் சந்தனம்,கும்குமம்,சர்க்கரை,கல்கண்டோடு பெண்களூர் ரோஜா பூவும் கொடுத்து வரவேற்றார்கள்.

நாங்கள் ஏற்கனவே தலையில் பூ வைத்திருந்ததால் அந்த பூவை கையிலேயே வைத்திருந்தேன். பெரியவள்,"ஏம்மா பூவ கைலயே வச்சிண்டிருக்க? பாக்ல வச்சிக்கோயேன்." என்றாள்.

நான்,"பாக்ல வச்சா கசங்கி போய்டுமே, வாசன ரோஜா வாடி போகலாமா?, அதான் கைலயே வச்சிண்டிருகேன்." என்று சொன்னேன்.

 நாங்கள் போய் உட்கார்ந்து கொண்டு மிஸ்டர்,மிஸ்டர்னு (அதான் திரு,திருன்னு) முழிச்சிண்டே இருந்தோம்.

ரொம்ப தவிப்பான கணங்கள் அவை. யாரையுமே தெரியாமல் ஒரு கல்யாணத்துக்கு போக பயங்கர தில் வேணுங்கிறது எனக்கு அப்பதான் புரிஞ்சது.

தலைவர் வேற சும்மா இல்லாம "ஏய் ! அங்க பாரு அந்த மாமி ப்ளாக் ப்ரென்ட் தான் போலிருக்கு, இங்க பாரு இந்த மாமா ப்ளாக் ப்ரென்ட் போலிருக்கு" ன்னு ஒரே தொனப்பல்.

உங்களுக்கு எப்படி தெரியும்னா,அவாளும் நம்மள மாதிரியே முழிச்சிண்டிருக்கா  பாருங்கிறார்.

"என்ன திரு திருன்னு முழிகிரவால்லாம் ப்ளாக் ப்ரெண்ட்ஸ்ஸா?" என்று ஒரு முறை முறைத்த அப்புறம் தான் அடங்கினார்.

அப்புறம் தக்குடு தன் திருமதியோடு மேடையேறினான். இருவரும் மாலை மாற்றி கொண்டார்கள்.

நங்கள் மேடையில் ஏறி அறிமுகபடுத்திகொண்டு போட்டோ எடுத்துக்கொண்டோம்.



கீழே இறங்கி கொஞ்ச தூரம் போனபின்தான் தலைவருக்கு தான் கேமரா கொண்டு வந்த ஞாபகமே வந்தது. பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு போட்டோ எடுத்தார்.  நல்ல உணவு. வழக்கம் போல் சரியாய் சாப்பிடாமல் ரெண்டும்  நன்றாய் படுத்தின. சொல்ல சொல்ல கேட்காமல் ஐஸ் கிரீம் சாப்பிட்டன.

திருப்பியும் பதிவர்களை தேடும் படலம். தக்குடுவோட பெற்றோர், அண்ணா,மன்னி யாரையும் பார்க்காமல் எப்படி திரும்பிப்போவது?

அவன் அண்ணா யார் என்று தெரியவில்லை. அங்கே பார்த்தால் தக்குடு ஜாடையிலேயே ஒருத்தர் நின்னுண்டு இருந்தார். அவரை சுற்றி ஒரே பெண்கள்  கூட்டம். "அவர்தான் தக்குடுவின் அண்ணாவாய் இருக்கும் போய் விசாரியுங்கோ", என்றேன் தலைவரிடம்.

கடைசியில் பார்த்தால் அவர் கசின் பிரதர்ராம். "ஒ....ஒ.... கசின் பிரதருக்கே இவ்வளவு பெண்கள் கூட்டமா....?"

தக்குடுவோட அம்மாவை கண்டுபிடித்து அறிமுகபடுத்தி கொண்டேன். நன்றாய் பழகினார்கள்."ஒ.....தானை தலைவியா நன்னா தெரியுமே...நிறைய சொல்லிருக்கான்." என்றார்கள்.

"ஐயோ, நிறைய சொன்னானா...? என்னன்னு சொன்னானோ....?"

அவர்களே எங்களை அழைத்து போய் பதிவர்களை அறிமுகபடுத்தி வைத்தார்கள். எல்லோரும் ரொம்ப முக்கியமான இடத்தில் இருந்ததால் ஒன்றுமே பேச முடியவில்லை.T.R.C மாமாவும்,  R.V.S சாரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். பாலாஜி வெங்கட்டும்,எல்.கே வும் தனியாக வந்திருந்தார்கள்.


R.V.S சாரை வேங்கடசுப்ரமணியன் என்று T.R.C மாமா அறிமுகபடுத்தி வைத்தார் . இப்போது தான் இந்த பதிவை எழுதும்போது தான்  R.V.S சார்  தான்  வேங்கடசுப்ரமணியன்  என்பது தெரிந்தது (நீ ஒரு டயுப் லைட் என்று யாருங்க கமெண்ட் அடிக்கறது).

நாங்கள் எங்கள் கிராமத்துக்கு திரும்ப வேண்டி இருந்ததால் அவர்கள் சாப்பிட்டு விட்டு வரும்வரை காத்திருக்க முடியவில்லை. இதற்கே சின்னவள் சாமியாட ஆரம்பித்து விட்டாள்.

இங்கு முக்கியமான ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். அது தான் அங்கு நடந்த பஜனை கச்சேரி. அடாடாடாட.....அந்த மாமிக்கு என்ன ஒரு சாரிரம்.   அதையும் ஒரு மாமா ரசித்து தாளம் போட்டு கொண்டிருந்தார். அனேகமாக அவர் அவருடைய ஹியரிங் எய்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்திருப்பார் என்று நினைக்கிறன்.

தலைவர் வேற, "ஐயோ....!அந்த மாமிக்கு யாராவது ஐஸ் கிரீம் ஒரு நாலு குடுங்கோளேன். அதையும் ஒரு நாலு நாள் முன்னாடியே செஞ்சிருக்கணும்.அதோட பனிலையும் பத்து தரம் அலைய விட்டிருக்கணும்." என்று கமெண்ட் அடித்தார்.

முதல் பதிவர் சந்திப்பே மங்களகரமாய் கல்யாணத்தில் நடந்தது மகிழ்ச்சியாய் இருந்தது.