திங்கள், ஆகஸ்ட் 26, 2013

கண்ணனை நினைப்பவர் சொல்வது பலிக்கும்

நாளைக்கு நம்ம கிருஷ்ணருக்கு  ஹாப்பி பர்த்டே. ஒரு காலத்துல்ல எனக்கு கிருஷ்ணர் தான் ரொம்ப புடிச்ச கடவுள் (இப்போ அதே தெய்வத்தின் வேறு வடிவமான அன்னை பராசக்தி). அப்போ எங்க டியூஷன் அக்கா கூட கிண்டல் பண்ணுவாங்க," ஆமா!, பொம்பளைங்களுக்கெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி கிருஷ்னர புடிக்கும், கல்யாணத்துக்கப்புறம் ராமர புடிக்கும்."ன்னு.

எனக்கு அப்படியெல்லாம் இல்ல. முன்னாடி சின்னவயசுல்ல எப்பவோ கேட்ட ஞாபகம், "உலகத்துல்ல ஒரே ஒரு உருவம் தான் உண்டு. அதன் ஒரு பாதி சக்தியாவும், மறுபாதி சிவனாகவும் இருக்கு. அந்த சக்தியா இருக்குற ஒரு பாதி தான் திருமாலாவும் இருக்குன்னு. இதை எங்கே எப்போ கேள்வி பட்டென்னு ஞாபகம் இல்லை. ஆனா இது  என் மனசுல்ல ரொம்ப ஆழமா பதிந்து விட்டது.

கல்யாணத்துக்கு முன்னாடி கிருஷ்ணன ஜெயந்தின்னா வீட்டையே ரெண்டு பண்ணிடுவேன் (நவராத்திரிக்கும் படுத்துவேன்). இந்த ஸ்லோகம் சொல்லணும், இந்த கோவிலுக்கு போகனும். இப்படி பண்ணனும், அப்படி பண்ணனும் ன்னு. பாவம் எங்கம்மா வீட்டு வேலையோட என்னோட ஆச்சார படுதல்களுக்கெல்லாம் வேற ஆடுவாங்க.பின்ன அவங்க தானே என்னை இப்படி சொல்லி சொல்லி வளர்த்தது.

இப்போ கல்யாணத்துக்கப்புறம் இந்த மாதிரி ஆர்ப்பாட்டமெல்லாம் செய்ய முடியறதில்ல. ஒன்னு வேலை அதிகம். அடுத்தது நான் ஆர்ப்பாட்டம் பண்ணினால் இங்கே அதை கண்டுக்கவே  ஆளில்ல.

இப்படித்தான் போன வருஷம் என் தம்பி போன் பண்ணி, " என்னக்கா இன்னிக்கு உன் கிச்சுக்கு ஹாப்பி பர்த்டே வாச்சே, எப்பவும் போல சாமி ஆடிட்டியா"  ன்னு கேட்டான்.

எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு. "போடா தம்பி ! இங்க நானே பக்ஷணம் பண்ணனும், சுவாமி பாத்திரம் தேய்க்கணும், குழந்தைகளை கவனிசிக்கன்னும். இதுல்ல என்னிஷ்டப்படி பூஜை பண்ணவே முடியலைடா. கோவிலுக்கும் போகணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு ஆனா வீட்டுல்ல வேலை இருக்கே." என்றவுடன் அவன் கட,கட வென்று சிரித்து "நன்னா வேணும் எல்லோரையும் நீ என்ன பாடு படுத்தி வச்சிருப்ப." என்று கொக்கரித்தான்.


உண்மை தான் முன்பெல்லாம் நேரம் அதிகம் இருந்ததால் சம்ப்ரதயங்களின் மேல் அதிக பற்று வைத்து இருந்தேன். அது அப்போது சாத்தியமானதாகவும் இருந்தது. ஆனால், இப்போதோ நேரமின்மையில் தவிக்கும் போது, "பக்தி தான் முக்கியம், பகவான் நாம அன்போட எத குடுத்தாலும் ஏத்துப்பார்." என்று சமாதானம் சொல்ல முற்படுகிறது மனம்.


சரி, விஷயத்துக்கு வருகிறேன். பகவானுக்கு தன்னை பூஜிப்பவர்களை விட தன் பக்தர்களை பூஜிப்பவர்களை தான் அதிகம் பிடிக்குமாம். "அதனால என்ன இப்போ, நாங்கள் எல்லோரும் உன்னை பூஜிக்கனும்ன்னு சொல்லறியா" ன்னு கேட்காதீங்க. அப்படியெல்லாம் இல்லை. ஏன்னென்றால்  எனக்கு அத்தனை பக்தி இல்லை.

நான் இங்கே குறிப்பிட வந்த பக்தர்கள் பாரதியாரும்,கண்ணதாசனும் தான். அவர்களின் பக்தி ஈடுசொல்ல முடியாதது. கடவுளை தன் வீட்டு வேலைக்காரனாக நினக்கவெண்டுமென்றால் பாரதியாருக்கு தன் பக்தியின் மேல் எத்தனை நம்பிக்கை இருக்க வேண்டும். அதைத்தான் நான் முந்திய பத்தியில் சொன்னேன். என் பக்தியில் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை என்று.

பாரதியார்  அன்னை பராசக்தியை பாடிய அளவுக்கு கண்ணனையும் பாடியுள்ளார், (மற்ற தெய்வங்களை பாடியது குறைவு).

திருமால் மோகினியாக அவதாரம் எடுக்க முடிந்ததற்கு காரணம், அவரே பராசக்தியாகவும் இருப்பதால் தான் என்று பொருள்படும்படியான ஒரு பாடல் கூட உள்ளது (பாரதியார் பாடல் அல்ல).

 கண்ணதாசனும் தானே ராதையாக மாறி ,கண்ணா ! கண்ணா ! என்று உருகி இருக்கிறார். "காதல் கொண்டோர் சொல்லும் சொல் அல்லவோ. என் கண்ணா என்பாரன்றி வேறென்னவோ. சாதல் வந்தால் கூட கவலை இல்லை. என் சங்கீதம் அவனன்றி யாருமில்லை." என்கிறார். அன்பின் மிகுதியில் நாம் சொல்லும் சொல் "கண்ணே! அல்லது கண்ணா !" என்பது தானே.

நமக்கெல்லாம் கந்த சஷ்டி கவசம்,ஸ்கந்த குரு கவசம், ஸ்ரீ புவனேஸ்வரி கவசம் தெரியும். கேள்விப்பட்டிருக்கோம். ஸ்ரீ கிருஷ்ண கவசம் தெரியுமா. இதை எழுதியவர் கண்ணதாசன். அதன் முன்னுரையில் அவர் கூறுகிறார். கண்ணன் ஒரு காவல் தெய்வம். அவனை நினைப்பவர்களுக்கு துக்கமில்லை. "கண்ணனை நினைப்பவர் சொல்வது பலிக்கும்".

இதே விஷயத்தை நீங்கள் சாக்த வழிபாட்டிலும் காணலாம். அன்னை பராசக்தியை வழிபடுபவர்களுக்கு வாக்கு வன்மை ஏற்படும்  என்பது  அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.


இந்த "ஸ்ரீ கிருஷ்ண கவசம்", என்ற சிறு நூலை வானதி பதிப்பகத்தார் வெளி இட்டுள்ளார்கள். விலை கொஞ்சம் அதிகம் தான். ஒரு ரூபாய் விலை. ஸ்ரீ கிருஷ்ண கவசத்தை இங்கே பதிவிடலாமா என்பது தெரியவில்லை. எனவே, இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு அதை படிக்க விரும்பும் அன்பர்கள் அந்த நூலை வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


அனைவருக்கும் அன்னை பராசக்தியும், அவளுருவாய் இருக்கும் கண்ண பெருமானும் அனைத்து நலன்களையும் வழங்கட்டும்.



வியாழன், ஆகஸ்ட் 22, 2013

ரீ என்ட்ரீ

இந்த சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணி கொஞ்ச காலம் நடிக்காம இருந்துட்டு திரும்பவும் நடிக்க வரும்போது அதற்கு நிறைய தடபுடல் இருக்கும். நான் என்ன நடிக்கவா செய்யறேன். அதனால என் ரீ என்ட்ரி க்கு எந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பும் தேவையில்லை (நீ கேட்டாலும் இங்க யாரும் குடுக்க தயாரில்லை).

என் தம்பியின் திருமணதிற்கு பின், என் கம்ப்யூட்டர் ரொம்பவே தொல்லை கொடுத்து விட்டது. நிறைய சர்வீஸ் இன்ஜினீயர்கள் வந்து பார்த்து விட்டு, அதனால தான் இதனால தான் என்று காரணம் சொல்லிவிட்டு போனார்கள். ஏதோ ஒரு அஜீத் படத்துல ஆட்டோ கண்ணாடிய திருப்பினா ஆட்டோ கிளம்புமே அந்த மாதிரி,"மேடம்!, உங்க கேஸ் அடுப்ப கொஞ்சம் நிறுத்துங்க !, அது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாய் இருக்கும்!", ன்னு தான் யாரும் சொல்லலை.

அந்தளவுக்கு புதுமையான காரணங்கள் சொல்லப்பட்டன. அவ்வப்போது என் தம்பியின் லாப் டாப்பிலும், பிரௌசிங் சென்டரிலும் சென்று மெயில் மட்டும் பார்த்து வந்தேன். அப்போதெல்லாம் வலை உலகத்தில் என்ன நடக்கிறதோ தெரியவில்லையே என்ற ஏக்கம் பிடித்து வாட்டும். ஒரு சில தளங்களில் மட்டும் சென்று அவ்வப்போது சில கமெண்டுகளை தூவிவிட்டு போய் விடுவேன்.

இத்தனை நாட்களும் என்னை யாரும் தேடியிருக்க மாட்டார்கள் (தேடுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் பெரிதாக எழுதிவிடவில்லை).

இருந்தாலும், " நான் வந்துட்டேன்............!" என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ரீ என்ட்ரி யை ஒரு நல்ல செய்தியோடு ஆரம்பிப்போம் என்று எண்ணுகிறேன்.

சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாட பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. வரும் செப்டெம்பர் 11 ஆம் தேதி  (அன்று சுவாமிஜி சிகாகோவில் சொற்பொழிவாற்றிய நாள்) சென்னை கடற்கரையில் உள்ள ஸ்ரீ விவேகானந்தர் இல்லத்தில் மாலை நான்கு மணிக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. பெரிய தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். பின்னர், விவேகானந்தர் இல்லத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை  "தேசத்திற்காக ஓடுவோம்", என்ற  ஒரு ஓட்டம் (mass run ) நடைபெற உள்ளது. இதில் பதினெட்டு முதல் நாற்பது வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டு ஓடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, எல்லோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேச பணியில் பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.



வியாழன், மார்ச் 28, 2013

நீங்கள் சரித்திரம் படைப்பவரா?, இல்லை படிப்பவரா?

 தலைப்பில் உள்ள வார்த்தைகளை சமீபத்தில் ஒரு சுயமுன்னேற்ற கட்டுரையில் படித்தேன். அதாவது, நீங்கள் சரித்திரத்தில் இடம்பிடிக்கும் வகையில் ஏதாவது  சாதிக்க போகிறீர்களா ? அல்லது மற்றவர்களின் சாதனை சரித்திரங்களை படிக்கும் சராசரியாக வாழப்போகிறீர்களா என்பது தான் அந்த கட்டுரையின் மைய கருத்து.

என்னை கேட்டால் சரித்திரம் படைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால், கட்டாயம் சரித்திரம் படியுங்கள் என்பேன்.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி படித்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்னவென்றால் 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் மிக மோசமான ஆள் பற்றாக்குறை ஏற்படும், என்பது தான் அது.

சரித்திரம் மற்றும் அது சம்பந்தமான அகழ்வாராய்ச்சி கல்வி படித்தவர்கள் மிக குறைவான பேர்களே உள்ளதே இதற்கு  காரணமாம்.  சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரிகளில் பி .ஏ மற்றும் எம்.ஏ  படிப்புகள் மிகவும் அருகிவிட்டன. அவற்றில் சேர மாணவர்களே வருவதில்லையாம். இப்போதெல்லாம் professional courses எனப்படும் வேலை உடனடியாக கிடைக்க கூடிய படிப்புகளுக்கு தான் வரவேற்பு அதிகமாக உள்ளது.

தமிழில் எம்.பில் பட்டம் பெற்ற என் தோழிக்கு கல்லூரிகளில் வாய்ப்புகள்  மிகவும் குறைந்து விட்டது.


"ஏன் ? சரித்திரமோ, தமிழோ படிக்ககூடாதா?" அதனால் என்ன பிரயோஜனம் என்ற கேள்வி வருகிறது. நாமும் இருக்கிறோம் நம்மால் மட்டும் என்ன பிரயோஜனம்? நம் முந்தையரின் வீர சரித்திரங்களை படித்து அவற்றை போல, அவற்றை விட மேலானதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை  அந்த சரித்திரங்கள் தூண்டாதா?

ஏன், அறிவியல் தான் மேலானது என்றால், நியூட்டன்,எடிசன்,ஐஸ்டின் போன்றவர்களின் கண்டுப்பிடிப்புகளும் ஒரு இன்று  சரித்திரமே.

வெளிநாட்டில் வாழும் ஒரு உறவினரிடம் சரித்திர புகழ் பெற்ற மாவீரர் ப்ரிதிவிராஜ்  சௌஹானை  பற்றி சொல்லிகொண்டிருந்தேன். அவர் அதை ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு, அவரது பதின்ம வயது மகனிடமும் கூறியுள்ளார்.

அவரது மகன் அதைக்கேட்டு  ஆசர்யமடைந்து,"உண்மையாகவே இப்படியெல்லாம் நிகழ்ந்ததா அம்மா ?" என்று கேட்டு  கூகுளில் அவரது சரித்திரத்தை தேடி படித்து விட்டு, "அம்மா ! இத்தனை  காலமும் எனக்கு ப்ரிதிவிராஜ்  என்றால் சினிமா நடிகர் ப்ரிதிவிராஜை தான் தெரியும். ஆனால் அவரோ கதாநாயகனாக நடிப்பவர், அதற்கு பணமும் பெற்றுகொள்கிறார். ஆனால்  இந்த மாவீரரின் சரித்திரமோ மகத்தானதாக இருக்கிறது. இவரைப்பற்றிய அறிமுகத்தை நமக்கு தந்த சித்திக்கு  நன்றி சொல்லவேண்டும்." என்றானாம்.

நம் சரித்திரத்தை, நம் சந்ததியினர் படிக்க வேண்டுமென்றால் நம் முன்னோர்களின் சரித்திரத்தை நாம் கட்டாயம் படிக்கவேண்டும். எல்லா  படிப்புகளிலும் சரித்திரமும், தாய்மொழியும் கட்டாயம் ஒரு பகுதியாக ஆக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால், நம் சாதனைகளும் நாளை யாருக்கும் தெரியாமலே போய்  விடும். நம் சந்ததியினருக்கு நாம் யாரோவாகிவிடுவோம்.ஏனென்றால்,"நம் முந்தையர் வரலாற்றை கேட்கும் போது மூச்சில் புது சக்தி பிறக்கும் என்று பாரதியார் சொல்லிருக்கிறார்.

மீண்டும் சொல்கிறேன், சரித்திரம் படைக்க, சரித்திரம் படியுங்கள்.

புதன், ஆகஸ்ட் 29, 2012

அம்மா வீடு (கதை)

பூஜா அவள் சித்தப்பா வீட்டிற்கு சென்று நான்கு நாட்களாகி விட்டன. இது வரை நான் அவளை பிரிந்து இத்தனை நாட்கள் எல்லாம் இருந்ததே இல்லை. அவளும் தான்.

என் மைத்துனரின் மகளும், பூஜாவும் கிட்டதட்ட ஒரே வயது. தன் வயது ஒத்த  குழந்தையை கண்டவுடன் அவர்களுடன் தான் செல்வேன் என்று ஒரே அடம். "இருக்கட்டுமே அண்ணி ! நாங்க பார்த்துக்கறோம், வெகேஷன் தானே இப்போ ", என்று  மைத்துனரும், ஓர்ப்படியும் மிகவும் வற்புறுத்தி சொன்னதால் அனுப்பிவிட்டேன். பக்கத்தில் இருந்தாலும் பரவாயில்லை, கோயம்புத்தூர். திடீரென்று  "அம்மா வேணும்", என்று கேட்டு அழுதால் என்ன செய்வார்கள்? இவள் அங்கே என்ன பாடு படுத்துவாளோ அவர்கள் முகம் சுளிக்கும் படி எதாவது செய்து விட்டால்...?

இவரோ, "அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையே இல்லை, உன் வளர்ப்பில் உனக்கு நம்பிக்கை இல்லையா, அதோடு எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள்." என்று  சொல்லவும் அனுப்பிவிட்டேன்.

அவள் அங்கு சமர்த்தாக இருப்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது. அவளும் தன்  சகோதரியோடு மகிழ்ச்சியாகவே இருக்கிறாள். எனக்கு தான் இங்கு பொழுதே போகவில்லை. சமைக்க பிடிக்கவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. அவள் இல்லாத போது தொந்தரவில்லாமல் செய்யவேண்டும் என்று நினைத்திருந்த காரியங்கள் இன்னமும் தொடங்கபடாமலே அப்படியே இருக்கின்றன.

அவள் இருக்கும் போது என் உலகம் அவளை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. இப்போது அவள் இல்லாத போது அது அப்படியே இருந்த இடத்திலேயே நின்று விட்டதாகவே தோன்றுகிறது.

பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ் கொண்டு விடவேண்டாம். டிவி சத்தம் இல்லை. தொனதொன கேள்விகள் இல்லை. ஆனாலும் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

போகிற போக்கை பார்த்தால் அவளுக்கு திரும்பி வரும் எண்ணமே இல்லை என்று தோன்றியது. "எப்படியடி முடிகிறது உன்னால்?", என் மனம் அரற்றியது.

மாலை எல்லா  வேலைகளும் முடிந்து விட்டன. வீட்டிலேயே எவ்வளவு  நேரம் தான் டி.வி பார்த்து கொண்டு உட்கார்ந்திருப்பது. வீட்டை பூட்டிக்கொண்டு மெல்ல தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். இலக்கில்லாமல்  நடந்தவளுக்கு, அம்மா வீட்டுக்கு போய்வந்தால் என்ன என்று தோன்றியது. 

அம்மா வீடு அப்படியொன்றும் தூரத்தில் இல்லை. நான்கைந்து தெருக்கள் தள்ளிதான் இருக்கிறது. ஆனால் அங்கு போகத்தான் எனக்கு நேரமே இருப்பதில்லை.  நான் பெற்றதை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. அம்மா வீட்டுக்குப்போய் குறைந்த பட்சம்  ஆறு மாதங்கள் இருக்கும் என்று தோன்றியது.

என் அம்மா எதற்குமே கோபப்படாத சாந்தமான குணம். நான் போகவில்லை என்றாலும் சிலசமயம் நேரம் கிடைத்தால், அவளே வந்துவிடுவாள்.

அம்மா வீட்டில் வருவோர் போவோர் அதிகம். எல்லோரையும் கவனிக்கவே அம்மாவுக்கு நேரம் சரியாக இருக்கும். அப்பா பரப்ரிம்மம் எதிலும் பட்டுக்கொள்ள மாட்டார்.

வீட்டு  வாசலை அடைந்த போது  என் பெரியண்ணன் கணேசன்  வாசலிலேயே உட்கார்ந்திருந்தான். நான் அடிக்கடி சொல்லுவேன்,"நம்ம வீட்டுக்கு வாட்ச் மேனே  வேண்டாம் நீயே போதும்."

"வாங்கோ ! வாங்கோ ! பவித்ரா மாமி ! என்ன திடீர்ன்னு இந்தப்பக்கம்?" அவன் குரலில் கேலியும் கிண்டலும்  சற்று தூக்கலாகவே தெரிந்தது.

ரொம்ப அவமானமாக இருந்தது. ஆனாலும் நான் என்ன செய்யமுடியும்?  "அம்மாவை பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு ...." நான் முடிக்கும் முன்பே,

"ஓ ....., குழந்தைக்கு அம்மா ஞாபகம் வந்துடுத்தா....!?" திருப்பியும் நக்கல்.

உள்ளே திரும்பி "டேய் ! மணி இங்கபாருடா யார் வந்திருக்கான்னு, ஏய் ! துர்கா சீக்கிரம் வா, இங்க ஒரு  அதிசயம் பாரு !" என்று அவன் குரல் கொடுக்கவும் என் சின்னண்ணன் மணியும், தங்கை துர்காவும் ஓடி வந்தார்கள்.

                                                                                                                                       தொடரும்....

பி.கு : இது என் முதல் முயற்சி. உங்கள் விமர்சனங்கள் என்னை பண்படுத்த உதவும். எதையும் சுருக்கமாக சொல்லி பழகாததால், இந்த கதை நீண்டு விட்டது. நிச்சயமாக அடுத்த பதிவில் முடிந்து விடும் என்று உறுதியளிக்கிறேன். எனவே,  எல்லோரும் மனதை தேற்றிக்கொள்ளவும்.

புதன், ஜூலை 04, 2012

இரு நல்லவர்கள்

சென்ற பதிவில் நான் எழுதி இருந்த கருத்துக்களை சற்றே விரிவாக இந்த பதிவில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

என் இரு தோழியர்களுக்குள் பெரிய ஈகோ பிரச்சனை. என்னை பொறுத்தவரை இருவரும் நல்லவர்களே.அவர்கள் எனக்கு தோழியரே தவிர அவர்களுக்குள் தோழமை இல்லை. இருவரும் என்னிடம் தனியாக கேட்ட ஒரே கேள்வி , "எப்படி தான் அவங்க கூட பிரெண்டா இருக்கீங்களோ ?"

நான் மனதிற்குள் நினைத்துகொண்டேன் ," எல்லாம், உங்ககூட பழகற அனுபவம் தான்." சொல்ல முடியுமா..? உண்மையை சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும் உறவு பாதிக்கபடும். "அப்படி பட்டவங்க கூட பிரெண்ட்ஷிப் வச்சிக்கணும்னு என்னங்க அவசியம் எவ்வளவு திமிரா பேசறாங்க பாருங்க. உங்க குழந்தைகளை நீங்க வளர்க்கறத பற்றி விமர்சனம் செய்றாங்க, அவங்க கிட்ட ஆயிரம் குறை இருக்கு அத நீங்க சொன்னா என்னாகும் ?" இது ஒரு தோழியின் கருத்து.

உண்மை தான், அவர்கள் யார் என்ன சொன்னாலும் கேட்காத வகையை சார்ந்தவர்கள். நீங்கள் அமிர்தத்தையே கொடுத்தாலும் குடிக்கமாட்டார்கள். அவர்களே கண்டுபிடித்த விஷத்தை தான் குடிப்பார்கள், நம்மையும் அந்த விஷத்தையே குடிக்கச்சொல்லி நிர்பந்திப்பார்கள்.

சரி, இதற்கு என்ன செய்யலாம்?

1. அவர்கள் நாம் என்ன சொன்னாலும் ஏற்றுகொள்ள போவதில்லை என்னும் போது அவர்களுக்கு ஆலோசனை சொல்வதை நிறுத்துவது தான் நல்லது.

2. நாம் நம் கருத்தை சொன்னால் விவாதம் தான் வளரும். விவாதங்கள் என்றுமே முற்றுபெற்றதும் இல்லை. அவை நல்ல முடிவுகளை தந்ததும் இல்லை. எனவே, விவாதிக்காமல் அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டு விடுவது தான் நல்லது. பட்டு தெரிந்து கொள்ளட்டும்.

3. அவர்கள் உறவு நமக்கு தேவையா? ஆம், தேவைதான் அவர்களிடமும் பல நல்ல குணங்கள் நிறைந்திருக்கின்றன. நம்மிடமும் பல குறைகள் இருக்கின்றன. அதோடு, இந்த குணம் கொண்டவர்கள் தான் நம்மை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் அவர்கள் குறைக்காக நாம் விலக்கிக்கொண்டே போனால் நமக்கு யார்தான் மிஞ்சுவார்கள்?

4. அதற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கவேண்டுமா? ஆம், கேட்கத்தான் வேண்டும். ஆனால், செயல்படுத்த வேண்டியதில்லை. இந்த குணம் உள்ளவர்களிடம் நீங்கள் அவர்கள் சொல்லும்போது சரியென்று கேட்டுகொண்டாலே போதும், அவர்கள் திருப்தியாகி விடுவார்கள். அதையும் மீறி அவர்கள் நம்மை நிர்பந்தித்தால் அதை நாசூக்காக மறுத்துவிட வேண்டும்.

5. இப்படி எதற்குமே சரிப்பட்டு வரவில்லை என்றால் அவர்கள் உறவை விலக்கிவிடலாம் .ஆனால் ,அப்போதும் அது எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்து கொள்ளக்கூடிய வகையில் இருக்கவேண்டும். பணம், பதவி எல்லாவற்றையும் விட மனித உறவுகள் விலை மதிக்க முடியாதவை அவற்றை க்ஷண நேரத்தில் முறித்து கொள்வது நல்லதல்ல.

6. அவர்கள் சொல்வதையும், செய்வதையும் நாம் நகைச்சுவை உணர்வோடு ரசிக்க கற்றுகொண்டால், உறவும் சீராக இருக்கும். அவ்வப்போது நமக்கு நல்ல பதிவுகளும் கிடைக்கும்.


ஏதோ ஒரு துணிக்கடையில் (போத்திஸ் என்று நினைக்கிறேன்.) துணி வாங்கும் போது "உறவுகள் மேம்பட" என்று சில ஆலோசனைகள் பிரிண்ட் செய்த அட்டைகள் தருவார்கள். நாமும் அதை பெருமையாக நம் வீட்டில் கதவிலும், இன்னும் பல இடங்களிலும் ஒட்டி வைத்திருப்போம். அந்த அட்டையில் உள்ளவற்றை நாம் வாழ்நாளில் பின்பற்றி பார்த்தாலே போதும் நமக்கு இந்த உலகமே உறவாகி விடும்.

ஒ..கே. இப்ப ஒரு ஜோக். நேற்று, ஒரு மாறுவேட போட்டிக்கு குழந்தைகளை அழைத்து சென்றிருந்தேன் (இதை பற்றிய பதிவை விரைவில் எழுதுகிறேன்.) 

அங்கே கர்ணன் வேடம் போட்ட குழந்தை "நான் தான் கர்ணன்! என் தாய் குந்தி !" என்று வசனம் பேசியவுடன், பெரியவள் என்னிடம் அம்மா !, "குந்தி தின்றால் குன்றும் மாளும் ன்னு பழமொழி சொல்லி கொடுத்தாங்களே எங்க மிஸ், குந்தி அவ்வளவா சாப்பிடுவாங்க? அதனாலதான் அவங்க மகனான பீமனும் நிறைய சாப்பிடறவரா பொறந்துட்டாரா...?" :)))

ஞாயிறு, ஜூன் 24, 2012

"EGO", you go ! (Let it go !)

தலைப்பை பார்த்தவுடனேயே எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும். ஆமாங்க, இந்த "ஈகோ" ன்னு ஸ்டைலா ஆங்கிலத்தில் சொல்லப்படற விஷயம் என்னன்னு ரொம்ப நாளா யோசிச்சிகிட்டே இருந்தேன். 

"ஈகோ" ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு என்னோட ஈகோவை விட்டுவிட்டு ஆங்கில அகராதியை புரட்டிப்பார்த்தேன். அதுல "நான் என்னும் அகங்காரம்" அப்படின்னு அர்த்தம் போட்டிருந்தது.

"நான்" என்னும் எண்ணம் அழிய வேண்டும் அதுவே மனிதன் உயர்வதற்கான வழின்னு எல்லா பெரியவங்களும் சொல்லியாச்சு. ஆனா,"நான் தான் பெரியவன் "ன்னு சண்டை வராத இடமே இல்லைன்னு தான் தோணுது.

இந்த விஷயத்துல்ல எனக்கு தோணினதை சொல்லலாமென்று நினைக்கிறேன்.

இந்த "ஈகோ"வால வீட்ல,ஆபீஸ்ல,பொது இடத்துல எங்க சண்டை வந்தாலும் அதனால வேலை பாதிக்கபடுது,உறவுகள் பாதிக்கப்படுது.


அதனால, "நான்" முக்கியமில்லை. இப்போ இந்த வேலை நல்லவிதமா முடியணும் அதுதான் முக்கியம் அப்படிங்கிற பொறுப்புணர்ச்சி வந்துட்டா ஆட்டோமட்டிக்கா நாம விட்டுகொடுக்க தயாராகி விடுவோம்.


முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா,செயல்படுத்தி பார்த்தால் அதனால விளையற நன்மைகளை பார்க்கும்போது நமக்கே விட்டுகொடுக்கிறது ஒண்ணும் பெரிய தியாகமில்லை, இதில் நம் தன்மானம் எதுவும் குறைஞ்சிட போறதில்லைன்னு புரியும். 

யாராவது நம்மிடம் அகங்காரத்தோடு பேசினால் அவர்கள் சொல்லவதை அப்படியே ஏற்று கொண்டுவிடுங்கள். உதாரணத்திற்கு, "சிகாகோ  ஆப்ரிக்காவில் தான் இருக்கிறது." என்று ஒருவர் உங்களிடம் அடித்து பேசுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள்," ஆமாமாம், ரொம்ப கரெக்ட்!", என்று சொல்லிவிட்டு வந்து உங்கள் ஸீட்டில் உட்கார்ந்து மனசுக்குள் சிரித்து கொள்ளுங்கள். அதோடு அந்த விஷயத்தை விட்டுவிடுங்கள். 


நாம் அப்படியெல்லாம் இல்லையே என்று எதிர்த்து பேசினால் அவர்கள் வீம்பு தான் அதிகமாகும்.அதுவுமல்லாமல் அட்லஸை எடுத்துவந்து சிகாகோ ஆப்ரிக்காவில் இல்லை என்பதை நிரூபிக்க முயலாதீர்கள். அவர்கள் தோல்வி அடைந்ததாகவும், அவமானபடுத்தப்பட்டதாகவும் எண்ணக்கூடும். அதனால், உங்கள் மேல் அவருக்கு வெறுப்பு வளரக்கூடும்.  அவருடனான உறவு பாதிக்கப்படுவதால் உங்களுக்கு அவரிடமிருந்து எப்போதாவது ஏதாவது  உதவி தேவைப்பட்டால் அப்போது அது உங்களுக்கு கிடைக்காமல் போகக்கூடும்.

அப்படியல்லாமல் நாம் பேசாமல் இருந்து விட்டால் ,கால போக்கில் அவர்கள் கருத்து தவறு என்பது பின்னர் வரும் சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டு விடும். அத்தோடு, "அவரா ரொம்ப  தங்கமான மனுஷன் யாரையும் ஒண்ணுமே சொல்லமாட்டார்." என்ற நற்சான்றிதழும் உங்களுக்கு இலவச இணைப்பாக கிடைக்கும்.


அதே போல் நம் கருத்து தவறாக இருந்தாலும் யார் சுட்டிக்காட்டினாலும் திருத்திக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

இவற்றோடு மிக முக்கியமாக நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நம்மை நாமே கிண்டல் செய்து கொள்ள தயாராக இருந்தால் தான் நம் ஆணவம் அழியும். ஆணவம் அழியும் போது பிறரிடம் கற்றுக்கொள்ளும் எண்ணம் வளரும். பிறரிடம் நமக்கு தெரியாததை கற்றுக்கொள்ளும் போது அறியாமை நீங்கி அறிவு வளரும். அறிவு விசாலப்படும் போது வெற்றிக்கான வழி திறக்கும்.


இந்த விஷயம் ரொம்ப பெரிசு ஒரு பதிவுல இதபத்தி எழுதி முடிக்க முடியாது. அதனால ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கேன். விஷயம் தெரிஞ்சவங்க சொன்னா தெரிஞ்சுக்க தயாரா இருக்கேன்.


இப்போ ரொம்ப வருஷம் முன்பு நான் படிச்ச, மறக்க முடியாத ஒரு ஜோக் இங்கே:




பைத்தியக்கார ஆஸ்புத்திரியில் :

டாக்டர் (பைத்தியத்திடம்) : என்ன எழுதற ?

பைத்தியம் : லெட்டர்.

டாக்டர் : யாருக்கு?

பைத்தியம் : எனக்கு தான்.

டாக்டர் : அப்படியா ! அதுல என்ன எழுதி இருக்கு ?

பைத்தியம் : அதெப்படி டாக்டர் இப்போ எனக்கு தெரியும், நாளைக்கு போஸ்ட் மென் வந்து லெட்டர் குடுத்து அதை படிச்சு பார்த்தா தானே தெரியும்.

(நானே பதிவெழுதி, நானே படித்து கொள்ளும் போது எனக்கு நினைவுக்கு வரும் ஜோக் இது.) :)))



திங்கள், ஜூன் 11, 2012

என் விரு(ழு )துகள்

நாம் ஆதர்சமாய் நினைக்கும் நபர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்படுவதே ஒரு பெரிய அதிர்ஷ்டம் தான். அவர்களிடமிருந்தே பாராட்டும் விருதும் கிடைப்பதென்றால் ....!!! விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அப்படிபட்ட ஒருவரிடமிருந்து இப்போது எனக்கு ஒரு விருது கிடைத்திருக்கிறது. ஏற்கனவே பிப்ரவரி மாதம் மதுராகவி ரமாஜி ஒரு விருது கொடுத்தார். விருது பெற்றால் என்ன செய்யவேண்டும் என்று கூட சரியாக தெரியாததால் வழக்கம்போல் குழம்பிக்கொண்டே இருந்துவிட்டேன். இது தான் அந்த விருது.



நன்றி ரமாஜி !

இந்த முறை விருது வழங்கி இருப்பவர் திருமதி.உஷா ஸ்ரீகுமார் அவர்கள். மங்கையர் மலரில் இவர்களின் பதிவுகளை பல வருடங்களாக படித்திருக்கிறேன். இவரது கலை பயிற்சிகள் பலவற்றை வீட்டில் செய்து பார்த்திருக்கிறேன்.

இவர்கள் மகனை பள்ளியில் சேர்க்க நேர்காணலுக்கு தயார் செய்ததை பற்றி நகைச்சுவையாக ஒரு முறை எழுதி இருந்தார். "எத்தனை முறை சொல்லி கொடுத்ததும் அவனுக்கு உன் அம்மா பெயர் என்ன என்று கேட்டால் "உச்சா தீகுமார் " என்று தான் சொல்லவந்தது." (என்ன சரியா மேடம் ?, அந்த உங்கள் மகன் இப்போது என்ன செய்கிறார்?)

திருமதி.உஷா ஸ்ரீகுமார் அவர்கள் கொடுத்த விருது.


விருது பெறுபவர்களுக்கு சில விதிகள் சொல்லபட்டிருக்கின்றன.
அவர்கள் தங்களை பற்றி சில வார்த்தைகள் மூலம் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். விருது கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும் ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதுகளை பகிர்ந்தளிக்க வேண்டும்.

உஷா மேடம் !

இந்த விருதுக்கு நான் தகுதியானவள் தானா என்ற குழப்பம் இன்னமும் நீடித்தாலும், "பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று முதலில் நம்பவேண்டும்" என்று என் அம்மா சொல்வார். அதனால்  எழுத்துலகில் பலவருடங்களாக அனுபவமுள்ள நீங்கள் தருவதை பணிவோடு பெற்றுக்கொள்கிறேன். நன்றி மேடம் !

இப்போது என்னை பற்றி :

என்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.

ஒரு மத்தியதர குடும்பத்தின் தலைவி. ஆனால், நான் பிறந்த இந்த நாட்டிற்கு எதாவது உருப்படியாய் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு (எழுபத்தி ஐந்து ரூபாய் ). அது தான் என் அங்கீகரிக்கபட்ட முதல் எழுத்து பணி .

2010இல் மங்கையர் மலரில் வெளியான அரை பக்க கட்டுரை.

இப்போது ஒரு வருடமாக வலைத்தளத்தில் எழுதி கொண்டிருக்கிறேன்.

வாழ்வின் மிக கடினமான சமயத்தில் என் தலைவன் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி வைத்தார். என் அக்கா, "உனக்கு நன்றாக எழுதவருகிறது. நீ பிளாக்கர் இல் எழுதேன்." என்ற போது பிளாக்கர் என்பது ஏதோ பர்கர் போன்ற வெளிநாட்டு தின்பண்டம் என்று நினைத்துவிட்டேன். :)))

நான் வலைத்தளத்தில் எழுதி இந்த இடத்தில் இருப்பேன் என்று ஒரு வருடம் முன்பு யாரவது சொன்னால் நிச்சயமாக நம்பியிருக்க மாட்டேன். எனக்கு ஊக்கமளித்து வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்.

இந்த விருதை பகிர்ந்து கொள்ளும் பதிவர்கள்.

under the mango tree : இவரை என் தமக்கை என்பதால் இங்கே முன்மொழியவில்லை. விருது பெறுவதற்கான எல்லா தகுதிகளும் உடைய பல்துறை நிபுணத்துவம் பெற்றவர். இவரை வலையுலகத்தில் அறிமுகம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இதை கருதுகிறேன். அக்கா, "நீங்கள் உங்கள் வசதிப்படி ஆங்கிலத்திலேயே எழுதலாம்."

மதுராகவி : நானும் இவரும் ஒரே சமயத்தில் தான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தோம். ஒரு புத்தகமாவது எழுத வேண்டும் என்பது அவர் லட்சியம் என்று ஒருமுறை எழுதி இருந்தார். அப்போது தான் எனக்கு தோன்றியது, "ஆஹா ! இத்தனை பெரிய இலட்சியங்களோடு இவர்கள் வாழும்போது நாம் அடுத்த வேளை சமைப்பதை தவிர வேறு சிந்தனைகள் இல்லாமல் வாழ்கிறோமே", என்று.

தக்குடு : என் சகோதர்களில் ஒருவன். இவன் எழுத்துக்களை படித்தால் எல்லோருக்கும் இவனை "எங்கள் வீட்டு பிள்ளை" என்று சொல்ல தோன்றும். நக்கல்,குறும்பு மட்டுமல்ல ஆன்மீகத்தையும் ரசிக்கும்படி எழுதவல்லவன்.

தம்பி!, உன்னை ஒருமையில் குறிப்பிட்டிருப்பதை நீ பொருட்படுத்த மாட்டாய் என்று நினைக்கிறேன்.

கவிநயா : வலையுலகத்தில் புகுந்த புதிதில் பரதத்தை பற்றி அறிய தேடி அலைந்த போது இவர்களின் தளத்திற்குள் புகுந்து விட்டேன். ஆன்மீகத்தை எப்படியெல்லாம் கடைப்பிடிக்க முடியும் என்று இவர்களை பார்த்து தான் தெரிந்து கொள்ளமுடியும். கவிதையால்,நடனத்தால், கட்டுரைகளால், வாழ்க்கை முறையாலும் ஆன்மிகம் வளர்க்கிறார் இவர்.

எல்.கே : "அதீதம்" இணைய பத்திரிகையின் ஆசிரியர். தொழில் நுட்ப செய்திகைளை தந்து மிகவும் உதவியாக இருக்கிறார். இவர் தனது மகளை ஆச்சர்யத்துடன் நோக்கி எழுத்தும் பதிவுகள் சுவாரசியமானவை.

விருதை என்னோடு பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.