புதன், நவம்பர் 16, 2011

தங்கச்சி பாப்பா பிறந்தநாள் (நவம்பர் 19)





"ஐயோ பாவம் நீ !, பேர்சொல்ல உனக்கு ஒரு ஆண்வாரிசு இல்லையே?"

நான் மனதிற்குள் :  "இங்கே எனக்கு என்ன சாம்ராஜ்ஜியமா இருக்கிறது , அடுத்த  பட்டத்திற்கு இளவரசன்  இல்லாமல் தவிப்பதற்கு?"

"பையன் தான் வச்சு சோறு போடுவான்."

நான் மனதிற்குள் :      "நான் என்ன நாயா..? பூனையா...? என்னை வச்சு ஒருத்தர் சோறுபோட.இல்ல எல்லா பையன்களும் அவங்க அவங்க அப்பா அம்மாவ வச்சு சோறு போட்டுகிட்டு தான்  இருக்காங்களா?"

"உனக்கு ஆம்பள பையன் இல்லையே யாரு கொள்ளி போடுவா? யாரு கர்மா பண்ணுவா?" பாவம் பண்ணினவங்களுக்கு தான் கர்மா பண்ண புள்ளைல்லாம இருக்குமாம். ஏதோ ஒரு புஸ்தகத்துல படிச்சேன்."

நான் மனதிற்குள் : அந்த கவலை உங்களுக்கெதற்கு? என் பாவத்தையும் புண்ணியத்தையும் கணக்கு பண்ண நீங்கள் என்ன சித்ரகுப்தனா? பையன் இருக்கிரவங்களுக்குமே அவங்க செத்ததுக்கப்புறம், யாரு கொள்ளி போடறங்கன்னு  தெரியாது. அதைப்பற்றி எனகென்ன கவலை."


இதை யாரும் தயவு செய்து கற்பனை என்று எண்ணி விட வேண்டாம். இப்படியெல்லாம் அடுத்தவர் மனதை புண்படுத்துவதற்காகவே பேசுபவர்கள்  இன்னமும் நிறையவே இருக்கிறார்கள். நான் அவர்கள் பேசுவதை இப்போதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.


"குழந்தை பெறுவதில் அல்லது ஆண் குழந்தை பெற்றதில் உங்கள் சாதனை என்ன?" என்று கேட்கவேண்டும் என்று நினைப்பேன் .ஆனால், இவர்களுடன் விவாதம் செய்வதை விட இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்து விட்டேன்.

என்னிலை எவ்வளவோ மேல். இளம் விதவையான ஒரு தோழியும், குழந்தை இல்லாத ஒரு தோழியும் படும் அவமானங்கள் வார்த்தையால் விவரிக்க முடியாதவை.

அவர்கள் தங்கள் நிலையை என்னிடம் சொல்லி வருந்திய  போது அவர்களிடம் நான் கேட்ட கேள்வி இது தான்," உங்களுக்கு ஜான்சி ராணி லக்ஷ்மி பாயை தெரியுமா?"

"தெரியும்"

"யார்?"

"சுதந்திர போரட்ட வீராங்கனை."

"அப்படியானால் ஜான்சி ராணி என்றதும் உங்களுக்கு என்ன நினைவிற்கு வருகிறது?"

"அவர்களின் வீரமும், தேச பக்தியும்."

"அவர்களுக்கு குழந்தை இல்லை(ஒரு மகன் பிறந்து சிறிது நாட்களிலேயே இறந்து விட்டது) என்பதும், அவர்கள் விதவை என்பதும் நினைவிற்கு வரவில்லையல்லவா?"

"!!!!!!!!!!"

நாம், நம் செயல்களினாலேயே அறியபடுகிறோம். நம் பாக்யங்களினால் அல்ல .

வாழ்கையில் உருப்படியாய் ஏதும் சாதிக்காதவர்கள் தான், தன் பாக்யங்களையே தன் சாதனைகள் போல் காட்டிகொள்வார்கள்.

ஜான்சி ராணி காசியில் ஒரு அந்தண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இளம் வயதிலேயே போர் கலைகள் பயிற்சி மற்றும் கல்வியறிவும் பெற்றிருந்தார். ஜான்சியின் மகாராஜா கங்காதர் ராவ் லக்ஷ்மி பாயை அவர் வீரம், அறிவு, அழகு,குணம் ஆகியவற்றை விரும்பியே மணந்தார்.

ராணி லக்ஷ்மி பாயின் இயற்பெயர் மணிகர்ணிகா, செல்லமாக மனு. மனுவிற்கு ராஜா கங்காதர் ராவ்வுடன் திருமணம் நடந்த போது அவர் பதிமூன்று வயது குட்டி பெண் (இந்த காலமாக இருந்தால் அம்மா கட்டிகொடுக்கும் லஞ்ச்சை எடுத்து கொண்டு ஸ்கூல் போகும். ஏழாவதோ, எட்டாவதோ படித்து கொண்டிருந்திருப்பார்). 

ஆனால், மனு குட்டி அந்த வயதிலேயே ஒரு ராஜ்ஜியத்தின் மகாராணி பொறுப்பை ஏற்றார். 


சொத்திற்காக புகுந்த வீட்டில் கலகம் செய்யும்  பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், ராணி லக்ஷ்மி பாயோ தன் கணவரின் ராஜ்யதுக்காக அந்நியர்களுடன் தான் போர் புரிந்தார், குடும்பத்துக்குள் அல்ல.

மகாராஜா கங்காதர் ராவ் இறந்த பின் ஜான்சி மக்களை தன் சொந்த குழந்தைகளை போலவும், ஜான்சியை தன் உயரினும் மேலாகவும் காத்தார் என்பது வரலாறு சொல்லும் செய்தி.

அந்த  காலத்தில், கணவன் இறந்து விட்டால் உடன் கட்டை ஏறுவார்கள். இந்த காலத்தில் பிறந்த வீட்டிற்கு போய் விடுவார்கள். ஆனால், லக்ஷ்மி பாயோ தன் கணவரின் விருப்பப்படி அவர்கள் ச்விகார  புத்திரனை அரியணையில் அமர்த்தினார். அதற்கு எதிர்ப்பு வந்த போது மகனை முதுகில் சுமந்தபடி போர்களத்தில் பாய்ந்தார்.

பெற்ற குழந்தையையே ஆயாவிடம் விட்டு செல்லும் பெண்களும் உண்டு. ராணி நினைத்திருந்தால் யாராவது தாதியிடம் குழந்தையை விட்டு விட்டு போருக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

மகாராணி லக்ஷ்மி பாய் இந்த உலகத்தில் வெறும் இருபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்(இளம் பெண்). அவரை விட இரண்டு மூன்று மடங்கு அதிக வருடங்கள் வாழ்ந்து எத்தனை பேர் சாமானியர்களாகவே மடிகிறோம்.

இதுபோன்ற தலைமை பண்புகள் இயல்பிலேயே அமைய பெற்ற மகாராணி லக்ஷ்மி பாயை என் ஆதர்ச தலைவியாக எண்ணுகிறேன். 

எனவே, நம்  பாக்கியங்களை குறித்து நினைக்காமல், நம் செயல்களை திருத்திக்கொண்டு, நம் வாழ்க்கையை பயனுள்ளதாக ஆகிக்கொள்ளவேண்டும்.

" வாழ்பவர் கோடி, மறைபவர் கோடி 
 மக்களின் மனதில் நிற்பவர் யார் ?"

"மாபெரும் வீரர், மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்."




                                               *************************




டெயில் பீஸ் : தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு. 

என் பெரியவளிடம் "நவம்பர் 19 உன் தங்கச்சி பிறந்த நாள்" என்று சொன்னால். 

"ஜான்சி ராணிக்கும் அன்றைக்கு தான் பிறந்த நாள்" என்று சட்டேன்று சொல்லுவாள். 

"சபாஷ் மகளே !"


செவ்வாய், நவம்பர் 01, 2011

லக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி 3

மேடையில் பல விதமான லக்ஷ்மி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. க்ருஹ லக்ஷ்மி, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமன் காலடியில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி,விநாயகருடன் கூடிய லக்ஷ்மி, ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தில் சீதையாக உள்ள லக்ஷ்மி இப்படி பல விதமான லக்ஷ்மிகள்.

எனக்கு பாற்கடலில் இருந்து கற்பக விருக்ஷம், காமதேனு, தன்வந்திரி, சந்திரன் முதலியரோடு ஆவிர்பவித்து வரும் லக்ஷ்மி, பூஜை செய்ய கொடுக்கப்பட்டது. சந்நிதிக்கு நேரே உட்கார வைக்கப்பட்டேன். எனக்கு ரொம்ப குற்ற உணர்வாக இருந்தது. "நான் தான் இதையெல்லாம் கேலி செய்தேனே ! என்னையே பூஜை செய்ய வைத்து, இதென்ன விளையாட்டடி ?" என்று கேட்டேன்.

"இதென்ன, இனிமேல் தான் இருக்கிறது பார் !" என்று அவள் முடிவு செய்திருக்க, அதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

பூஜை தொடங்கியது. அவரவர் லக்ஷ்மிக்கு உபசாரங்கள் குருக்கள் சொல்ல சொல்ல செய்ய ஆரம்பித்தோம். நான் லக்ஷ்மிக்கு ஒவ்வொரு முறை சேவை செய்யும் போதும் முன்னால் இருக்கும் தன்வந்திரி பகவான் ஆட ஆரம்பித்தார். "அட ! இதென்னடா வம்பாய் போய்விட்டதே ! யாருக்கோ பத்திரமாய் திருப்பி தரவேண்டிய மூர்த்தி இப்படி ஆடுகிறதே ! உடைந்துவிட்டால் என்ன செய்வது !"   என்று என்னை கவலை பிடித்து கொண்டது. நான் தன்வந்திரியை பிடித்து கொண்டேன். ஒரு கையால் தன்வந்திரியை பிடித்து கொண்டே பூஜையை தொடர்ந்தேன். ஒருவேளை நம்ம health ஆட்டம் காண்ணறது என்பதை தான் இவர் symbolic ஆ சொல்றாரோ என்று கூட தோன்றியது.

லக்ஷ்மி அஷ்டோத்தரம்,கனகதாரா ஸ்தோத்ரம் எல்லாம் சொல்லி பூஜை நடந்தது. பூஜையின் நடுவில் சற்றே திரும்பி பார்த்தேன். கூட்டம் கூட்டமாய் மக்கள். மக்களுக்கும் மேடைக்கும் நடுவில் ஒரு கயறு கட்டி விட்டிருந்தார்கள். என் சின்ன பெண், "அம்மாவிடம் போவேன்", என்று என் அம்மாவை படுத்திகொண்டிருந்தாள்.

ஒருவழியாய் பூஜை நல்ல படியாய் முடிந்தது. அங்கு பிரசாதமாக பச்சை குங்குமம்,பச்சை ப்ளௌஸ்  பிட்,பச்சை கேசரி,மஞ்சள்,திருமாங்கல்ய சரடு முதலானவை வைக்கபட்டிருந்தன. அவற்றை எங்களையே எடுத்து கொள்ள சொன்னார்கள். 

பின்னர், பூஜை செய்தவர்கள் அவரவர் மூர்த்தங்களை எடுத்து கொண்டு சந்நிதிக்கு வந்து பிரசாதம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றார்கள். நாங்கள் பூஜை மட்டும் தானே செய்தோம் அதனால் உபயதரர்களே அவரவர் லக்ஷ்மியை எடுத்துக்கொண்டு சென்று பிரசாதம் வாங்கிகொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்.

முடிவில் டான்ஸ் ஸ்கூல் குழந்தைகளும் நாங்களும் அழைக்கப்பட்டோம். குழந்தைகள் அனைவரையும் வரிசையாக நின்று குரு வணக்கம் செய்ய சொன்னார்கள். குழந்தைகளும் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் சிறு மலர் சரம் சூட்டி ஒரு குபேரன் பொம்மை (நான் கேலி செய்தேனே ! அதே தான் ) பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயம் கொடுத்தார்கள்.

பின்னர், டான்ஸ் டீச்சரை கர்ப்ப கிருஹதிற்குள் அழைத்தார்கள். டீச்சரும் ஏறி நின்றார். பின்னர், கூட்டத்தில் குருக்கள் கண்களால் துழாவினார். அவர் பார்வை என்மேல் நின்றது. என்னை கை காட்டி,"நீங்க வாங்க !" என்றார்.

நானும், "சரி, டீச்சர் பெண் என்பதால் ஆண்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்ய முடியாது. அதனால், அவருக்கு மாலை போட நம்மை அழைக்கிறார்கள் போலிருக்கிறது." என்று எண்ணியபடியே மேலேறினேன்.

நான் மேலேறி நின்றதும் டீச்சரிடம்,"இவங்க தானே உங்களுக்கு அடுத்தபடி (assistant) !?" என்றார் குருக்கள். நான் திரு திருவென விழிக்க டீச்சரோ சட்டேன்று ,"ஆமாம்!" என்றுவிட்டார்.

நான்,"என்ன மிஸ்.....!?" என்று அதிர்ச்சியோடு நோக்க, அவரோ என்னை "எல்லாம் சரிதான் !" என்பது போல் பார்வையாலேயே கையமர்த்தினார். 

டீச்சருக்கு ஒரு ஒண்ணரையடி லக்ஷ்மி பொம்மையும்,குபேரன் பொம்மையும், பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயமும் தந்தார்கள்.

அடுத்ததாக எனக்கும் அதேபோல் ஒண்ணரையடி லக்ஷ்மி பொம்மையும்,குபேரன் பொம்மையும், பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயமும் தந்தார்கள்.

எல்லோரும், "உங்களுக்கு அதிர்ஷ்டம் ! " என்றார்கள்.

குழந்தைகள், "அந்த அம்பாள தாம்மா! கொஞ்சம் கொஞ்சிட்டு தரோம் !" என்றார்கள்.

"ம்ம்ம்... நான் பணம் கொடுத்து குபேரன் பொம்மை வாங்கினேன். இவள் என்னை கிண்டல் செய்தாள்,இவளுக்கு பணம் தராமலே, மூன்று குபேரன்,லக்ஷ்மி எல்லாம் கிடைச்சிருக்கு." என்று என் அம்மா எல்லோரிடமும் சொன்னார்கள்.


வீட்டிற்கு வந்து ஆரத்தி எடுத்து கொலுவில் வைத்தோம். எந்த குபேரன் பொம்மையை என் அம்மா வாங்கியதை கேலி செய்தேனோ அதே குபேரன் பொம்மை எனக்கும், குழந்தைகளுக்கும் ஆளுக்கொன்றாய் மூன்று வந்து வீட்டில் உட்கார்ந்திருக்கின்றனர்.

லக்ஷ்மி பொம்மையை கொலு பொம்மைகள் வைக்கும் பெட்டிக்குள் வைத்து மேலே வைக்க முயற்சி செய்தேன், முடியவில்லை. தனியாக ஒரு அட்டை பெட்டி கடையில் இருந்து வாங்கிவந்தேன். அதனுள்ளும் வைக்க முடியாமல் பெரியதாக இருப்பதால், என்னை தினமும் கேலி செய்து கொண்டு என் கண்ணெதிரிலேயே ஹால்லில் இருக்கிறாள் என் ச்வீகார புத்ரி.


ச்வீகார புத்ரி 

அடுத்தவருடம் இவள் உயரத்திற்கு தகுந்தார் போல ஒரு மகாவிஷ்ணுவை வாங்கி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தலைவரிடம் கூறியிருக்கிறேன். 

 பின்னே, பெண்ணை பெற்றுவிட்டால் பொறுப்பு வேண்டாமா !?

"வருந்தி அழைத்தாலும் வாராது, வாரா !
பொருந்துமெனில் போமினேன்றால் போகா"


சிறுவயதில் செல்வத்தை பற்றி படித்தது நினைவிற்கு வந்தது.

மூன்று குபேரர்கள்



அது சரி, சகோதர சகோதரிகளே! நீங்கள் சொல்லுங்கள், எல்லோரும் "உங்களுக்கு அதிர்ஷ்டம்! உங்களுக்கு அதிர்ஷ்டம்!" என்றார்களே. எனக்கு என்ன கிடைத்தது "அருளா?" "பொருளா?"