நான் மனதிற்குள் : "இங்கே எனக்கு என்ன சாம்ராஜ்ஜியமா இருக்கிறது , அடுத்த பட்டத்திற்கு இளவரசன் இல்லாமல் தவிப்பதற்கு?"
"பையன் தான் வச்சு சோறு போடுவான்."
நான் மனதிற்குள் : "நான் என்ன நாயா..? பூனையா...? என்னை வச்சு ஒருத்தர் சோறுபோட.இல்ல எல்லா பையன்களும் அவங்க அவங்க அப்பா அம்மாவ வச்சு சோறு போட்டுகிட்டு தான் இருக்காங்களா?"
"உனக்கு ஆம்பள பையன் இல்லையே யாரு கொள்ளி போடுவா? யாரு கர்மா பண்ணுவா?" பாவம் பண்ணினவங்களுக்கு தான் கர்மா பண்ண புள்ளைல்லாம இருக்குமாம். ஏதோ ஒரு புஸ்தகத்துல படிச்சேன்."
நான் மனதிற்குள் : அந்த கவலை உங்களுக்கெதற்கு? என் பாவத்தையும் புண்ணியத்தையும் கணக்கு பண்ண நீங்கள் என்ன சித்ரகுப்தனா? பையன் இருக்கிரவங்களுக்குமே அவங்க செத்ததுக்கப்புறம், யாரு கொள்ளி போடறங்கன்னு தெரியாது. அதைப்பற்றி எனகென்ன கவலை."
இதை யாரும் தயவு செய்து கற்பனை என்று எண்ணி விட வேண்டாம். இப்படியெல்லாம் அடுத்தவர் மனதை புண்படுத்துவதற்காகவே பேசுபவர்கள் இன்னமும் நிறையவே இருக்கிறார்கள். நான் அவர்கள் பேசுவதை இப்போதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.
"குழந்தை பெறுவதில் அல்லது ஆண் குழந்தை பெற்றதில் உங்கள் சாதனை என்ன?" என்று கேட்கவேண்டும் என்று நினைப்பேன் .ஆனால், இவர்களுடன் விவாதம் செய்வதை விட இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்து விட்டேன்.
என்னிலை எவ்வளவோ மேல். இளம் விதவையான ஒரு தோழியும், குழந்தை இல்லாத ஒரு தோழியும் படும் அவமானங்கள் வார்த்தையால் விவரிக்க முடியாதவை.
அவர்கள் தங்கள் நிலையை என்னிடம் சொல்லி வருந்திய போது அவர்களிடம் நான் கேட்ட கேள்வி இது தான்," உங்களுக்கு ஜான்சி ராணி லக்ஷ்மி பாயை தெரியுமா?"
"தெரியும்"
"யார்?"
"சுதந்திர போரட்ட வீராங்கனை."
"அப்படியானால் ஜான்சி ராணி என்றதும் உங்களுக்கு என்ன நினைவிற்கு வருகிறது?"
"அவர்களின் வீரமும், தேச பக்தியும்."
"அவர்களின் வீரமும், தேச பக்தியும்."
"அவர்களுக்கு குழந்தை இல்லை(ஒரு மகன் பிறந்து சிறிது நாட்களிலேயே இறந்து விட்டது) என்பதும், அவர்கள் விதவை என்பதும் நினைவிற்கு வரவில்லையல்லவா?"
"!!!!!!!!!!"
நாம், நம் செயல்களினாலேயே அறியபடுகிறோம். நம் பாக்யங்களினால் அல்ல .
வாழ்கையில் உருப்படியாய் ஏதும் சாதிக்காதவர்கள் தான், தன் பாக்யங்களையே தன் சாதனைகள் போல் காட்டிகொள்வார்கள்.
ஜான்சி ராணி காசியில் ஒரு அந்தண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இளம் வயதிலேயே போர் கலைகள் பயிற்சி மற்றும் கல்வியறிவும் பெற்றிருந்தார். ஜான்சியின் மகாராஜா கங்காதர் ராவ் லக்ஷ்மி பாயை அவர் வீரம், அறிவு, அழகு,குணம் ஆகியவற்றை விரும்பியே மணந்தார்.
ராணி லக்ஷ்மி பாயின் இயற்பெயர் மணிகர்ணிகா, செல்லமாக மனு. மனுவிற்கு ராஜா கங்காதர் ராவ்வுடன் திருமணம் நடந்த போது அவர் பதிமூன்று வயது குட்டி பெண் (இந்த காலமாக இருந்தால் அம்மா கட்டிகொடுக்கும் லஞ்ச்சை எடுத்து கொண்டு ஸ்கூல் போகும். ஏழாவதோ, எட்டாவதோ படித்து கொண்டிருந்திருப்பார்).
ஆனால், மனு குட்டி அந்த வயதிலேயே ஒரு ராஜ்ஜியத்தின் மகாராணி பொறுப்பை ஏற்றார்.
சொத்திற்காக புகுந்த வீட்டில் கலகம் செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், ராணி லக்ஷ்மி பாயோ தன் கணவரின் ராஜ்யதுக்காக அந்நியர்களுடன் தான் போர் புரிந்தார், குடும்பத்துக்குள் அல்ல.
மகாராஜா கங்காதர் ராவ் இறந்த பின் ஜான்சி மக்களை தன் சொந்த குழந்தைகளை போலவும், ஜான்சியை தன் உயரினும் மேலாகவும் காத்தார் என்பது வரலாறு சொல்லும் செய்தி.
அந்த காலத்தில், கணவன் இறந்து விட்டால் உடன் கட்டை ஏறுவார்கள். இந்த காலத்தில் பிறந்த வீட்டிற்கு போய் விடுவார்கள். ஆனால், லக்ஷ்மி பாயோ தன் கணவரின் விருப்பப்படி அவர்கள் ச்விகார புத்திரனை அரியணையில் அமர்த்தினார். அதற்கு எதிர்ப்பு வந்த போது மகனை முதுகில் சுமந்தபடி போர்களத்தில் பாய்ந்தார்.
பெற்ற குழந்தையையே ஆயாவிடம் விட்டு செல்லும் பெண்களும் உண்டு. ராணி நினைத்திருந்தால் யாராவது தாதியிடம் குழந்தையை விட்டு விட்டு போருக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
மகாராணி லக்ஷ்மி பாய் இந்த உலகத்தில் வெறும் இருபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்(இளம் பெண்). அவரை விட இரண்டு மூன்று மடங்கு அதிக வருடங்கள் வாழ்ந்து எத்தனை பேர் சாமானியர்களாகவே மடிகிறோம்.
இதுபோன்ற தலைமை பண்புகள் இயல்பிலேயே அமைய பெற்ற மகாராணி லக்ஷ்மி பாயை என் ஆதர்ச தலைவியாக எண்ணுகிறேன்.
எனவே, நம் பாக்கியங்களை குறித்து நினைக்காமல், நம் செயல்களை திருத்திக்கொண்டு, நம் வாழ்க்கையை பயனுள்ளதாக ஆகிக்கொள்ளவேண்டும்.
" வாழ்பவர் கோடி, மறைபவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் ?"
"மாபெரும் வீரர், மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்."
*************************
டெயில் பீஸ் : தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு.
என் பெரியவளிடம் "நவம்பர் 19 உன் தங்கச்சி பிறந்த நாள்" என்று சொன்னால்.
"ஜான்சி ராணிக்கும் அன்றைக்கு தான் பிறந்த நாள்" என்று சட்டேன்று சொல்லுவாள்.
"சபாஷ் மகளே !"