தலைப்பை பார்த்தவுடனேயே எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும். ஆமாங்க, இந்த "ஈகோ" ன்னு ஸ்டைலா ஆங்கிலத்தில் சொல்லப்படற விஷயம் என்னன்னு ரொம்ப நாளா யோசிச்சிகிட்டே இருந்தேன்.
"ஈகோ" ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு என்னோட ஈகோவை விட்டுவிட்டு ஆங்கில அகராதியை புரட்டிப்பார்த்தேன். அதுல "நான் என்னும் அகங்காரம்" அப்படின்னு அர்த்தம் போட்டிருந்தது.
"நான்" என்னும் எண்ணம் அழிய வேண்டும் அதுவே மனிதன் உயர்வதற்கான வழின்னு எல்லா பெரியவங்களும் சொல்லியாச்சு. ஆனா,"நான் தான் பெரியவன் "ன்னு சண்டை வராத இடமே இல்லைன்னு தான் தோணுது.
இந்த விஷயத்துல்ல எனக்கு தோணினதை சொல்லலாமென்று நினைக்கிறேன்.
இந்த "ஈகோ"வால வீட்ல,ஆபீஸ்ல,பொது இடத்துல எங்க சண்டை வந்தாலும் அதனால வேலை பாதிக்கபடுது,உறவுகள் பாதிக்கப்படுது.
அதனால, "நான்" முக்கியமில்லை. இப்போ இந்த வேலை நல்லவிதமா முடியணும் அதுதான் முக்கியம் அப்படிங்கிற பொறுப்புணர்ச்சி வந்துட்டா ஆட்டோமட்டிக்கா நாம விட்டுகொடுக்க தயாராகி விடுவோம்.
முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா,செயல்படுத்தி பார்த்தால் அதனால விளையற நன்மைகளை பார்க்கும்போது நமக்கே விட்டுகொடுக்கிறது ஒண்ணும் பெரிய தியாகமில்லை, இதில் நம் தன்மானம் எதுவும் குறைஞ்சிட போறதில்லைன்னு புரியும்.
யாராவது நம்மிடம் அகங்காரத்தோடு பேசினால் அவர்கள் சொல்லவதை அப்படியே ஏற்று கொண்டுவிடுங்கள். உதாரணத்திற்கு, "சிகாகோ ஆப்ரிக்காவில் தான் இருக்கிறது." என்று ஒருவர் உங்களிடம் அடித்து பேசுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள்," ஆமாமாம், ரொம்ப கரெக்ட்!", என்று சொல்லிவிட்டு வந்து உங்கள் ஸீட்டில் உட்கார்ந்து மனசுக்குள் சிரித்து கொள்ளுங்கள். அதோடு அந்த விஷயத்தை விட்டுவிடுங்கள்.
நாம் அப்படியெல்லாம் இல்லையே என்று எதிர்த்து பேசினால் அவர்கள் வீம்பு தான் அதிகமாகும்.அதுவுமல்லாமல் அட்லஸை எடுத்துவந்து சிகாகோ ஆப்ரிக்காவில் இல்லை என்பதை நிரூபிக்க முயலாதீர்கள். அவர்கள் தோல்வி அடைந்ததாகவும், அவமானபடுத்தப்பட்டதாகவும் எண்ணக்கூடும். அதனால், உங்கள் மேல் அவருக்கு வெறுப்பு வளரக்கூடும். அவருடனான உறவு பாதிக்கப்படுவதால் உங்களுக்கு அவரிடமிருந்து எப்போதாவது ஏதாவது உதவி தேவைப்பட்டால் அப்போது அது உங்களுக்கு கிடைக்காமல் போகக்கூடும்.
அப்படியல்லாமல் நாம் பேசாமல் இருந்து விட்டால் ,கால போக்கில் அவர்கள் கருத்து தவறு என்பது பின்னர் வரும் சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டு விடும். அத்தோடு, "அவரா ரொம்ப தங்கமான மனுஷன் யாரையும் ஒண்ணுமே சொல்லமாட்டார்." என்ற நற்சான்றிதழும் உங்களுக்கு இலவச இணைப்பாக கிடைக்கும்.
அதே போல் நம் கருத்து தவறாக இருந்தாலும் யார் சுட்டிக்காட்டினாலும் திருத்திக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.
இவற்றோடு மிக முக்கியமாக நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நம்மை நாமே கிண்டல் செய்து கொள்ள தயாராக இருந்தால் தான் நம் ஆணவம் அழியும். ஆணவம் அழியும் போது பிறரிடம் கற்றுக்கொள்ளும் எண்ணம் வளரும். பிறரிடம் நமக்கு தெரியாததை கற்றுக்கொள்ளும் போது அறியாமை நீங்கி அறிவு வளரும். அறிவு விசாலப்படும் போது வெற்றிக்கான வழி திறக்கும்.
இந்த விஷயம் ரொம்ப பெரிசு ஒரு பதிவுல இதபத்தி எழுதி முடிக்க முடியாது. அதனால ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கேன். விஷயம் தெரிஞ்சவங்க சொன்னா தெரிஞ்சுக்க தயாரா இருக்கேன்.
இப்போ ரொம்ப வருஷம் முன்பு நான் படிச்ச, மறக்க முடியாத ஒரு ஜோக் இங்கே:
பைத்தியக்கார ஆஸ்புத்திரியில் :
பைத்தியக்கார ஆஸ்புத்திரியில் :
டாக்டர் (பைத்தியத்திடம்) : என்ன எழுதற ?
பைத்தியம் : லெட்டர்.
டாக்டர் : யாருக்கு?
பைத்தியம் : எனக்கு தான்.
டாக்டர் : அப்படியா ! அதுல என்ன எழுதி இருக்கு ?
பைத்தியம் : அதெப்படி டாக்டர் இப்போ எனக்கு தெரியும், நாளைக்கு போஸ்ட் மென் வந்து லெட்டர் குடுத்து அதை படிச்சு பார்த்தா தானே தெரியும்.
(நானே பதிவெழுதி, நானே படித்து கொள்ளும் போது எனக்கு நினைவுக்கு வரும் ஜோக் இது.) :)))