ஞாயிறு, டிசம்பர் 25, 2016

சொல்லாதே யாரும் கேட்டால்



“ரகசியம்” எத்தனை வகைப்படும் என்று கேட்டால், வெளியே சொல்லக்கூடியது, சொல்லக்கூடாதது என்று இருவகைப்படும் என்று சொல்லக்கூடாது. ரகசியம் என்றாலே அது வெளியே சொல்லக்கூடாதது என்று தான் பொருள். ஆனால், ரகசியம் என்பது என்ன? அடுத்தவர் நம்மிடம் “இதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.” என்று சொன்னால் அது தான் ரகசியம் என்று நாம் நினைத்திருப்போம். அதுதான் இல்லை. யாரும் நம்மிடம் ரகசியம் என்று சொல்லாவிட்டாலும் சில விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது. 


ரகசியம் இருவகைப்படும். ஒன்று நம்மைப்பற்றிய ரகசியம், இன்னொன்று பிறரைப்பற்றிய ரகசியம். இந்த இரண்டாவது வகையில் நம் உறவினர் தொடங்கி அரசாங்க ரகசியம் வரை அடங்கும்.


முதலில் நம்மைப்பற்றிய ரகசியத்தைப்பார்ப்போம். சிலர் பெருமை என்று நினைத்துக்கொண்டு வீடு கட்ட ஆன செலவு, புதிதாய் வாங்கிய நகை எல்லாவற்றையும் வெளியே சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இது தேவையா? இப்போதெல்லாம் எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. “நான் ஒருமாசம் வெளிநாட்டில் என் மகன் வீட்டில் போய் தங்கப்போகிறேன்.” “இதோ வீட்டைவிட்டு கிளம்பிட்டேன்” “இப்ப விமானநிலையம் வந்துட்டேன்.” என்றெல்லாம் வழிநெடுக சொல்லிக்கொண்டே போகிறார்கள். இது சில சமயம் ஆபத்தாகவும் முடியலாம் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை? எல்லாவற்றையும் எல்லாரிடமும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொதுவாக பெண்களுக்கு ரகசியத்தை பாதுகாக்க தெரியாது என்பார்கள். ஆனால், அது முழு உண்மையில்லை. தங்களுக்கு ஏதேனும் பாதிப்புவரும் என்றால் அந்த ரகசியத்தை பெண்கள் பாதுகாக்கவே செய்கிறார்கள்.


அடுத்தது, பிறரை பற்றிய ரகசியங்கள். இவை சுவாரசியம் மிகுந்தவை. இதில் அண்டை அயலார் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரும் அடங்குவர். “எனக்கு இன்னாரை பற்றிய இந்த ரகசியம் தெரியும்.” என்று சொல்லிக்கொள்வதில் ஒரு தனி இன்பம். சொல்வதையும் சொல்லிவிட்டு,”நான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.” என்று கோரிக்கை வேறு வைக்கப்படும். நீங்கள் காப்பாற்றாத ரகசியத்தை அடுத்தவர் மட்டும் காப்பாற்றுவார் என்பது என்ன நிச்சயம். மேலும், உங்களுக்கு கிடைத்த தகவல் உண்மையானதாக இல்லாதபட்சத்தில் நீங்கள் வதந்தியாளராகும் வாய்ப்பும் உண்டு. “அவ எப்பவுமே இப்படித்தான்ப்பா யாரையாவது பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லிகிட்டே இருப்பா. ஆனா, பாதிக்கு மேல பொய் தான்.” என்று உங்களைபற்றி பேசிக்கொள்வார்கள். 

       
நாம் பணிபுரியும் நிறுவனத்தின் ரகசியங்கள், அரசாங்க ரகசியங்கள், ராணுவ ரகசியங்கள், பிரபலங்களைப்பற்றிய ரகசியங்கள் என்று ஏகப்பட்டது இந்த வகையில் அடங்குகின்றன. முதல் வகையில் பாதிக்கப்படுபவர் நாம் தான் என்றால் இரண்டாவது வகையில் பாதிக்கப்படுவர்களின் பரப்பளவு மிகப்பெரியது. இதில், சுவாரசியத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நீங்கள் வெளிப்படுத்தும் ரகசியம் உங்களை சிக்கலில் மாட்டிவிடும் அபாயம் அதிகம். 


ஒருவர் உங்களை நம்பி சொன்ன விஷயத்தை வெளியே சொல்லிவிட்டு மாட்டிக்கொண்டப்பின்,”இதை வெளியே சொல்லகூடாதுன்னு நீ சொல்லவே இல்லீயே!!!” என்று சாமர்த்தியமாக கேட்காதீர்கள். நாம் தான் ஒரு விஷயத்தை வெளியே சொல்லலாமா கூடாதா என்று முடிவு செய்யவேண்டும். அதை எப்படி முடிவு செய்வது? ஒருவிஷயம் சம்பந்தபட்டவர்களுக்கோ இல்லை மற்றவர்களுக்கோ எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துமானால் அதை வெளியே சொல்லக்கூடாது.


சிலர் தெரிந்தே எதிர்மறையான விளைவுகளை பிறருக்கு ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லுவார்கள்.  உதாரணமாக சிலர்,“அவளுக்கும் உனக்கும் எதாவது சண்டையா என்ன? அவ நேத்து என்வீட்டுக்கு வந்து பேரனுக்கு பேர் சூட்டு விழா ரொம்ப பேரை கூப்பிடலை,ரொம்ப நெருங்கின வட்டத்துல தான் கூப்பிட்டிருக்கேன் ன்னு சொன்னா.  நீ தானே அவளோட நெருங்கின தோழி உன்னை கூப்பிட்டாளா?”இந்தமாதிரி கொளுத்தி போடுவார்கள். அதனால்  அவங்களை  பார்த்தாலே எல்லோரும் ஓட்டம் எடுப்பார்கள். அதோடு அவர்கள் சொன்னால்  யாரும் நம்பவும் மாட்டார்கள். மொத்தத்தில்  எல்லோரின்  நன்மதிப்பையும், நம்பிக்கையையும் இழந்து வாழவேண்டியிருக்கும்.


அதனால்,எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்படியாக தெரிந்தோ தெரியாமலோ பேசக்கூடாது. “அதெப்படி!! ஒவ்வொரு வாட்டியும் இப்படி யோசிச்சுகிட்டே இருக்கமுடியுமா? ஒரு ப்ளோல வந்துடுதுல்ல.” என்கிறீர்களா? 


அதற்குத்தான் தேவையில்லாத விஷயங்களை பேசாதீர்கள் என்பது. அதோடு, “நாம் முகநூல் உள் பெட்டியில் தானே அவர்களை பற்றி பேசினோம். அலைபேசியில் தானே சொன்னோம். இது யாருக்கு தெரிந்துவிடப்போகிறது!!” என்று எண்ண வேண்டாம். தொழிற்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் எதுவுமே ரகசியம் கிடையாது. எந்த ஒரு விஷயத்தையும் வெளியே சொல்வதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.

பயனுள்ளவற்றை மட்டும் பகிருங்கள். தேவையில்லாத விஷயங்கள் அது யாரைபற்றியதாக, எதை பற்றியதாக இருந்தாலும் வெளியே சொல்லாதீர்கள். ஏனென்றால் ரகசியம் என்பது உங்களோடே இருப்பது மட்டும் தான்.