திங்கள், பிப்ரவரி 19, 2018

ஒற்றைக்கொலுசு (சிறுகதை)


அதிகாலையில் வழக்கம் போல் எங்கள் பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு சென்றேன். அது ஒன்றும் பெரிய பூங்கா இல்லை. ஆனால், சிறியதாக இருந்தாலும் இந்த பகுதி மக்களால் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
சுற்றிலும், கொன்றை,நாவல்,அரசு முதலிய மரங்களும், நடைப்பாதையை ஒட்டி பலவகையான பூச்செடிகளும், ஒரு ஓரத்தில் குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல் முதலான சாதனங்களும், நடுவில் வட்ட வடிவில் செயற்கை நீருற்றும், சரியான இடைவெளியில் மின்விளக்குகளும், தண்ணீர் குழாய்களும் உண்டு.
அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர் மட்டுமே பெரும்பாலும் வருவார்கள். மாலையில் நடைபயிற்சி செய்வோர், விளையாட சிறுவர்,சிறுமியர், காற்று வாங்கி கதை பேச வருபவர்கள் என பலரும் வருவார்கள்.
நான் அலுவலகத்தில் இருந்து வர நேரமாகும் என்பதால் அதிகாலையிலேயே சுமார் பத்து சுற்றுகள் நடந்துவிட்டு போய் விடுவேன். மாலையில் என் மனைவி என் ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு வந்து மற்ற சிறுவர்களோடு விளையாட விட்டுவிட்டு, தானும் தோழிகளோடு பேசி பொழுதைப்போக்கி விட்டு வந்துவிடுவாள்.
இன்று நான் நடக்க ஆரம்பித்த போது, பூங்காவில் வயதான ஆண்கள் இரண்டு பேரும், வயதான பெண்மணி ஒருத்தரும், நடுத்தர வயது பெண்மணி ஒருத்தரும் என என்னைத்தவிர நான்கு பேர் மட்டுமே இருந்தார்கள். நேற்று இரவு பெய்த மழையின் ஈரம் இன்னமும் நடைபாதையில் மீதமிருந்தது. புல்வெளிகளில் நீர்த்துளிகள் பூத்திருந்தன.
மொத்தம் பத்து சுற்று கணக்கு, அரைமணி நேரத்திற்கு.
நடக்க ஆரம்பித்தேன்.





முதல் சுற்று....முடிந்து, இரண்டாவது சுற்று.....நடக்கும் போது தான் அதைப்பார்த்தேன். சேறு படிந்து, பாதி மண்ணில் புதைந்தும், பாதி வெளியே தெரிந்துமாய் அழகான ஒற்றை வெள்ளிக்கொலுசு.
அதன் பளபளப்பு அது சமீபத்தில் தான் வாங்கப்பட்டது என்பதை உணர்த்தியது. பாவம், யாருடையதோ. சிரமப்பட்டு நடந்து கொண்டிருந்த முதியவர்கள் பூங்காவின் மறுபக்கத்தில் இருந்தார்கள். அந்த நடுத்தர வயது பெண்மணி அப்போது தான் என்னை கடந்து சென்றிருந்தார்.
எடுக்கலாமா? வேண்டாமா? எடுத்து யாருடையது என்று கேட்டு கொடுத்து விடலாம். வேறு யார் கண்ணிலாவதுபட்டால் அதை உரியவர்களிடம் சேர்ப்பார்கள் என்பது நிச்சயமில்லை. யாருடையது என்று எப்படி கண்டுபிடிப்பது? ஆனால், அதை யோசிக்க இப்போது நேரமில்லை.முதலில் இதை பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டு தான் மேற்க்கொண்டு யோசிக்க வேண்டும்.
சட்டென்று அதை எடுத்து என் அரை பேண்டின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நடையை தொடர்ந்தேன். ஏதோ தவறு செய்துவிட்டது போல் படபடப்பாக இருந்தது..
மூன்றாவது சுற்று....எனக்கு முன்னால் இதை கடந்து போனவர்கள் யாரவது இதை பார்த்திருப்பார்களோ? பார்த்துவிட்டு நமக்கேன் வம்பு என்று போயிருப்பார்களோ? இப்போது அதே இடத்தை மீண்டும் கடக்கும் போது, அந்த கொலுசு அங்கேயில்லாததை கண்டு நான் எடுத்ததை ஊகித்துவிடுவார்களோ? பார்த்தால் படித்தவனாய் தெரிகிறான், இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறானே என்று நினைப்பார்களோ? ஆனால், நான் உரியவரிகளிடம் இதை ஒப்படைக்கத்தானே எடுத்தேன், மற்றவர் நினைப்பதை பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?
நான்காவது சுற்று....இதற்கு உரியவரை எப்படி கண்டுபிடிப்பது? இது நிச்சயம் சிறு குழந்தைகள் அணியும் கொலுசு இல்லை, பெரியதாக இருக்கிறது. என்னை கடந்து நடந்து சென்ற இரு பெண்களின் கால்களையும் பார்த்தேன். அவர்கள் காலில் ஒற்றை கொலுசு இல்லை. அதோடு அது சேற்றில் சிக்கியிருந்த விதத்தை பார்த்தால் நிச்சயம் நேற்று மாலையிலேயே தவறி விழுந்திருக்கவேண்டும்.
ஐந்தாவது சுற்று...பூங்காவை பராமரிக்கும் கேசவன் சாரிடம் கொடுத்து யாருடையது என்று விசாரித்து கொடுத்துவிட சொல்லலாமா? வேண்டாம்! பூங்கா பராமரிப்பிற்கு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டிருந்தார், ஒருவேளை இது அதற்கு உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்து விடுவார்.
ஆறாவது சுற்று....போலீஸில் ஒப்படைத்து விடலாமா? அவர்கள் எப்படி உரியவரை கண்டுபிடிப்பார்கள்? “சின்ரெல்லா” கதையில் வருவது போல் இந்த ஒற்றை கொலுசை ஓவ்வொரு வீடாக எடுத்து சென்று எல்லா பெண்களின் கால்களிலும் போட்டுப்பார்த்து யாருடையது என்று கண்டுபிடிப்பார்களா? ஊஹும்... அது சரியாக வராது.
ஏழாவது சுற்று...யாருடையது என்று கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறதே, பேசாமல் கோவில் உண்டியலில் போட்டு விடலாமா? அதற்கு இது அங்கேயே கிடந்திருக்கலாமே? இது கோவிலுக்கு சேரலாம் என்றால், பூங்கா பராமரிப்பிற்கு பயன்படலாம். வேறு யாருக்காவது பயன்படலாம், அவ்வளவு ஏன் உரியவர்களே இன்று மாலை திரும்ப வந்தால் அவர்கள் கண்ணிலேயே பட்டு மீண்டும் அவர்களிடமே போய் சேரலாம்? அப்படியிருக்க இதை நான் எடுத்திருக்க வேண்டியதே இல்லையே?
எட்டாவது சுற்று...ஒரு தாளில் என் பெயரையும், அலைபேசி எண்ணையும் எழுதி பூங்கா சுவற்றில் ஓட்டிவிட்டு, உரியவர்கள் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டு மற்றொரு கொலுசோடு என் வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கலாமா?
ஏன் எனக்கு அலுவலகத்தில் வேறு வேலையே இல்லையா? ஏற்கனவே வரும் விளம்பர அழைப்புகள் தொல்லை தாங்க முடியவில்லை, இதில் என் அலைபேசி எண்ணை பொது சுவற்றில் எழுதி வைத்துவிட்டால் அவ்வளவு தான்.
ஒற்றை கொலுசோடு கூட்டம் கூட்டமாய் பெண்கள் என் வீட்டை முற்றுகையிடுவது போல் ஒரு கணம் கற்பனை செய்து பார்த்தேன், பயங்கரமாயிருந்தது.
ஒன்பதாவது சுற்று...வேறொரு பெண்ணின் ஒற்றை கொலுசோடு நான் வீடு சென்றால் என் மனைவியின் எதிர்வினை என்னவாக இருக்கும்? ஏனோ மனைவியின் ஒற்றை சிலம்பை விற்க சென்ற கோவலன் நிலை நினைவிற்கு வந்தது. ஏன் எனக்கு இந்த வேண்டாத வேலை? அடுத்தவர் பொருள் அரைமணி நேரமாய் என் கையில் இருப்பதே இவ்வளவு மன உளைச்சலாய் இருக்கிறதே! இந்த பொது சேவை செய்யவில்லை என்று என்னை யார் கேட்டார்கள்? யானோ சேவகன்? யானே கள்வன்! என்று பாண்டியனாய் மாறி தீர்ப்பேழுதினேன்.
பத்தாவது சுற்று...இந்த பொறுப்பு நமக்கு ஆகாது. இதை இருந்த இடத்திலேயே திரும்ப போட்டுவிட்டால் என்ன? யார் கண்ணில் இது படவேண்டும் என்று இருக்கிறதோ, பட்டுவிட்டு போகட்டும். அது தான் சரி. யோசித்துக்கொண்டே கொலுசு கிடந்த இடத்திற்கு வந்த போது, யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு சட்டென்று அந்த கொலுசை நழுவ விட்டேன்.
மனதிலிருந்து பெரும் பாரம் இறங்கியது போலிருந்தது. வீட்டிற்கு வந்து ஆயாசத்தோடு சோபாவில் சாய்ந்தவனுக்கு, காப்பி கொண்டு வந்து கொடுத்த என் மனைவி, தயங்கியபடியே ” உங்க கிட்ட ஒண்ணு சொல்லணுங்க, நேத்து சாயங்காலம், பார்க்குக்கு பையன விளையாட கூட்டிகிட்டு போனேங்க. அப்பக்கூட என் ரெண்டு கொலுசும் கால்ல இருந்துதுங்க. வீட்டுக்கு வந்த பின்னாடி பார்த்தா என் ஒரு கால் கொலுச காணலைங்க. வீடு முழுக்க தேடிப்பார்த்துட்டேன். வீட்டுல விழல, தெருவுல விழுந்துச்சோ, பார்க்குல விழுந்துச்சோ தெரியல.ராத்திரி மழை வேற ஆரம்பிச்சிட்டதால திரும்ப போயி பார்க்க முடியல. இன்னிக்கி போயி தேடிப்பார்க்கணுங்க. இதப்பாருங்க ஒண்ணு மட்டும் இருக்குது,” என்றபடியே நீட்டிய ஒற்றை கொலுசு, பூங்காவில் பார்த்த கொலுசைப்போலவே இருந்தது.

ஞாயிறு, டிசம்பர் 25, 2016

சொல்லாதே யாரும் கேட்டால்



“ரகசியம்” எத்தனை வகைப்படும் என்று கேட்டால், வெளியே சொல்லக்கூடியது, சொல்லக்கூடாதது என்று இருவகைப்படும் என்று சொல்லக்கூடாது. ரகசியம் என்றாலே அது வெளியே சொல்லக்கூடாதது என்று தான் பொருள். ஆனால், ரகசியம் என்பது என்ன? அடுத்தவர் நம்மிடம் “இதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.” என்று சொன்னால் அது தான் ரகசியம் என்று நாம் நினைத்திருப்போம். அதுதான் இல்லை. யாரும் நம்மிடம் ரகசியம் என்று சொல்லாவிட்டாலும் சில விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது. 


ரகசியம் இருவகைப்படும். ஒன்று நம்மைப்பற்றிய ரகசியம், இன்னொன்று பிறரைப்பற்றிய ரகசியம். இந்த இரண்டாவது வகையில் நம் உறவினர் தொடங்கி அரசாங்க ரகசியம் வரை அடங்கும்.


முதலில் நம்மைப்பற்றிய ரகசியத்தைப்பார்ப்போம். சிலர் பெருமை என்று நினைத்துக்கொண்டு வீடு கட்ட ஆன செலவு, புதிதாய் வாங்கிய நகை எல்லாவற்றையும் வெளியே சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இது தேவையா? இப்போதெல்லாம் எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. “நான் ஒருமாசம் வெளிநாட்டில் என் மகன் வீட்டில் போய் தங்கப்போகிறேன்.” “இதோ வீட்டைவிட்டு கிளம்பிட்டேன்” “இப்ப விமானநிலையம் வந்துட்டேன்.” என்றெல்லாம் வழிநெடுக சொல்லிக்கொண்டே போகிறார்கள். இது சில சமயம் ஆபத்தாகவும் முடியலாம் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை? எல்லாவற்றையும் எல்லாரிடமும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொதுவாக பெண்களுக்கு ரகசியத்தை பாதுகாக்க தெரியாது என்பார்கள். ஆனால், அது முழு உண்மையில்லை. தங்களுக்கு ஏதேனும் பாதிப்புவரும் என்றால் அந்த ரகசியத்தை பெண்கள் பாதுகாக்கவே செய்கிறார்கள்.


அடுத்தது, பிறரை பற்றிய ரகசியங்கள். இவை சுவாரசியம் மிகுந்தவை. இதில் அண்டை அயலார் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரும் அடங்குவர். “எனக்கு இன்னாரை பற்றிய இந்த ரகசியம் தெரியும்.” என்று சொல்லிக்கொள்வதில் ஒரு தனி இன்பம். சொல்வதையும் சொல்லிவிட்டு,”நான் சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.” என்று கோரிக்கை வேறு வைக்கப்படும். நீங்கள் காப்பாற்றாத ரகசியத்தை அடுத்தவர் மட்டும் காப்பாற்றுவார் என்பது என்ன நிச்சயம். மேலும், உங்களுக்கு கிடைத்த தகவல் உண்மையானதாக இல்லாதபட்சத்தில் நீங்கள் வதந்தியாளராகும் வாய்ப்பும் உண்டு. “அவ எப்பவுமே இப்படித்தான்ப்பா யாரையாவது பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லிகிட்டே இருப்பா. ஆனா, பாதிக்கு மேல பொய் தான்.” என்று உங்களைபற்றி பேசிக்கொள்வார்கள். 

       
நாம் பணிபுரியும் நிறுவனத்தின் ரகசியங்கள், அரசாங்க ரகசியங்கள், ராணுவ ரகசியங்கள், பிரபலங்களைப்பற்றிய ரகசியங்கள் என்று ஏகப்பட்டது இந்த வகையில் அடங்குகின்றன. முதல் வகையில் பாதிக்கப்படுபவர் நாம் தான் என்றால் இரண்டாவது வகையில் பாதிக்கப்படுவர்களின் பரப்பளவு மிகப்பெரியது. இதில், சுவாரசியத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நீங்கள் வெளிப்படுத்தும் ரகசியம் உங்களை சிக்கலில் மாட்டிவிடும் அபாயம் அதிகம். 


ஒருவர் உங்களை நம்பி சொன்ன விஷயத்தை வெளியே சொல்லிவிட்டு மாட்டிக்கொண்டப்பின்,”இதை வெளியே சொல்லகூடாதுன்னு நீ சொல்லவே இல்லீயே!!!” என்று சாமர்த்தியமாக கேட்காதீர்கள். நாம் தான் ஒரு விஷயத்தை வெளியே சொல்லலாமா கூடாதா என்று முடிவு செய்யவேண்டும். அதை எப்படி முடிவு செய்வது? ஒருவிஷயம் சம்பந்தபட்டவர்களுக்கோ இல்லை மற்றவர்களுக்கோ எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துமானால் அதை வெளியே சொல்லக்கூடாது.


சிலர் தெரிந்தே எதிர்மறையான விளைவுகளை பிறருக்கு ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லுவார்கள்.  உதாரணமாக சிலர்,“அவளுக்கும் உனக்கும் எதாவது சண்டையா என்ன? அவ நேத்து என்வீட்டுக்கு வந்து பேரனுக்கு பேர் சூட்டு விழா ரொம்ப பேரை கூப்பிடலை,ரொம்ப நெருங்கின வட்டத்துல தான் கூப்பிட்டிருக்கேன் ன்னு சொன்னா.  நீ தானே அவளோட நெருங்கின தோழி உன்னை கூப்பிட்டாளா?”இந்தமாதிரி கொளுத்தி போடுவார்கள். அதனால்  அவங்களை  பார்த்தாலே எல்லோரும் ஓட்டம் எடுப்பார்கள். அதோடு அவர்கள் சொன்னால்  யாரும் நம்பவும் மாட்டார்கள். மொத்தத்தில்  எல்லோரின்  நன்மதிப்பையும், நம்பிக்கையையும் இழந்து வாழவேண்டியிருக்கும்.


அதனால்,எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்படியாக தெரிந்தோ தெரியாமலோ பேசக்கூடாது. “அதெப்படி!! ஒவ்வொரு வாட்டியும் இப்படி யோசிச்சுகிட்டே இருக்கமுடியுமா? ஒரு ப்ளோல வந்துடுதுல்ல.” என்கிறீர்களா? 


அதற்குத்தான் தேவையில்லாத விஷயங்களை பேசாதீர்கள் என்பது. அதோடு, “நாம் முகநூல் உள் பெட்டியில் தானே அவர்களை பற்றி பேசினோம். அலைபேசியில் தானே சொன்னோம். இது யாருக்கு தெரிந்துவிடப்போகிறது!!” என்று எண்ண வேண்டாம். தொழிற்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் எதுவுமே ரகசியம் கிடையாது. எந்த ஒரு விஷயத்தையும் வெளியே சொல்வதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.

பயனுள்ளவற்றை மட்டும் பகிருங்கள். தேவையில்லாத விஷயங்கள் அது யாரைபற்றியதாக, எதை பற்றியதாக இருந்தாலும் வெளியே சொல்லாதீர்கள். ஏனென்றால் ரகசியம் என்பது உங்களோடே இருப்பது மட்டும் தான்.    

வெள்ளி, நவம்பர் 25, 2016

உடலினை உறுதி செய்


நானும் என் தம்பியும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது, ஒரு சில நண்பர்களை பற்றிய பேச்சு எழுந்தது. 

"அவங்க ஏன் வரலை?"

"இவர் உடனே கிளம்பிட்டார் இல்ல?"

இப்படி பலவிதமாக பேசும் போது ஒரு விஷயம் பொதுவாக இருந்தது. 

அதுதான் "உடல்நிலை".

பலருக்கும் இதுதான் பிரச்சனை. விரதம் இருக்கமுடியாது?

என்னை ஒரு நிகழ்ச்சி நடத்த சொல்லி ஒருவர் கேட்டபோது, "எனக்கு பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது அக்கா, எனக்கு நிகழ்ச்சி நல்லபடியாக முடியவேண்டுமே என்ற பயத்தில் தலைவலி வந்துவிடும். அப்புறம் ரொம்ப கஷ்டம் ஆகிடும்", என்றேன். அவமானமாக இருந்தது.

பொறுப்பை ஏற்றுகொள்ள தயக்கம். காரணம் உடல்நிலை. "இப்படி இருந்தால் நாளை மகள் திருமண வேலைகளை எப்படி செய்வாய்?" என்று என் மனசாட்சி கேட்டது, 

நிறைய பேருக்கு சிறு வயதிலேயே நீரிழிவு நோய். அதனால், நிறைய நேரம் பசியோடு இருக்க முடியாது, இயற்கை உபாதைகளின் தொல்லை, பலருக்கும் உடல் பருமனால் மலை ஏற முடியாது இப்படி பல.

இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் "உடல் நிலை".

சில தலைமுறைகளாகவே நாம் உடற்பயிற்சியின் அவசியம் தெரியாதவர்களாவே வளர்ந்திருக்கிறோம். “படிப்பு தான் முக்கியம்!, படிச்சாத்தான் சோறு கிடைக்கும் !” என்பதாக நம் மனதில் பதிந்திருக்கிறது. வெறும் ஏட்டு படிப்பால் நிறைய பணம் சம்பாதித்தோம் ஆனால், அந்த பணத்தால் பயன் என்ன?

ஆண்களில் சிலராவது விளையாட வாய்ப்பு கிடைக்க பெற்றிருப்பார்கள். ஆனால், பெண்குழந்தைகள். “அடக்க ஒடுக்கமா வீட்டுல இரு!” “விளையாடி கைய கால ஓடிச்சிகிட்டியானா எவன் கட்டிப்பான்.” “எல்லாம் குனிஞ்சு நிமுந்து வேலை செஞ்சா போதும்!” தனியா என்ன விளையாட்டு வேண்டிகிடக்கு!” போன்ற கட்டளைகள் பெண்களுக்கு பிறப்பிக்கபட்டன. சொன்னவர்கள், வியாதியில் விழுந்த போது அவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டிய பெண்களும் நோயில் விழுந்திருந்தார்கள்.

பல வீடுகளில் பெற்றோர் காலமான போது, நீரிழிவு நோயால் தாக்கப்பட்டு இறுதி காரியங்களை செய்ய கூட பசி தாங்க முடியாமல் அவதிப்பட்ட பிள்ளைகளை பார்த்திருக்கிறேன்.

உடல் உறுதியாக இல்லாவிட்டால் நாட்டிற்கு ராணுவ சேவை செய்ய ஆள் கிடைப்பது எப்படி? கைலாஷ் மானசரோவர் யாத்திரை போவது எப்படி? பெற்றோருக்கு இறுதி கடமைகளை எப்படி செய்வது? பெண் குழந்தைகளின் பேறு காலத்தை கவனிப்பது எப்படி? அட ! இதெல்லாம் கூட பரவாயில்லை, நம் உடலை நாமே சுமப்பது எப்படி?   

 நான் பார்த்த பலரும் சிறுவயதிலேயே உடல் பெருத்து, மூன்று வேளையும் சாப்பாட்டைவிட அதிகமாக மருந்து சாப்பிடுகிறார்கள். சகல ரோகங்களும் மிக,மிக இளம் வயதிலேயே அவர்களிடம் முகாமிட்டு விடுகின்றன.எல்லாம் தெரிந்திருந்தாலும் உடலை பேணுவது என்பதை ஏதோ சுயநலமாக இருப்பதாக கற்பித்துக்கொண்டு தவிர்க்கிறார்கள். 

என் மகள்களை வெளியே விளையாடவிட்டால், ஏதோ பாவகாரியத்தில் அவர்களை நான் ஈடுபடுத்துவது போல் பார்ப்பவர்கள் பலர். குழந்தைகளை டிவி, டேப் முதலியவற்றுக்கு அடிமையாகவிட்டு விட்டு,” என்னங்க செய்யறது? வெளிய விளையாட அனுப்பினா சண்டை வருது.” என்கிறார்கள் சிலர். 

வரட்டுமே! அதை எப்படி கையாள்வது என்று சொல்லிக்கொடுங்கள். அதுக்கெல்லாம் எங்களுக்கு ஏது நேரம்? டிவி பார்க்கணும், நாங்களும் வாட்சாப், பேஸ்புக் என்று நேரம் ஓட்ட வேண்டும்.    
  
ஆக மொத்தத்தில் நாம் நோயாளிகளானது அறியாமையினால், அடுத்த தலைமுறையை நோயாளிகளாக்குவது சோம்பலினால். 

போதும் ! இத்தோடு இது நிற்கட்டும்! திருமணம் போன்ற விசேஷங்களுக்கு உடலுக்கு பட்டுடுத்தி, அரிதாரம் பூசிக்கொண்டு சென்றுவிட்டு பந்தியில் பரிமாறப்படும் இனிப்பை சுவைக்க முடியாத சங்கடம் இனிவேண்டாம். 

சாப்பிட்டு முடிந்ததும் அவரவர் கொண்டுவந்திருக்கும் நடமாடும் மருந்துக்கடையை திறக்கும் நிலை இனிவேண்டாம்.

“எனக்கு சுகர் ! உனக்கு பி.பீயா?” என்ற குசல விசாரிப்புகள் இனி வேண்டாம்.

“நான் பைபாஸ் பண்ணிண்டுட்டேன், நீங்க எப்போ பண்ணிண்டீங்க? எவ்வளவு செலவாச்சு?” என்று ஏதோ பெண்ணின் கல்யாணம், வீடு கட்டுவது மாதிரி அறுவை சிகிச்சையை அந்தஸ்தின் அடையாளம் போல் பேசுவது இனி வேண்டாம்.    

நம் உடல் நமக்கே பாரமாகும் அவலம் இனி வேண்டாம்.
     
நாலு நாள் வாக்கிங் போய்விட்டு ஐந்தாவது நாள் நொண்டி சாக்கு சொல்லிக்கொண்டு தட்டிகழிப்பது இனி வேண்டாம். 

இனி ஒரு விதிசெய்வோம் ! அதை எந்த நாளும் காப்போம் !
 
சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளையே பழக்குவோம், வெள்ளை சர்க்கரை,மைதா போன்றவற்றை தவிர்ப்போம்,
வெளியே மைதானத்தில் விளையாடும் விளையாட்டுகளில்  குழந்தைகளை ஈடுபடுத்துவோம், நாமும் சேர்ந்து விளையாடுவோம்.

நாம் அன்பானவர்கள், அறிவானவர்கள் மட்டுமல்ல ஆரோக்கியமானவர்களும் கூட என்று நிரூபிப்போம்.



செவ்வாய், நவம்பர் 01, 2016

சும்மா......! :)

ஏனோ இம்சை அரசன் இருப்பத்திரண்டாம் புலிகேசியின் அவை புலவர்கள் இரண்டு பேரும் நேற்று என் கனவில் வந்து "தானை தலைவி !இனி நீ சுசி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்." என்று வாழ்த்திவிட்டு சென்றார்கள். புலவர்கள் வாக்கு பொய்க்க கூடாதென்று என் ப்ளோகின் பெயர் இன்று முதல் "சுசி" என்று மாற்றப்படுகிறது. :)

ஏன்  மாற்றினாய் ? சுசி என்கிற பெயர் எதற்காக என்றெல்லாம் கேட்டீர்கள் என்றால் என் பதில் "சும்மா....!" :)

செவ்வாய், நவம்பர் 24, 2015

SUBSCRIBER NOT REACHABLE AT THE MOMENT FRIENDS.


என் கிட்ட இருக்கிறது ஒரே ஒரு ஓட்ட நோக்கியா. எனக்கு என்ன பெரிசா தேவை. பச்சை அமுத்தினா பேசணும், செவப்ப அமுத்தினா நிறுத்தணும் அம்புடுதேன். எனக்கு இருக்கிற ஜாக்கிரதைக்கு இதுவே ரொம்ப ஜாஸ்தி. அன்னிக்கி ஸ்கூல் சாமான் வாங்க நிறைய கடைக்கு போயிட்டு எதோ ஒரு கடையில போனை விட்டுட்டு, அப்புறம் ஒவ்வோரு கடையா தேடினேன். என் போனை எவனும் தொடக்கூட மாட்டான். இருந்தாலும் காக்கைக்கும் தன் போன் பொன் போன் இல்லீயா?

ரொம்பவே கவலைப்பட்டேன். எப்படியோ நான் விட்டுட்டு போன கடையில எடுத்து வச்சிருந்து குடுத்தான். “ரொம்ப நன்றிப்பா தம்பி”ன்னு சண்முகசுந்தரம் ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்பட்டுட்டு, தொலைஞ்சு போயி திரும்ப கிடைச்ச என் தங்கத்தோட வீடு வந்து சேர்ந்தேன்
.
இன்னோரு நாள் என் தங்கத்தை கையில வச்சிண்டு கொஞ்சிண்டு இருக்கிறச்சே கை தவறி கீழ விழுந்துடுத்து. அதுல அதுக்கு நடுவுல கொஞ்சம் பக்கம் காணாம போயிடுத்து. எஸ்.எம்.எஸ் மட்டும் வரவேயில்ல. இத கண்டுபிடிக்கறத்துக்கே எனக்கு கொஞ்சநாள் ஆச்சு.

அப்புறம் கிட்ட தட்ட சீக்காளி குழந்தைய தூக்கிண்டு சுத்தற அம்மா மாதிரி அப்பவும் விடாம அதை தூக்கிண்டு சுத்திண்டு இருக்கிறச்சே, ஒரு நாள் திடீர்ன்னு திரும்பவும் என் கையிலருந்து கீழ விழுந்துடுத்து. தமிழ் சினிமால விபத்துல பழைய ஞாபகத்தை எல்லாம் இழந்துடற ஹீரோவுக்கு திருப்பியும் ஒரு விபத்துலயே பழைய ஞாபகமெல்லாம் வர்றா மாதிரி, கீழ விழுந்த போனை எடுத்து திருப்பியும் செட் பண்ணினவுடனே வந்துது பாருங்க 150 மெசேஜஸ் ஒரே நேரத்துல....

இதெல்லாமாவது பரவாயில்ல, போன வாரம் நாத்தனார் பையன் கல்யாண ரிசப்ஷனுக்கு போயிட்டு, போனை வழக்கம் போல திருவிழா கூட்டத்துல தொலைச்சிட்டு திண்டாடிண்டு இருக்கேன். இப்பத்தான் தெரிஞ்சிது, என் போன் டிக்கெட் வாங்காம வித்தவுட்லயே ஏற்காட் எக்ஸ்பிரஸ் ஏறி பொண்ணு வீட்டுகாரங்களோட தலை தீபாவளிக்கு ஈரோடுக்கு போயிடுத்துங்கற விஷயம்.

இப்போ ஈரோடு போயி திரிச்சி திருநின்றவூர் வந்துடுத்து. இந்த கூத்துல நான் கெட்ட கேட்டுக்கு என் தம்பி பொண்டாட்டி எனக்கு ஸ்மாட் போன் வாங்கி குடுத்திருக்கா. போனாவது ஸ்மார்ட்டா இருந்தாத்தான் உண்டு. அதை பத்திரமா வச்சுக்க, நமக்கு ஸ்மார்ட்னெஸ் பத்தாது.

ஆக மொத்தம், இப்போதைக்கு என்னை யாரும் காண்டாக்ட் பண்ண முடியாது. Subscriber not reachable at any moment friends.

வியாழன், டிசம்பர் 11, 2014

முதல் பரிசு

தமிழ்குடில் அறக்கட்டளை நடத்திய “பெண்களுக்கான சிறப்பு கட்டுரைப்போட்டி”யில் முதல் பரிசு பெற்ற என் கட்டுரை.இது முதல் பரிசு மட்டுமல்ல நான் முதன்முதலாக பெறும் பரிசும் கூட.

நான் படைக்க விரும்பும் சமூகம்.