திங்கள், டிசம்பர் 26, 2011

சித்தமெல்லாம் எனக்கு சித்தா மயமே !

கொஞ்ச வருடங்களாகவே முதுகு வலியும் வலது கை வலியும் என்னை ஒரு கைதியாகவே மாற்றி விட்டிருகின்றன. இதில் பயபடுத்தும் விஷயம் என்னவென்றால், இரவில் தூங்கும்போது கைகள் மரத்து சில்லிட்டு போய் விடும். கொஞ்ச நேரம் நின்றாலும் கால்கள் வலி பின்னி எடுத்து விடும். படுத்தால் மரத்து போய் விடும். இப்படியே வலிகளோடு என் வாழ்க்கை இணைக்கப்பட்டுவிட்டது.

"இவ்வளவு சொல்றியே அதற்கு என்ன சிகிச்சை எடுத்தாய்?" என்கிறீர்களா. நியாயமான கேள்வி தான். ஆனால், நான் பெரிசாய் சிகிச்சை என எதுவும் முயற்சிக்கவே இல்லை (அப்படி ஒத்துக்கோ !).

அதற்கு காரணம் சலித்து போன ஆஸ்புத்திரி வாசமே (அது சரி யாருக்கு தான் ஹாஸ்பிடல் போக பிடிக்கும்).

இந்நிலையில் தான் இங்கு பலரும் தாம்பரத்தில் உள்ள  தேசிய சித்த மருத்துவ கழகத்தில் நல்ல சிகிச்சை தருவதாகவும் தாங்கள்  அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள்.

அப்படி ஒரு நாள் என் தோழி ரமணியிடம் பேசி கொண்டிருந்த போது அவர்கள் கணவரும் அவரும் கூட அங்கு சிகிச்சை பெறுவதாகவும், நல்ல முறையில் குணம் தெரிவதாகவும் கூறினார்கள்.

சரி, நாமும் போய் பார்க்கலாமே என்று தோன்ற, ஒரு நாள் ரமணியுடன் அங்கு சென்றேன்.

உள்ளே நுழையும் போதே நல்ல மூலிகை மணம். அதை சுவாசித்தாலே பாதி நோய் குணமாகி விடும். அரசாங்க மருத்துவமனையா அது !? சுத்தம்,சுத்தம் எங்கும் பளிச்!...பளிச் !

முதல் முதலாய் பதிவு செய்து கொள்ள ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள். 

அறைகளின் பெயர்கள் எல்லாம் அழகு தமிழில் மருத்துவம்,நோய் நாடல் இப்படி.

உள்ளே ஒவ்வொரு அறையிலும் நிறைய மருத்துவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் உள்ளே நுழைந்து ஒரு அழகான, சற்று மாநிறமான, கிராமத்து களை (சித்த மருத்துவத்திற்கு பொருத்தமான முகம்) உள்ள இளம் பெண் டாக்டரை தெரிவு செய்து கொண்டேன்.

அன்பாக ,கனிவாக விசாரிக்கிறார்கள். மிகமுக்கியமாக நல்ல தமிழில் பேசுகிறார்கள்.

என்னம்மா தொந்தரவு?  
இனிப்பு அதிகமா சாப்பிடாதீங்க ! 
இதை சாப்பிடுங்க சுவையா இருக்கும்! 

ஐந்து நாட்களுக்கான மருந்து மட்டும் தான் தருகிறார்கள்.  அதிகமாக கொடுத்தால் சிலர் அவற்றை வெளியில் விற்று விடுகிறார்களாம். ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் போக வேண்டும். எனக்கு அந்த மருந்து ஒத்து கொள்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த மருத்துவ மனை எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் நிச்சயம் குணமாகும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

நான் இந்த பதிவின் தலைப்பை சொன்னவுடன் ரமணி "என்னங்க இன்னும் ஒரு வேளை மருந்து கூட நீங்க சாப்பிடலை அதற்குள் சித்த மருந்திற்கு இவ்வளவு பெரிய விசிறி ஆகிடீங்களே!?" என்றார்.

"மற்ற மருந்துகளை காட்டிலும் இதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது, காரணம் இது இறை நம்பிக்கையோடு தொடர்புடையது என்பது மட்டுமல்ல இங்கு இருக்கும் சுத்தம், இவர்களின் அன்பான கவனிப்பு ஆகியவற்றில் இருக்கும் நம்பிக்கை தான்." என்றேன்.

ரமணியும் அதை ஆமோதித்தார்.

எனக்கு அவர்கள் கொடுத்த குறிப்புக்கள் சிலவற்றை உங்களுக்கு தருகிறேன், உபயோகமாக இருக்கும்.

*சர்க்கரையில் உள்ள வேதி பொருட்கள், நம் எலும்புகளை வலுவிழக்க செய்து விடுமாம். வருட கணக்காய் சர்க்கரை சாப்பிட்டால் முதுகு வலி,கழுத்து வலி எல்லாம் நிச்சயம். எனவே, சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி உபயோகியுங்கள்.

* முளை கட்டிய பயறு தினமும் ஒரு கை பிடி அளவு கட்டாயம் சாப்பிட வேண்டும்.

* புளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்.

* கணினியில் வேலை செய்தால், வேலை முடிந்து எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதுகு வலி, கழுத்து வலிக்காக சிகிச்சை பெறுகிறவர்கள், கட்டாயம் இந்த குறிப்புகளையும் முயன்று பாருங்கள்.

பின் குறிப்பு : சமீபத்தில் bio-technology professor  ஒருவரை சந்தித்தேன். அவர் நம் பாரதத்தில் உள்ளது போல் bio-diversity உலகில் வேறு எங்குமே இல்லை என்றார்.  எத்தனையோ விதமான தாவரங்கள், உயரினங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு தேவையான வேலையை செய்து கொண்டிருகின்றன என்றார். நம் தேசத்தின் பொக்கிஷங்களை நாம் மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். சித்த மருத்துவமும் அப்படியே.



வெள்ளி, டிசம்பர் 02, 2011

இது நம்ம வீட்டு கல்யாணம்

நானும் நிறைய விஷயங்களை பற்றி கதை எழுத வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருக்கிறேன். ஆனால், அதற்குள் எதாவது சுவாரசியமான ஒரு உண்மை நிகழ்வு நடந்து அதை பற்றி எழுதும்படியாகிவிடுகிறது. 

;யாரோ இப்படி சுவாரசியமான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வேண்டுமென்றே என் எழுத்துபணியை தடை செய்து உங்கள் எல்லோரையும் காப்பாற்றி கொண்டிருக்கிறார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

இப்படி, தற்போதைய நிகழ்வு "தம்பி கல்யாணம்". 


தக்குடு மெயிலில் பத்திரிக்கை அனுப்பி அதை பிரித்து படிக்க கூட தெரியாமல் ஒரு நாலு நாட்கள் அல்லாடினேன். பின்னர், எதிர்வீட்டு பையன் தான் சொல்லிகொடுத்தான். 

படித்த பின்னர் தொடங்கி விட்டது என் குழப்பம். ஜனவாசத்துக்கு போறதா ?இல்லை கல்யாணத்துக்கு போறதா? 

இந்த குழப்பம் முப்பதாம் தேதி  மதியம் வரை நீடித்தது. காலையில் அலுவலகம் செல்லும் போதே தலைவர் "எப்போ போகனுங்கரத்தை சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லு, இன்னிக்கு போறதா இருந்தா போன் பண்ணு." என்று வழக்கம் போல் சிம்ம கர்ஜனை செய்து விட்டு சென்றார்.

குழப்பத்தோடு கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் தங்கமணியின் தளத்தில் "தக்குடு கல்யாண வைபோகம்" பதிவு. அதில் தி.ர.ச மாமா எல்லோரும் இரவு ஏழு மணிக்கு சந்திக்கவேண்டும் என்று பின்னுட்டத்தில் மிரட்டி இருந்தார். 

அப்போ குழந்தைகளை எங்கே விட்டுவிட்டு செல்வது? வேறவழி இழுத்துண்டே  போகவேண்டியது தான் என்று முடிவு செய்து செயலில் இறங்கினேன். வழக்கம்போல் எதையும் முன் கூட்டியே திட்டமிடாததால் "டென்ஷன்! டென்ஷன்!".

ரெண்டுத்தையும் டிரஸ் பண்ணி இழுத்துண்டு வந்து ஆட்டோ பிடித்து ஸ்டேஷன் வந்து ட்ரெயின் பிடித்து மாம்பலம் வந்து தலைவருடன் டூ வீலரில் கும்பலாக குமிந்து கொண்டு கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.


கல்யாண மண்டப வாசலில் வைத்து தலைவர் என்னிடம்,"இந்த கல்யாணம் தானா? அட்லீஸ்ட் யாராவது ஒருத்தரையாவது உனக்கு தெரியுமா? எதுவும் பிரச்சனை இல்லையே ?" என்று கேட்டபோது மனதிற்குள் ஒரு பயமும் கூடவே தலைவரை பயப்பட வைத்த திருப்தியும் ஏற்பட்டது.

எதையும் காட்டிக்கொள்ளாது "எல்லாம் எனக்கு தெரியும், பேசாம வாங்க." என்று ரொம்ப தைரியமாய் ஆணை இட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன்.

வாசலில் அழகாய் பூ கோலம் போட்டு இருந்தார்கள். பெண் வீட்டுகார பெண்மணிகள் கையில் சந்தனம்,கும்குமம்,சர்க்கரை,கல்கண்டோடு பெண்களூர் ரோஜா பூவும் கொடுத்து வரவேற்றார்கள்.

நாங்கள் ஏற்கனவே தலையில் பூ வைத்திருந்ததால் அந்த பூவை கையிலேயே வைத்திருந்தேன். பெரியவள்,"ஏம்மா பூவ கைலயே வச்சிண்டிருக்க? பாக்ல வச்சிக்கோயேன்." என்றாள்.

நான்,"பாக்ல வச்சா கசங்கி போய்டுமே, வாசன ரோஜா வாடி போகலாமா?, அதான் கைலயே வச்சிண்டிருகேன்." என்று சொன்னேன்.

 நாங்கள் போய் உட்கார்ந்து கொண்டு மிஸ்டர்,மிஸ்டர்னு (அதான் திரு,திருன்னு) முழிச்சிண்டே இருந்தோம்.

ரொம்ப தவிப்பான கணங்கள் அவை. யாரையுமே தெரியாமல் ஒரு கல்யாணத்துக்கு போக பயங்கர தில் வேணுங்கிறது எனக்கு அப்பதான் புரிஞ்சது.

தலைவர் வேற சும்மா இல்லாம "ஏய் ! அங்க பாரு அந்த மாமி ப்ளாக் ப்ரென்ட் தான் போலிருக்கு, இங்க பாரு இந்த மாமா ப்ளாக் ப்ரென்ட் போலிருக்கு" ன்னு ஒரே தொனப்பல்.

உங்களுக்கு எப்படி தெரியும்னா,அவாளும் நம்மள மாதிரியே முழிச்சிண்டிருக்கா  பாருங்கிறார்.

"என்ன திரு திருன்னு முழிகிரவால்லாம் ப்ளாக் ப்ரெண்ட்ஸ்ஸா?" என்று ஒரு முறை முறைத்த அப்புறம் தான் அடங்கினார்.

அப்புறம் தக்குடு தன் திருமதியோடு மேடையேறினான். இருவரும் மாலை மாற்றி கொண்டார்கள்.

நங்கள் மேடையில் ஏறி அறிமுகபடுத்திகொண்டு போட்டோ எடுத்துக்கொண்டோம்.



கீழே இறங்கி கொஞ்ச தூரம் போனபின்தான் தலைவருக்கு தான் கேமரா கொண்டு வந்த ஞாபகமே வந்தது. பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு போட்டோ எடுத்தார்.  நல்ல உணவு. வழக்கம் போல் சரியாய் சாப்பிடாமல் ரெண்டும்  நன்றாய் படுத்தின. சொல்ல சொல்ல கேட்காமல் ஐஸ் கிரீம் சாப்பிட்டன.

திருப்பியும் பதிவர்களை தேடும் படலம். தக்குடுவோட பெற்றோர், அண்ணா,மன்னி யாரையும் பார்க்காமல் எப்படி திரும்பிப்போவது?

அவன் அண்ணா யார் என்று தெரியவில்லை. அங்கே பார்த்தால் தக்குடு ஜாடையிலேயே ஒருத்தர் நின்னுண்டு இருந்தார். அவரை சுற்றி ஒரே பெண்கள்  கூட்டம். "அவர்தான் தக்குடுவின் அண்ணாவாய் இருக்கும் போய் விசாரியுங்கோ", என்றேன் தலைவரிடம்.

கடைசியில் பார்த்தால் அவர் கசின் பிரதர்ராம். "ஒ....ஒ.... கசின் பிரதருக்கே இவ்வளவு பெண்கள் கூட்டமா....?"

தக்குடுவோட அம்மாவை கண்டுபிடித்து அறிமுகபடுத்தி கொண்டேன். நன்றாய் பழகினார்கள்."ஒ.....தானை தலைவியா நன்னா தெரியுமே...நிறைய சொல்லிருக்கான்." என்றார்கள்.

"ஐயோ, நிறைய சொன்னானா...? என்னன்னு சொன்னானோ....?"

அவர்களே எங்களை அழைத்து போய் பதிவர்களை அறிமுகபடுத்தி வைத்தார்கள். எல்லோரும் ரொம்ப முக்கியமான இடத்தில் இருந்ததால் ஒன்றுமே பேச முடியவில்லை.T.R.C மாமாவும்,  R.V.S சாரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். பாலாஜி வெங்கட்டும்,எல்.கே வும் தனியாக வந்திருந்தார்கள்.


R.V.S சாரை வேங்கடசுப்ரமணியன் என்று T.R.C மாமா அறிமுகபடுத்தி வைத்தார் . இப்போது தான் இந்த பதிவை எழுதும்போது தான்  R.V.S சார்  தான்  வேங்கடசுப்ரமணியன்  என்பது தெரிந்தது (நீ ஒரு டயுப் லைட் என்று யாருங்க கமெண்ட் அடிக்கறது).

நாங்கள் எங்கள் கிராமத்துக்கு திரும்ப வேண்டி இருந்ததால் அவர்கள் சாப்பிட்டு விட்டு வரும்வரை காத்திருக்க முடியவில்லை. இதற்கே சின்னவள் சாமியாட ஆரம்பித்து விட்டாள்.

இங்கு முக்கியமான ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். அது தான் அங்கு நடந்த பஜனை கச்சேரி. அடாடாடாட.....அந்த மாமிக்கு என்ன ஒரு சாரிரம்.   அதையும் ஒரு மாமா ரசித்து தாளம் போட்டு கொண்டிருந்தார். அனேகமாக அவர் அவருடைய ஹியரிங் எய்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்திருப்பார் என்று நினைக்கிறன்.

தலைவர் வேற, "ஐயோ....!அந்த மாமிக்கு யாராவது ஐஸ் கிரீம் ஒரு நாலு குடுங்கோளேன். அதையும் ஒரு நாலு நாள் முன்னாடியே செஞ்சிருக்கணும்.அதோட பனிலையும் பத்து தரம் அலைய விட்டிருக்கணும்." என்று கமெண்ட் அடித்தார்.

முதல் பதிவர் சந்திப்பே மங்களகரமாய் கல்யாணத்தில் நடந்தது மகிழ்ச்சியாய் இருந்தது.