திங்கள், டிசம்பர் 26, 2011

சித்தமெல்லாம் எனக்கு சித்தா மயமே !

கொஞ்ச வருடங்களாகவே முதுகு வலியும் வலது கை வலியும் என்னை ஒரு கைதியாகவே மாற்றி விட்டிருகின்றன. இதில் பயபடுத்தும் விஷயம் என்னவென்றால், இரவில் தூங்கும்போது கைகள் மரத்து சில்லிட்டு போய் விடும். கொஞ்ச நேரம் நின்றாலும் கால்கள் வலி பின்னி எடுத்து விடும். படுத்தால் மரத்து போய் விடும். இப்படியே வலிகளோடு என் வாழ்க்கை இணைக்கப்பட்டுவிட்டது.

"இவ்வளவு சொல்றியே அதற்கு என்ன சிகிச்சை எடுத்தாய்?" என்கிறீர்களா. நியாயமான கேள்வி தான். ஆனால், நான் பெரிசாய் சிகிச்சை என எதுவும் முயற்சிக்கவே இல்லை (அப்படி ஒத்துக்கோ !).

அதற்கு காரணம் சலித்து போன ஆஸ்புத்திரி வாசமே (அது சரி யாருக்கு தான் ஹாஸ்பிடல் போக பிடிக்கும்).

இந்நிலையில் தான் இங்கு பலரும் தாம்பரத்தில் உள்ள  தேசிய சித்த மருத்துவ கழகத்தில் நல்ல சிகிச்சை தருவதாகவும் தாங்கள்  அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள்.

அப்படி ஒரு நாள் என் தோழி ரமணியிடம் பேசி கொண்டிருந்த போது அவர்கள் கணவரும் அவரும் கூட அங்கு சிகிச்சை பெறுவதாகவும், நல்ல முறையில் குணம் தெரிவதாகவும் கூறினார்கள்.

சரி, நாமும் போய் பார்க்கலாமே என்று தோன்ற, ஒரு நாள் ரமணியுடன் அங்கு சென்றேன்.

உள்ளே நுழையும் போதே நல்ல மூலிகை மணம். அதை சுவாசித்தாலே பாதி நோய் குணமாகி விடும். அரசாங்க மருத்துவமனையா அது !? சுத்தம்,சுத்தம் எங்கும் பளிச்!...பளிச் !

முதல் முதலாய் பதிவு செய்து கொள்ள ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள். 

அறைகளின் பெயர்கள் எல்லாம் அழகு தமிழில் மருத்துவம்,நோய் நாடல் இப்படி.

உள்ளே ஒவ்வொரு அறையிலும் நிறைய மருத்துவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் உள்ளே நுழைந்து ஒரு அழகான, சற்று மாநிறமான, கிராமத்து களை (சித்த மருத்துவத்திற்கு பொருத்தமான முகம்) உள்ள இளம் பெண் டாக்டரை தெரிவு செய்து கொண்டேன்.

அன்பாக ,கனிவாக விசாரிக்கிறார்கள். மிகமுக்கியமாக நல்ல தமிழில் பேசுகிறார்கள்.

என்னம்மா தொந்தரவு?  
இனிப்பு அதிகமா சாப்பிடாதீங்க ! 
இதை சாப்பிடுங்க சுவையா இருக்கும்! 

ஐந்து நாட்களுக்கான மருந்து மட்டும் தான் தருகிறார்கள்.  அதிகமாக கொடுத்தால் சிலர் அவற்றை வெளியில் விற்று விடுகிறார்களாம். ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் போக வேண்டும். எனக்கு அந்த மருந்து ஒத்து கொள்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த மருத்துவ மனை எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் நிச்சயம் குணமாகும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

நான் இந்த பதிவின் தலைப்பை சொன்னவுடன் ரமணி "என்னங்க இன்னும் ஒரு வேளை மருந்து கூட நீங்க சாப்பிடலை அதற்குள் சித்த மருந்திற்கு இவ்வளவு பெரிய விசிறி ஆகிடீங்களே!?" என்றார்.

"மற்ற மருந்துகளை காட்டிலும் இதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது, காரணம் இது இறை நம்பிக்கையோடு தொடர்புடையது என்பது மட்டுமல்ல இங்கு இருக்கும் சுத்தம், இவர்களின் அன்பான கவனிப்பு ஆகியவற்றில் இருக்கும் நம்பிக்கை தான்." என்றேன்.

ரமணியும் அதை ஆமோதித்தார்.

எனக்கு அவர்கள் கொடுத்த குறிப்புக்கள் சிலவற்றை உங்களுக்கு தருகிறேன், உபயோகமாக இருக்கும்.

*சர்க்கரையில் உள்ள வேதி பொருட்கள், நம் எலும்புகளை வலுவிழக்க செய்து விடுமாம். வருட கணக்காய் சர்க்கரை சாப்பிட்டால் முதுகு வலி,கழுத்து வலி எல்லாம் நிச்சயம். எனவே, சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி உபயோகியுங்கள்.

* முளை கட்டிய பயறு தினமும் ஒரு கை பிடி அளவு கட்டாயம் சாப்பிட வேண்டும்.

* புளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்.

* கணினியில் வேலை செய்தால், வேலை முடிந்து எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதுகு வலி, கழுத்து வலிக்காக சிகிச்சை பெறுகிறவர்கள், கட்டாயம் இந்த குறிப்புகளையும் முயன்று பாருங்கள்.

பின் குறிப்பு : சமீபத்தில் bio-technology professor  ஒருவரை சந்தித்தேன். அவர் நம் பாரதத்தில் உள்ளது போல் bio-diversity உலகில் வேறு எங்குமே இல்லை என்றார்.  எத்தனையோ விதமான தாவரங்கள், உயரினங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு தேவையான வேலையை செய்து கொண்டிருகின்றன என்றார். நம் தேசத்தின் பொக்கிஷங்களை நாம் மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். சித்த மருத்துவமும் அப்படியே.



வெள்ளி, டிசம்பர் 02, 2011

இது நம்ம வீட்டு கல்யாணம்

நானும் நிறைய விஷயங்களை பற்றி கதை எழுத வேண்டும் என்று கற்பனை செய்து வைத்து இருக்கிறேன். ஆனால், அதற்குள் எதாவது சுவாரசியமான ஒரு உண்மை நிகழ்வு நடந்து அதை பற்றி எழுதும்படியாகிவிடுகிறது. 

;யாரோ இப்படி சுவாரசியமான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வேண்டுமென்றே என் எழுத்துபணியை தடை செய்து உங்கள் எல்லோரையும் காப்பாற்றி கொண்டிருக்கிறார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

இப்படி, தற்போதைய நிகழ்வு "தம்பி கல்யாணம்". 


தக்குடு மெயிலில் பத்திரிக்கை அனுப்பி அதை பிரித்து படிக்க கூட தெரியாமல் ஒரு நாலு நாட்கள் அல்லாடினேன். பின்னர், எதிர்வீட்டு பையன் தான் சொல்லிகொடுத்தான். 

படித்த பின்னர் தொடங்கி விட்டது என் குழப்பம். ஜனவாசத்துக்கு போறதா ?இல்லை கல்யாணத்துக்கு போறதா? 

இந்த குழப்பம் முப்பதாம் தேதி  மதியம் வரை நீடித்தது. காலையில் அலுவலகம் செல்லும் போதே தலைவர் "எப்போ போகனுங்கரத்தை சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லு, இன்னிக்கு போறதா இருந்தா போன் பண்ணு." என்று வழக்கம் போல் சிம்ம கர்ஜனை செய்து விட்டு சென்றார்.

குழப்பத்தோடு கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் தங்கமணியின் தளத்தில் "தக்குடு கல்யாண வைபோகம்" பதிவு. அதில் தி.ர.ச மாமா எல்லோரும் இரவு ஏழு மணிக்கு சந்திக்கவேண்டும் என்று பின்னுட்டத்தில் மிரட்டி இருந்தார். 

அப்போ குழந்தைகளை எங்கே விட்டுவிட்டு செல்வது? வேறவழி இழுத்துண்டே  போகவேண்டியது தான் என்று முடிவு செய்து செயலில் இறங்கினேன். வழக்கம்போல் எதையும் முன் கூட்டியே திட்டமிடாததால் "டென்ஷன்! டென்ஷன்!".

ரெண்டுத்தையும் டிரஸ் பண்ணி இழுத்துண்டு வந்து ஆட்டோ பிடித்து ஸ்டேஷன் வந்து ட்ரெயின் பிடித்து மாம்பலம் வந்து தலைவருடன் டூ வீலரில் கும்பலாக குமிந்து கொண்டு கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.


கல்யாண மண்டப வாசலில் வைத்து தலைவர் என்னிடம்,"இந்த கல்யாணம் தானா? அட்லீஸ்ட் யாராவது ஒருத்தரையாவது உனக்கு தெரியுமா? எதுவும் பிரச்சனை இல்லையே ?" என்று கேட்டபோது மனதிற்குள் ஒரு பயமும் கூடவே தலைவரை பயப்பட வைத்த திருப்தியும் ஏற்பட்டது.

எதையும் காட்டிக்கொள்ளாது "எல்லாம் எனக்கு தெரியும், பேசாம வாங்க." என்று ரொம்ப தைரியமாய் ஆணை இட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன்.

வாசலில் அழகாய் பூ கோலம் போட்டு இருந்தார்கள். பெண் வீட்டுகார பெண்மணிகள் கையில் சந்தனம்,கும்குமம்,சர்க்கரை,கல்கண்டோடு பெண்களூர் ரோஜா பூவும் கொடுத்து வரவேற்றார்கள்.

நாங்கள் ஏற்கனவே தலையில் பூ வைத்திருந்ததால் அந்த பூவை கையிலேயே வைத்திருந்தேன். பெரியவள்,"ஏம்மா பூவ கைலயே வச்சிண்டிருக்க? பாக்ல வச்சிக்கோயேன்." என்றாள்.

நான்,"பாக்ல வச்சா கசங்கி போய்டுமே, வாசன ரோஜா வாடி போகலாமா?, அதான் கைலயே வச்சிண்டிருகேன்." என்று சொன்னேன்.

 நாங்கள் போய் உட்கார்ந்து கொண்டு மிஸ்டர்,மிஸ்டர்னு (அதான் திரு,திருன்னு) முழிச்சிண்டே இருந்தோம்.

ரொம்ப தவிப்பான கணங்கள் அவை. யாரையுமே தெரியாமல் ஒரு கல்யாணத்துக்கு போக பயங்கர தில் வேணுங்கிறது எனக்கு அப்பதான் புரிஞ்சது.

தலைவர் வேற சும்மா இல்லாம "ஏய் ! அங்க பாரு அந்த மாமி ப்ளாக் ப்ரென்ட் தான் போலிருக்கு, இங்க பாரு இந்த மாமா ப்ளாக் ப்ரென்ட் போலிருக்கு" ன்னு ஒரே தொனப்பல்.

உங்களுக்கு எப்படி தெரியும்னா,அவாளும் நம்மள மாதிரியே முழிச்சிண்டிருக்கா  பாருங்கிறார்.

"என்ன திரு திருன்னு முழிகிரவால்லாம் ப்ளாக் ப்ரெண்ட்ஸ்ஸா?" என்று ஒரு முறை முறைத்த அப்புறம் தான் அடங்கினார்.

அப்புறம் தக்குடு தன் திருமதியோடு மேடையேறினான். இருவரும் மாலை மாற்றி கொண்டார்கள்.

நங்கள் மேடையில் ஏறி அறிமுகபடுத்திகொண்டு போட்டோ எடுத்துக்கொண்டோம்.



கீழே இறங்கி கொஞ்ச தூரம் போனபின்தான் தலைவருக்கு தான் கேமரா கொண்டு வந்த ஞாபகமே வந்தது. பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு போட்டோ எடுத்தார்.  நல்ல உணவு. வழக்கம் போல் சரியாய் சாப்பிடாமல் ரெண்டும்  நன்றாய் படுத்தின. சொல்ல சொல்ல கேட்காமல் ஐஸ் கிரீம் சாப்பிட்டன.

திருப்பியும் பதிவர்களை தேடும் படலம். தக்குடுவோட பெற்றோர், அண்ணா,மன்னி யாரையும் பார்க்காமல் எப்படி திரும்பிப்போவது?

அவன் அண்ணா யார் என்று தெரியவில்லை. அங்கே பார்த்தால் தக்குடு ஜாடையிலேயே ஒருத்தர் நின்னுண்டு இருந்தார். அவரை சுற்றி ஒரே பெண்கள்  கூட்டம். "அவர்தான் தக்குடுவின் அண்ணாவாய் இருக்கும் போய் விசாரியுங்கோ", என்றேன் தலைவரிடம்.

கடைசியில் பார்த்தால் அவர் கசின் பிரதர்ராம். "ஒ....ஒ.... கசின் பிரதருக்கே இவ்வளவு பெண்கள் கூட்டமா....?"

தக்குடுவோட அம்மாவை கண்டுபிடித்து அறிமுகபடுத்தி கொண்டேன். நன்றாய் பழகினார்கள்."ஒ.....தானை தலைவியா நன்னா தெரியுமே...நிறைய சொல்லிருக்கான்." என்றார்கள்.

"ஐயோ, நிறைய சொன்னானா...? என்னன்னு சொன்னானோ....?"

அவர்களே எங்களை அழைத்து போய் பதிவர்களை அறிமுகபடுத்தி வைத்தார்கள். எல்லோரும் ரொம்ப முக்கியமான இடத்தில் இருந்ததால் ஒன்றுமே பேச முடியவில்லை.T.R.C மாமாவும்,  R.V.S சாரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். பாலாஜி வெங்கட்டும்,எல்.கே வும் தனியாக வந்திருந்தார்கள்.


R.V.S சாரை வேங்கடசுப்ரமணியன் என்று T.R.C மாமா அறிமுகபடுத்தி வைத்தார் . இப்போது தான் இந்த பதிவை எழுதும்போது தான்  R.V.S சார்  தான்  வேங்கடசுப்ரமணியன்  என்பது தெரிந்தது (நீ ஒரு டயுப் லைட் என்று யாருங்க கமெண்ட் அடிக்கறது).

நாங்கள் எங்கள் கிராமத்துக்கு திரும்ப வேண்டி இருந்ததால் அவர்கள் சாப்பிட்டு விட்டு வரும்வரை காத்திருக்க முடியவில்லை. இதற்கே சின்னவள் சாமியாட ஆரம்பித்து விட்டாள்.

இங்கு முக்கியமான ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். அது தான் அங்கு நடந்த பஜனை கச்சேரி. அடாடாடாட.....அந்த மாமிக்கு என்ன ஒரு சாரிரம்.   அதையும் ஒரு மாமா ரசித்து தாளம் போட்டு கொண்டிருந்தார். அனேகமாக அவர் அவருடைய ஹியரிங் எய்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்திருப்பார் என்று நினைக்கிறன்.

தலைவர் வேற, "ஐயோ....!அந்த மாமிக்கு யாராவது ஐஸ் கிரீம் ஒரு நாலு குடுங்கோளேன். அதையும் ஒரு நாலு நாள் முன்னாடியே செஞ்சிருக்கணும்.அதோட பனிலையும் பத்து தரம் அலைய விட்டிருக்கணும்." என்று கமெண்ட் அடித்தார்.

முதல் பதிவர் சந்திப்பே மங்களகரமாய் கல்யாணத்தில் நடந்தது மகிழ்ச்சியாய் இருந்தது.

புதன், நவம்பர் 16, 2011

தங்கச்சி பாப்பா பிறந்தநாள் (நவம்பர் 19)





"ஐயோ பாவம் நீ !, பேர்சொல்ல உனக்கு ஒரு ஆண்வாரிசு இல்லையே?"

நான் மனதிற்குள் :  "இங்கே எனக்கு என்ன சாம்ராஜ்ஜியமா இருக்கிறது , அடுத்த  பட்டத்திற்கு இளவரசன்  இல்லாமல் தவிப்பதற்கு?"

"பையன் தான் வச்சு சோறு போடுவான்."

நான் மனதிற்குள் :      "நான் என்ன நாயா..? பூனையா...? என்னை வச்சு ஒருத்தர் சோறுபோட.இல்ல எல்லா பையன்களும் அவங்க அவங்க அப்பா அம்மாவ வச்சு சோறு போட்டுகிட்டு தான்  இருக்காங்களா?"

"உனக்கு ஆம்பள பையன் இல்லையே யாரு கொள்ளி போடுவா? யாரு கர்மா பண்ணுவா?" பாவம் பண்ணினவங்களுக்கு தான் கர்மா பண்ண புள்ளைல்லாம இருக்குமாம். ஏதோ ஒரு புஸ்தகத்துல படிச்சேன்."

நான் மனதிற்குள் : அந்த கவலை உங்களுக்கெதற்கு? என் பாவத்தையும் புண்ணியத்தையும் கணக்கு பண்ண நீங்கள் என்ன சித்ரகுப்தனா? பையன் இருக்கிரவங்களுக்குமே அவங்க செத்ததுக்கப்புறம், யாரு கொள்ளி போடறங்கன்னு  தெரியாது. அதைப்பற்றி எனகென்ன கவலை."


இதை யாரும் தயவு செய்து கற்பனை என்று எண்ணி விட வேண்டாம். இப்படியெல்லாம் அடுத்தவர் மனதை புண்படுத்துவதற்காகவே பேசுபவர்கள்  இன்னமும் நிறையவே இருக்கிறார்கள். நான் அவர்கள் பேசுவதை இப்போதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.


"குழந்தை பெறுவதில் அல்லது ஆண் குழந்தை பெற்றதில் உங்கள் சாதனை என்ன?" என்று கேட்கவேண்டும் என்று நினைப்பேன் .ஆனால், இவர்களுடன் விவாதம் செய்வதை விட இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்து விட்டேன்.

என்னிலை எவ்வளவோ மேல். இளம் விதவையான ஒரு தோழியும், குழந்தை இல்லாத ஒரு தோழியும் படும் அவமானங்கள் வார்த்தையால் விவரிக்க முடியாதவை.

அவர்கள் தங்கள் நிலையை என்னிடம் சொல்லி வருந்திய  போது அவர்களிடம் நான் கேட்ட கேள்வி இது தான்," உங்களுக்கு ஜான்சி ராணி லக்ஷ்மி பாயை தெரியுமா?"

"தெரியும்"

"யார்?"

"சுதந்திர போரட்ட வீராங்கனை."

"அப்படியானால் ஜான்சி ராணி என்றதும் உங்களுக்கு என்ன நினைவிற்கு வருகிறது?"

"அவர்களின் வீரமும், தேச பக்தியும்."

"அவர்களுக்கு குழந்தை இல்லை(ஒரு மகன் பிறந்து சிறிது நாட்களிலேயே இறந்து விட்டது) என்பதும், அவர்கள் விதவை என்பதும் நினைவிற்கு வரவில்லையல்லவா?"

"!!!!!!!!!!"

நாம், நம் செயல்களினாலேயே அறியபடுகிறோம். நம் பாக்யங்களினால் அல்ல .

வாழ்கையில் உருப்படியாய் ஏதும் சாதிக்காதவர்கள் தான், தன் பாக்யங்களையே தன் சாதனைகள் போல் காட்டிகொள்வார்கள்.

ஜான்சி ராணி காசியில் ஒரு அந்தண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், இளம் வயதிலேயே போர் கலைகள் பயிற்சி மற்றும் கல்வியறிவும் பெற்றிருந்தார். ஜான்சியின் மகாராஜா கங்காதர் ராவ் லக்ஷ்மி பாயை அவர் வீரம், அறிவு, அழகு,குணம் ஆகியவற்றை விரும்பியே மணந்தார்.

ராணி லக்ஷ்மி பாயின் இயற்பெயர் மணிகர்ணிகா, செல்லமாக மனு. மனுவிற்கு ராஜா கங்காதர் ராவ்வுடன் திருமணம் நடந்த போது அவர் பதிமூன்று வயது குட்டி பெண் (இந்த காலமாக இருந்தால் அம்மா கட்டிகொடுக்கும் லஞ்ச்சை எடுத்து கொண்டு ஸ்கூல் போகும். ஏழாவதோ, எட்டாவதோ படித்து கொண்டிருந்திருப்பார்). 

ஆனால், மனு குட்டி அந்த வயதிலேயே ஒரு ராஜ்ஜியத்தின் மகாராணி பொறுப்பை ஏற்றார். 


சொத்திற்காக புகுந்த வீட்டில் கலகம் செய்யும்  பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், ராணி லக்ஷ்மி பாயோ தன் கணவரின் ராஜ்யதுக்காக அந்நியர்களுடன் தான் போர் புரிந்தார், குடும்பத்துக்குள் அல்ல.

மகாராஜா கங்காதர் ராவ் இறந்த பின் ஜான்சி மக்களை தன் சொந்த குழந்தைகளை போலவும், ஜான்சியை தன் உயரினும் மேலாகவும் காத்தார் என்பது வரலாறு சொல்லும் செய்தி.

அந்த  காலத்தில், கணவன் இறந்து விட்டால் உடன் கட்டை ஏறுவார்கள். இந்த காலத்தில் பிறந்த வீட்டிற்கு போய் விடுவார்கள். ஆனால், லக்ஷ்மி பாயோ தன் கணவரின் விருப்பப்படி அவர்கள் ச்விகார  புத்திரனை அரியணையில் அமர்த்தினார். அதற்கு எதிர்ப்பு வந்த போது மகனை முதுகில் சுமந்தபடி போர்களத்தில் பாய்ந்தார்.

பெற்ற குழந்தையையே ஆயாவிடம் விட்டு செல்லும் பெண்களும் உண்டு. ராணி நினைத்திருந்தால் யாராவது தாதியிடம் குழந்தையை விட்டு விட்டு போருக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

மகாராணி லக்ஷ்மி பாய் இந்த உலகத்தில் வெறும் இருபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்(இளம் பெண்). அவரை விட இரண்டு மூன்று மடங்கு அதிக வருடங்கள் வாழ்ந்து எத்தனை பேர் சாமானியர்களாகவே மடிகிறோம்.

இதுபோன்ற தலைமை பண்புகள் இயல்பிலேயே அமைய பெற்ற மகாராணி லக்ஷ்மி பாயை என் ஆதர்ச தலைவியாக எண்ணுகிறேன். 

எனவே, நம்  பாக்கியங்களை குறித்து நினைக்காமல், நம் செயல்களை திருத்திக்கொண்டு, நம் வாழ்க்கையை பயனுள்ளதாக ஆகிக்கொள்ளவேண்டும்.

" வாழ்பவர் கோடி, மறைபவர் கோடி 
 மக்களின் மனதில் நிற்பவர் யார் ?"

"மாபெரும் வீரர், மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்."




                                               *************************




டெயில் பீஸ் : தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு. 

என் பெரியவளிடம் "நவம்பர் 19 உன் தங்கச்சி பிறந்த நாள்" என்று சொன்னால். 

"ஜான்சி ராணிக்கும் அன்றைக்கு தான் பிறந்த நாள்" என்று சட்டேன்று சொல்லுவாள். 

"சபாஷ் மகளே !"


செவ்வாய், நவம்பர் 01, 2011

லக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி 3

மேடையில் பல விதமான லக்ஷ்மி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. க்ருஹ லக்ஷ்மி, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமன் காலடியில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி,விநாயகருடன் கூடிய லக்ஷ்மி, ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தில் சீதையாக உள்ள லக்ஷ்மி இப்படி பல விதமான லக்ஷ்மிகள்.

எனக்கு பாற்கடலில் இருந்து கற்பக விருக்ஷம், காமதேனு, தன்வந்திரி, சந்திரன் முதலியரோடு ஆவிர்பவித்து வரும் லக்ஷ்மி, பூஜை செய்ய கொடுக்கப்பட்டது. சந்நிதிக்கு நேரே உட்கார வைக்கப்பட்டேன். எனக்கு ரொம்ப குற்ற உணர்வாக இருந்தது. "நான் தான் இதையெல்லாம் கேலி செய்தேனே ! என்னையே பூஜை செய்ய வைத்து, இதென்ன விளையாட்டடி ?" என்று கேட்டேன்.

"இதென்ன, இனிமேல் தான் இருக்கிறது பார் !" என்று அவள் முடிவு செய்திருக்க, அதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

பூஜை தொடங்கியது. அவரவர் லக்ஷ்மிக்கு உபசாரங்கள் குருக்கள் சொல்ல சொல்ல செய்ய ஆரம்பித்தோம். நான் லக்ஷ்மிக்கு ஒவ்வொரு முறை சேவை செய்யும் போதும் முன்னால் இருக்கும் தன்வந்திரி பகவான் ஆட ஆரம்பித்தார். "அட ! இதென்னடா வம்பாய் போய்விட்டதே ! யாருக்கோ பத்திரமாய் திருப்பி தரவேண்டிய மூர்த்தி இப்படி ஆடுகிறதே ! உடைந்துவிட்டால் என்ன செய்வது !"   என்று என்னை கவலை பிடித்து கொண்டது. நான் தன்வந்திரியை பிடித்து கொண்டேன். ஒரு கையால் தன்வந்திரியை பிடித்து கொண்டே பூஜையை தொடர்ந்தேன். ஒருவேளை நம்ம health ஆட்டம் காண்ணறது என்பதை தான் இவர் symbolic ஆ சொல்றாரோ என்று கூட தோன்றியது.

லக்ஷ்மி அஷ்டோத்தரம்,கனகதாரா ஸ்தோத்ரம் எல்லாம் சொல்லி பூஜை நடந்தது. பூஜையின் நடுவில் சற்றே திரும்பி பார்த்தேன். கூட்டம் கூட்டமாய் மக்கள். மக்களுக்கும் மேடைக்கும் நடுவில் ஒரு கயறு கட்டி விட்டிருந்தார்கள். என் சின்ன பெண், "அம்மாவிடம் போவேன்", என்று என் அம்மாவை படுத்திகொண்டிருந்தாள்.

ஒருவழியாய் பூஜை நல்ல படியாய் முடிந்தது. அங்கு பிரசாதமாக பச்சை குங்குமம்,பச்சை ப்ளௌஸ்  பிட்,பச்சை கேசரி,மஞ்சள்,திருமாங்கல்ய சரடு முதலானவை வைக்கபட்டிருந்தன. அவற்றை எங்களையே எடுத்து கொள்ள சொன்னார்கள். 

பின்னர், பூஜை செய்தவர்கள் அவரவர் மூர்த்தங்களை எடுத்து கொண்டு சந்நிதிக்கு வந்து பிரசாதம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றார்கள். நாங்கள் பூஜை மட்டும் தானே செய்தோம் அதனால் உபயதரர்களே அவரவர் லக்ஷ்மியை எடுத்துக்கொண்டு சென்று பிரசாதம் வாங்கிகொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்.

முடிவில் டான்ஸ் ஸ்கூல் குழந்தைகளும் நாங்களும் அழைக்கப்பட்டோம். குழந்தைகள் அனைவரையும் வரிசையாக நின்று குரு வணக்கம் செய்ய சொன்னார்கள். குழந்தைகளும் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் சிறு மலர் சரம் சூட்டி ஒரு குபேரன் பொம்மை (நான் கேலி செய்தேனே ! அதே தான் ) பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயம் கொடுத்தார்கள்.

பின்னர், டான்ஸ் டீச்சரை கர்ப்ப கிருஹதிற்குள் அழைத்தார்கள். டீச்சரும் ஏறி நின்றார். பின்னர், கூட்டத்தில் குருக்கள் கண்களால் துழாவினார். அவர் பார்வை என்மேல் நின்றது. என்னை கை காட்டி,"நீங்க வாங்க !" என்றார்.

நானும், "சரி, டீச்சர் பெண் என்பதால் ஆண்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்ய முடியாது. அதனால், அவருக்கு மாலை போட நம்மை அழைக்கிறார்கள் போலிருக்கிறது." என்று எண்ணியபடியே மேலேறினேன்.

நான் மேலேறி நின்றதும் டீச்சரிடம்,"இவங்க தானே உங்களுக்கு அடுத்தபடி (assistant) !?" என்றார் குருக்கள். நான் திரு திருவென விழிக்க டீச்சரோ சட்டேன்று ,"ஆமாம்!" என்றுவிட்டார்.

நான்,"என்ன மிஸ்.....!?" என்று அதிர்ச்சியோடு நோக்க, அவரோ என்னை "எல்லாம் சரிதான் !" என்பது போல் பார்வையாலேயே கையமர்த்தினார். 

டீச்சருக்கு ஒரு ஒண்ணரையடி லக்ஷ்மி பொம்மையும்,குபேரன் பொம்மையும், பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயமும் தந்தார்கள்.

அடுத்ததாக எனக்கும் அதேபோல் ஒண்ணரையடி லக்ஷ்மி பொம்மையும்,குபேரன் பொம்மையும், பூஜையில் வைத்த ஐந்து ரூபாய் நாணயமும் தந்தார்கள்.

எல்லோரும், "உங்களுக்கு அதிர்ஷ்டம் ! " என்றார்கள்.

குழந்தைகள், "அந்த அம்பாள தாம்மா! கொஞ்சம் கொஞ்சிட்டு தரோம் !" என்றார்கள்.

"ம்ம்ம்... நான் பணம் கொடுத்து குபேரன் பொம்மை வாங்கினேன். இவள் என்னை கிண்டல் செய்தாள்,இவளுக்கு பணம் தராமலே, மூன்று குபேரன்,லக்ஷ்மி எல்லாம் கிடைச்சிருக்கு." என்று என் அம்மா எல்லோரிடமும் சொன்னார்கள்.


வீட்டிற்கு வந்து ஆரத்தி எடுத்து கொலுவில் வைத்தோம். எந்த குபேரன் பொம்மையை என் அம்மா வாங்கியதை கேலி செய்தேனோ அதே குபேரன் பொம்மை எனக்கும், குழந்தைகளுக்கும் ஆளுக்கொன்றாய் மூன்று வந்து வீட்டில் உட்கார்ந்திருக்கின்றனர்.

லக்ஷ்மி பொம்மையை கொலு பொம்மைகள் வைக்கும் பெட்டிக்குள் வைத்து மேலே வைக்க முயற்சி செய்தேன், முடியவில்லை. தனியாக ஒரு அட்டை பெட்டி கடையில் இருந்து வாங்கிவந்தேன். அதனுள்ளும் வைக்க முடியாமல் பெரியதாக இருப்பதால், என்னை தினமும் கேலி செய்து கொண்டு என் கண்ணெதிரிலேயே ஹால்லில் இருக்கிறாள் என் ச்வீகார புத்ரி.


ச்வீகார புத்ரி 

அடுத்தவருடம் இவள் உயரத்திற்கு தகுந்தார் போல ஒரு மகாவிஷ்ணுவை வாங்கி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தலைவரிடம் கூறியிருக்கிறேன். 

 பின்னே, பெண்ணை பெற்றுவிட்டால் பொறுப்பு வேண்டாமா !?

"வருந்தி அழைத்தாலும் வாராது, வாரா !
பொருந்துமெனில் போமினேன்றால் போகா"


சிறுவயதில் செல்வத்தை பற்றி படித்தது நினைவிற்கு வந்தது.

மூன்று குபேரர்கள்



அது சரி, சகோதர சகோதரிகளே! நீங்கள் சொல்லுங்கள், எல்லோரும் "உங்களுக்கு அதிர்ஷ்டம்! உங்களுக்கு அதிர்ஷ்டம்!" என்றார்களே. எனக்கு என்ன கிடைத்தது "அருளா?" "பொருளா?"

புதன், அக்டோபர் 26, 2011

லக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி - 2

வணக்கம் சகோதர சகோதரிகளே!,

"லக்ஷ்மி கடாக்ஷம்" என்று சென்ற பதிவிற்கும் இந்த பதிவிற்கும் ஏன் தலைப்பிட்டேன் என்று புத்திசாலிகளான உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

இருந்தாலும் நானே தெளிவு படுத்திவிடுகிறேன். ஒருவருக்கு கிடைக்கும் தனலாபம் மட்டும் தான் "லக்ஷ்மி கடாக்ஷம்" என்பதில்லை. நல்ல நட்பு, சத் புத்திர பாக்கியம், ஆரோக்கியமான உடல்  யாவுமே "லக்ஷ்மி கடாக்ஷம்" தானே!?

அந்த வகையில் என் பழைய நட்புகள் திரும்ப கிடைத்தது,குழந்தைகள் மூலம் கிடைத்த பெருமை ஆகியவையுமே "லக்ஷ்மி கடாக்ஷம்" தான்.

குழந்தைகள் நவராத்திரியில் உள்ளூர் அம்மன் கோவில்கள் இரண்டில் நடனமாடினார்கள். அவை நவராத்திரிக்கு முன்பே முடிவானவை. ஆனால், விஜய தசமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டான்ஸ் டீச்சர் போன் செய்து,"கேளம்பாக்கத்தில் ஸ்ரீ குபேர லக்ஷ்மி கோவிலில் விஜய தசமி அன்று ஆட அழைத்துள்ளார்கள், பல குழந்தைகள் லீவுக்கு ஊருக்கு போய்விட்டார்கள் . உங்கள் மகளை சேர்த்துகொள்ளலாமா?" என்று கேட்டார்கள்.

நான் சற்றும் யோசிக்காமல்,"நிச்சயமாய் மிஸ்! கொடுத்து வைத்திருக்க வேண்டுமே என் பெண்!" என்று சொல்லிவிட்டேன்.

"அப்படியானால் புது பாட்டு தயார் செய்யவேண்டும். இனிவரும் இரண்டு நாட்களுக்கும் உங்கள் பெண்ணை பயிற்சிக்கு அனுப்புங்கள். கோவிலுக்கு நீங்களே தான் வரவேண்டி இருக்கும், பரவால்லையா?" என்று கேட்டார்கள். 

எதைபற்றியும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன்.பின்னர் தான் நினைவு வந்தது அந்த ஊர் வண்டலூர் தாண்டி எங்கோ இருக்கிறதென்று தான் கேள்வி பட்டிருக்கிறேனே தவிர, வழியோ வேறு தகவல்களோ தெரியாது. விஜய தசமி அன்று தலைவருக்கும் கட்டாயம் அலுவலகம் செல்லவேண்டும்.

தலைவரிடம் சொன்னபோது,"ஓ! அப்படியா ! வெரி குட் ! குழந்தைகளை அழைச்சிண்டு போய்ட்டு வந்துடு, என்னால வரமுடியாது." என்றார் கூலாக.

விஜய தசமி அன்று என் அம்மாவும் வந்திருந்தார். கோவிலுக்கு டான்ஸ் பார்க்க  நானும் வருகிறேன் என்றார். சரியென்று, ஒரு தெரிந்தவர்கள் (டான்ஸ் கிளாஸ் மூலம்) காரில் குழந்தைகளையும் அழைத்து கொண்டு கிளம்பினோம்.

ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஆலய முகப்பு , இரத்னமங்கலம்


அது கேளம்பக்கம்  தாண்டி ரத்னமங்கலம் என்ற அழகான சிறு கிராமம். அங்கு ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு கோவில் கட்டயுள்ளார்கள். அந்த கோவிலில் கோவில் மதில் சுவர் வண்ணம் முதற்கொண்டு எல்லாமே பச்சை தான். பச்சை பட்டு பாவாடை தான் அணிந்து நடனமாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லபட்டிருந்தது.

கோவிலுக்கு சென்றவுடன் என் அம்மா கோவிலை சுற்ற போய்விட்டார். நான் குழந்தைகளுக்கு பூ,நகைகள் ஆகியவற்றை சரி செய்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருந்தேன். கற்பக்ரஹதிர்க்கு முன் ஒரு மேடை போன்ற இடம் அதில் வித விதமாக கொலு பொம்மைகள் வைக்க பட்டிருந்தன. இந்த கோவிலில் இப்படித்தான் கொலு வைப்பார்கள் போலிருக்கிறது என்று நினைத்து கொண்டேன்.

அங்கு வியாழகிழமை சாயங்காலம் விசேஷமாம் அதிலும் அன்று விஜய தசமி அல்லவா, அதனால் "ஷோடச லக்ஷ்மி பூஜை" ஏற்பாடாகி இருந்தது. என் அம்மா  சுற்றி விட்டு சிறிது நேரத்தில் வந்தார். கையில் இந்த "laughing buddha" என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒரு பொம்மை. "இங்க பாருடி ! இந்த குபேரன் பொம்மை வீட்டுல வச்சிண்டா ரொம்ப நல்லதாம், இருபத்தியஞ்சு ரூபாய் கொடுத்து வாங்கினேன்!"

என் வாய் சும்மா இருக்கவில்லை. "இது குபேரனா !? ஏதோ சீனா பொம்மை மாதிரி இருக்கு, இத வச்சிண்டா பணம் வருமா? இல்ல பணம் வந்தா எல்லாமே தான் வருமா!? எம்மா இப்படி இதையெல்லாம் நம்பர....!?" என்றேன்.

"இப்படி பேசற, நீயும் ஒரு நாள் இதெல்லாம் வாங்கத்தான் போற அப்போ தெரியும் உனக்கு."

"நானா?, இந்த மாதிரி பொம்மையெல்லாம் வாங்கவே மாட்டேன்.அந்த மாதிரி ஒரு நிலைமை எனக்கு ஒரு நாளும் வராது."

நான் இப்படி சொன்னதும் என் அம்மாவிற்கு வந்ததே ஒரு கோபம்,"வேண்டாண்டி!, சந்நிதில்ல நின்னுண்டு இப்படியெல்லாம் பேசாத படுவடி நீ !" (விஜய தசமி ஆசீர்வாதம்) என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி சென்று நின்று கொண்டார்.

எனக்கு ஒரே யோசனை,"நான் தவறாக என்ன சொன்னேன்?, இறைவனை பொருட்செல்வதிர்க்காக வணங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு வேளை மகளின் திருமணம், குடும்பத்தில் யாருக்கோ பெரிய சிகிச்சை தேவை படும் நோய் என்று எதாவது வந்தால் அப்போது எனக்கு பணம் தேவை படுமோ? பெரிய வசதிகள் ஏதும் இல்லாத போதும் நான் பணத்தை பற்றி பெரிதும் கவலை படுவதில்லை."

இவ்விதம் எண்ணி கொண்டே நின்று கொண்டிருக்கையில் டான்ஸ் டீச்சர் என்னிடம்,"சீக்கிரமா என் கூட வாங்க !" என்று சொல்லிவிட்டு விறு விறுவென சந்நிதியை சுற்றி நடக்க ஆரம்பித்தார்.

என்ன ஏதென்று புரியாமலே நானும் பின் தொடர்ந்தேன். நான்,டான்ஸ் டீச்சர், எங்களை காரில் அழைத்து வந்த மானஸா அம்மா, டீச்சரின் அக்கா, டீச்சரின் மாமி ஆகியோர் சந்நிதியை சுற்றி கொண்டு சென்று அங்கு கொலு பொம்மைகள் வைக்க பட்டிருந்த மேடை போன்ற பகுதிக்கு சென்றோம்.

அங்கு, "ஷோடச லக்ஷ்மி பூஜைக்கு பணம் கட்டி இருந்த உபயதாரர்கள் ஐந்து பேர் வரவில்லை அவர்களுக்கு பதில் நீங்கள் இந்த பொம்மைகளுக்கு பூஜை செய்யலாம். ஆனால், பூஜை தொடங்குவதற்குள் அவர்கள் வந்து விட்டால் நீங்கள் எழுந்து விடவேண்டும்.பூஜை முடிந்த பின் பிரசாதங்கள் நீங்கள் எடுத்து கொள்ளலாம். இந்த பொம்மைகள் உபயதரர்களுக்கு (அவர்கள் பணம் கட்டியிருப்பதால்) கொடுக்கப்படும். நீங்கள் பூஜை செய்ய வாய்ப்பு கிடைத்ததையே பாக்யமாக கருதலாம்." என்று எங்களுக்கு சொல்லப்பட்டது.

                                                                                                                                     .......தொடரும்

பின் குறிப்பு : அங்கு பூஜை முதலானவற்றை படம் எடுக்க அனுமதிக்கவில்லை. இந்த போட்டோ நெட்டில் சுட்டது.

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

லக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி - 1


பதிவுலக சகோதர சகோதரிகளே !

நலம் தானே !, நானும் என் சுற்றமும், நட்பும் யாவரும் நலமே. நவராத்திரி கொண்டாடங்கள் இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எனக்கும் நவராத்திரி மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும், உடல் நிறைந்த வலிகளோடும் இனிதே முடிந்தது. "வலிகள் எப்பவும் இருக்கிறது தானே இப்போ என்ன புதுசா!", என்கிறீர்களா. அதுவும் சரிதான்.

இம்முறை குழந்தைகள் மூன்று கோவில்களில் நடனமாடினார்கள். புதுசா கொலு படி வாங்கினோம். அஷ்டலக்ஷ்மி செட் வாங்கினோம். இவை யாவற்றையும் விட மகிழ்ச்சியான விஷயம், சுமார் பதினேழு வருடங்களுக்கு பின் என் உயிர் தோழியை சந்தித்ததும், அவளுடனான நட்பை புதிப்பித்து கொண்டதுமாகும்.

என் இள வயது தோழிகள் மதுபாலா, ஜோத்ச்னா ஆகியோரை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். இருவருக்குமே ஆணும், பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள், நல்ல கணவன், மது தொழில் ரீதியாகவும் நல்ல நிலையில் உள்ளாள். 

மதுவை சென்ற வருடமே சந்தித்து விட்டேன். அது ஒரு சுவாரசியமான நிகழ்வு.   ஜோத்ச்னாவை தற்செயலாய் சாலையில் சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சி  அடைந்தாள். இருவரும் பரஸ்பரம் குடும்பத்துடன் மற்றவர் வீட்டிற்கு சென்று வந்தோம்.

குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளை செல் போனில் தான் படம் பிடித்தேன். அவற்றை இங்கே இணைக்கிறேன். எவ்வளவு தெளிவாக இருக்குமோ தெரியவில்லை. எனக்கு எதையுமே சுருக்கமாக சொல்ல தெரிவதில்லை. விஜய தசமி அன்று ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி நடந்தது. அதை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.



செவ்வாய், செப்டம்பர் 20, 2011

சர்வம் சக்திமயம் பாரு!



கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" நூலில் படித்தது இது.

பிரம்ம தேவரிடம் போய் ஒருவர் கேட்டாராம், "சிவன் பாதி, சக்தி பாதி சேர்ந்து அர்த்தநாரீஸ்வர வடிவமாகியது சரிதான். ஆனால் சிவனின் மறுபாதியும் சக்தியின் மறுபாதியும் எங்கே போயின..?"

பிரம்ம தேவர் சொன்னாராம், "சிவனின் மறுபாதியும் சக்தியின் மறுபாதியும் தான் இந்த உலகில் ஆண்களாகவும் பெண்களாகவும், பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்." 

நான் படித்த அறிவியல் பத்தாம் வகுப்பு வரைதான். ஆனால் அதில் நான் படித்தது "energy neither can be created nor be destroyed. one form of energy will transform into another form." என்பது தான். அதாவது சக்தி ஆக்கமும் அழிவும் இல்லாதது என்பதே.(தற்போதைய அறிவியலில் இந்த நிலைபாட்டிலிருந்து ஏதேனும் மாற்றம் உண்டா என்பது தெரியவில்லை.) சக்தியும் சிவமும் சேர்ந்ததே உலகம். அதாவது, சக்தி மோனநிலையில் இருக்கும் போது சிவமாகவும், செயல் வடிவமாகும் போது சக்தியாகவும் தோன்றுகின்றன. ஆனால் அவற்றில் பேதமில்லை.

ஒரு கணித பேராசிரியரை சந்தித்தேன். அவர் கணினியில் ஏன் பைனரி உபயோகபடுத்த படுகிறது என்பதற்கு நல்ல விளக்கம் கொடுத்தார். இந்த உலகில் எல்லாமே இரண்டு நிலைகளை கொண்டுள்ளன. இரவு-பகல், ஆன்-ஆப், ஆண்-பெண் பாசிடிவ்-நெகடிவ் போன்றவையே இதற்கு உதாரணங்கள் என்றார்.அப்படியே கணினியிலும் 0,1  உபயோகபடுத்தபடுகிறது என்றார்.

உடலும் உயிரும் தனி தனியே இயங்க முடியாது. "சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்..." என்று அபிராம பட்டர் அன்னையை துதிக்கிறார். சொல்லும் பொருளும் பிரிக்கமுடியாதவை.

எல்லா உயிர்களிடத்தும் இருக்கும் ஆத்மா ஒன்றே. எல்லா உயிர்களையும் ஞானி சமமாக காண்பான், என்கிறது கீதை. எல்லா உயிர்களையும் சமமாக பார்க்கும் (அதாவது இறைவடிவமாக) காணும் பக்குவம் நமக்கு வரவேண்டும் என்பதற்காக ஏற்பட்டதே நவராத்திரி கொலு.

நம்மால் எல்லா உயிர்களையும் சமமாக பார்க்க முடியாவிட்டாலும் சரிபாதியான பெண்களை மட்டுமாவது தன்னை போன்ற மனித ஜீவன் என்ற எண்ணத்தோடு பார்க்கவேண்டாமா?

தாவர வகைகள், விலங்கினங்கள் யாவற்றிலும் ஆணும் பெண்ணும் உண்டு. ஆனால், இன்றும் படித்தவர்களும் ஆண் குழந்தை தான் உயர்ந்தது என்று பெண்  குழந்தை பிறக்ககூடதேன்றும் வேண்டுதல்கள் செய்து கொள்வதும், நவீன மருத்துவ முறைகளை நாடுவதும் அதிகமாகவே இருக்கிறது.  

வெறும் ஆண்கள் மட்டும் இருந்தால் உலகம் அழகாக இருக்காது. வெறும் பெண் மட்டும் இருந்தால் உலகம் வீரியத்தோடு இருக்காது. இந்த நவராத்திரியில் அம்பிகையை  வழிபடுவதோடு நம் மனதில் இருக்கும் இந்த வேறுபாட்டையும் களைந்தேரிவோமாக.

இந்த கருத்தை பெரியவர்கள் சிறியவர்கள்,படித்தவர்கள், படிக்காதவர்கள், மகான்கள், மாமேதைகள், அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்  எல்லோரும் சொல்லிவிட்டார்கள். எனவே, நவராத்திரி சிறப்பு பதிவாக நானும் சொல்லிவிட்டேன். அடுத்து இனி பிறக்கும் குழந்தையும் கூட சொல்லும். ஆனாலும் அவரவர் தானாக மாறவில்லையானால் ஒன்றும் பயனில்லை.

"ஒ மென்று உரைத்தனர் தேவர் - ஓம் 
ஒ மென்று சொல்லி உறுமிற்று வானம்."

  "........................................."

"நாமுங் கதையை முடித்தோம்-இந்த 
நானில முற்றும் நல் லின்பத்தில் வாழ்க!" 

                                                      ----மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

பின் குறிப்பு : குழந்தைகளுக்கு நவராத்திரி விடுமுறை கிடையாது, ஆனால் நான் நவராத்திரிக்கு லீவ். இன்னமும் இரண்டு வாரங்கள் ஆகும், நான் மீண்டும் எழுத. அதுவரைக்கும் என் ஆருயிர் ரசிகர்களாகிய நீங்கள் வருத்த படகூடாதே என்றுதான் இரண்டு பதிவுகளாக போட்டு விட்டேன்.படித்துக்கொண்டும் கமெண்ட் போட்டுக்கொண்டும் சமர்த்தாக இருக்கவும்.ஹா..ஹா...ஹா. ச்சும்மா ....  

கவர்மென்ட் ஆஸ்பத்திரி

"நீங்கள் கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ள போவீர்களா ? " என்று நான் கேட்டால் உங்களில் எத்தனை பேர் "ஆம், போவேன்!" என்று சொல்லுவீர்கள்? நிச்சயம் பலரும் இல்லை என்று தான் சொல்வீர்கள். இதற்கு என்ன காரணம்?  அரசாங்க சேவை என்றாலே அது தரம் குறைந்ததாக தான் இருக்கும் என்ற எண்ணம் நம் மனதில் பதிந்து விட்டது தான் காரணம்.

அது ஓரளவு உண்மை தான் என்றாலும் முழு உண்மையல்ல. எல்லா இடங்களிலும் தவறுகள் நிகழ்கின்றன. அதே போல் தான் அரசாங்க சேவைகளிலும் நிகழ்கின்றன.

அரசாங்கம் என்பது வேறு யாரோ இல்லை. அது நாம் தான். எனக்கு இந்த விஷயத்தில் நிறைய அனுபவம்கள் உண்டு. சாதாரண காய்ச்சலுக்காக என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் கூட உங்களுக்கு ECG, CT Scan,MRI Scan எல்லாம் எடுத்து விடுவார்கள். அது மட்டுமல்ல அங்குள்ள மருத்துவர்கள் நல்ல அனுபவம் உள்ளவர்களா என்பதும் நிச்சயம் இல்லை. ஆனால் அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு பல விதமான நோயாளிகளை  சந்திக்கும் அனுபவம் இருக்கிறது. மேலும், விபத்துக்கள்,இயற்கை சீற்றங்கள் போன்ற சமயங்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதால் அவர்களால் எல்லாவிதமான நோயாளிகளையும் எளிதாக கையாளமுடியும். scan centre, lab போன்றவற்றோடு  link வைத்துகொண்டு கமிஷன் வாங்க மாட்டார்கள்.

"ஆனால், சுத்தமாக இருக்காதே !" என்கிறீர்களா ? ஆம் சுத்தமாக இருக்காதுதான் ஆனால் அப்படி இருப்பதற்கு யார் காரணம்? நாம் தான். நம்மை போன்ற நோயாளிகள் தான். பாமரர்கள் மட்டுமே செல்ல கூடிய இடமாக அரசு மருத்துவமனைகள் இருப்பதால் தான் இந்த நிலை. நம்மை போன்ற படித்தவர்கள் அடிக்கடி அரசாங்க மருத்துவமனைகளுக்கு செல்ல ஆரம்பித்தால் "ஐயோ! படிச்சவங்க வர இடம், எதாவது சரியாய் இல்லன்னா கேஸ் போட்டுடுவாங்க." என்கிற பயம் ஊழியர்களுக்கும் இருக்கும். அதன் பலன் வசதி இன்மையால் அங்குவரும் பாமர ஏழை நோயாளிகளுக்கும் கிடைக்கும். படிக்காத நோயாளிகளையும் அங்கு சந்திக்கும் போது சுகாதாரத்தை அவர்களுக்கு போதிக்கலாம். 

இப்போதெல்லாம் மருத்துவமனைகளிலும் லப்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. வியாதிகள் அதிகமாகிவிட்டது தான் அதற்கு காரணம் என்று நாம் நினைக்கிறோம். அது ஓரளவு சரியே என்றாலும் சாதரணமாக தொட்டுப்பார்த்தே வைத்தியம் செய்ய கூடிய சிறிய நோய்களுக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே என்று அலைகழிப்பதும், காரணமின்றி அட்மிட் செய்வதுமான தனியாரின்  போக்கும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம்  டிவியில் தனியார் மருத்துவமனைகள் போட்டி போட்டுகொண்டு விளம்பரம் செய்கின்றன. 

இந்நிலையில், அரசாங்க மருத்துவ மனைகளை நாடுவதே நல்லது. நம் வரி பணத்தினால் செயல் படும் அரசாங்க மருத்துவ சேவைகளை பெறுவது நம் உரிமை மட்டுமல்ல, நம் கடமையும் கூட. 

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

கடை நிலை ஊழியர்கள் - (தொடர் பதிவு) இறுதி பகுதி.



 மீனாம்மா :  மீனாம்மாவின் உண்மையான பெயர் இன்றுவரை எனக்கு தெரியாது. மீனாவின் அம்மா மீனாம்மா அவ்வளவு தான். மீனாம்மாவிற்கு மூன்று குழந்தைகள். ஒரு மகன், இரண்டு மகள்கள். மீனாதான் கடைசி. 

சின்னவள் பிறந்த பின் இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு வீட்டு வேலைகளை செய்ய ரொம்ப கஷ்டமாக இருந்ததால் கீழ் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மீனாம்மாவை வேலைக்கு வைத்து கொண்டேன்.

நகர்புற வீடுகளில் வேலை செய்யும் பெண்மணிகளின் சகல லக்ஷணங்களும் மீனாம்மாவிடம் இருந்தன. குடிகார கணவன்,பொறுப்பில்லாத குழந்தைகள், எப்போதும் தேவைகள், சொல்லாமல் மட்டம் போடுவது முதலியன.

அவள் குழந்தைகளிலேயே மீனா தான் பொறுப்பு உள்ளவள். பதிமூன்று, பதினான்கு வயதிருக்கும், தன் அம்மாவிற்கு உதவியாக வந்து வேலை செய்யும். நகராட்சி பள்ளியில் படித்து வந்தாள்.  நான் அடிக்கடி மீனாம்மாவிடம்,"மீனாவை வீட்டு வேலை செய்ய வைக்காதீங்க மீனாம்மா." என்று கண்டித்து கொண்டே இருப்பேன். எப்போதும் பொறுப்பானவர்களிடம் தான் எல்லோரும் அதிகமாக எதிர்பார்கிறார்கள். மீனாவை வஞ்சித்து அவள் சகோதரனுக்கும், சகோதரிக்கும் அதிகமாக செய்வாள் மீனாம்மா. எனக்கு அதில் வருத்தம் தான். ஆனால் அடுத்தவர் வீட்டு விஷயத்தில் நாம் எப்படி தலையிட முடியும்?

அதே காலகட்டத்தில் என் அம்மா வீட்டில் அஞ்சம்மா என்பவர் வேலை செய்து வந்தார். தலைவர் அங்கு சென்றால் "FIVE MUMMY வந்தாச்சா?" என்று விளையாட்டாக கேட்டு வந்தார். உடனே என் சகோதரர்கள்,"அதென்ன உன் வீட்டுக்காரர் எங்க வீட்டு வேலைகாரம்மாவுக்கு பெயர் வைப்பது?  நாங்கள் உங்கள் வீட்டு வேலைகாரம்மாவுக்கு பெயர் வைக்கிறோம் ,"FISH MUMMY" என்று பெயர் வைத்து விட்டார்கள்.

மீனாம்மாவிற்கும் தலைவருக்கும் எட்டாம் பொருத்தம் தான். "அந்தம்மா நல்லா பெருக்க மாட்டேன்குது, சுத்தமா தொடைக்க மாட்டேன்குது, அத ஏன் வேலைக்கு வச்சிருக்க? அனுப்பிடு !" இப்படி தினமும் என்னை படுத்துவது போதாதென்று அந்தம்மாவிடமும்,"மீனாம்மா அங்க பாருங்க தூசி, இங்க சரியாய் தொடைங்க !" என்று விரட்டி கொண்டே இருப்பார்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மீனாம்மாவிற்கு  நான் போடும் டீ பிடிக்காதாம். தலைவர் போடும் டீ தான் பிடிக்குமாம். "அந்த வீட்டுல்ல அந்த ஐயா தான் நல்லா டீ போடுவாரு, அந்தம்மா டீ வேணுமான்னு கேட்டா நான் வேணாமுன்னு சொல்லிடுவேன்." என்று கீழ் வீட்டில் சொன்னாளாம். 

இதை நான் சொன்னதும் தலைவர்,"பார்த்தாயா ! நானா கொண்டு உன் டீயை அட்ஜஸ்ட் பண்ணி குடிக்கிறேன். " என்று சொல்லி சிரித்தார்.

இதை படித்தால், தக்குடு தங்கமணிக்கு "இட்லிமாமி" என்று பெயர் வைத்தது போல் எனக்கும் "டீ டீச்சர்" (tea masterக்கு பெண்பால்) என்று பெயர் வைக்க கூடும்.

கடைசியில் தலைவரின் ஆசை நிறைவேறியது. மீனாம்மா நிறைய வீடுகளில் வேலை செய்ய ஆரம்பித்ததால், குறித்த நேரத்திற்கு வருவதில்லை. அவளாலும் இங்கு தொடர முடியவில்லை. கை வலி, கால் வலி என்று சொல்லிக்கொண்டு மூன்று வருடங்களாக நானே எல்லா வேலைகளையும் செய்வது தொடர்கிறது.

இந்த பதிவை தொடர நான் அழைபவர்கள் : 

மதுராகவி ரமாஜி : என் முதல் வாசகி, தற்சமயம் வரையில் ஒரே வாசகியும் கூட. அவரை நான் அழைப்பது "வாசகிக்கு மரியாதை" என்ற முறையில்.
UNDER THE MANGO TREE (லலிதா அக்கா) : சென்னை மாவடி வைகும் இவர் முறையில் எனக்கு தமக்கை என்றாலும், தோழி,குரு,நலம் விரும்பி என்று பல பல அவதாரங்களை எடுத்து எனக்கு வழி காட்டுபவர். இவரை உங்களுக்கு காட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தக்குடு : என்னதான் என்னை "ஓசி பேப்பர்" என்று கிண்டல் செய்தாலும், நான் இவரை இந்த தொடரை தொடர அழைத்திருக்கும் காரணம் ஆண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் தருவதற்காக என்று நான் சொன்னால் அது உண்மையல்ல. எனக்கு பதிவுலகில் வேறு யாரையும் தெரியாது என்பது தான் உண்மை. தக்குடுவின் நகைச்சுவை  ததும்பும் எழுத்து வன்மையும் ஒரு காரணம்.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கடை நிலை ஊழியர்கள் (தொடர் பதிவு) - பகுதி 2

முத்தம்மா :  நங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்த பிளட்திற்கு பூ விற்க வரும் பெண்.  அந்த பிளாட்டில் நிறைய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள். அங்கு இருந்த 48 வீடுகளுக்கும் செல்ல பெண். இரண்டு ஆண் குழந்தைகள். 

நல்ல மனம், கல கலப்பான பேச்சு இது முத்தம்மாவின் முத்திரை. 

நான் குடி போனவுடன் ஆடிமாதம் ஆரம்பித்திருந்தது. அந்த ஆடி பூரதிற்கு எல்லோருக்கும் வளையல் வாங்கி கொடுத்தேன். முத்தம்மாவிற்கும் கொடுத்தேன். அவள் அந்த வளையளுக்கே மிக மகிழ்ந்து,"அம்மா, நீங்க எனக்கு வளையல் குடுக்கறீங்க, உங்களுக்கு கூடிய சீக்கிரம் வளைகாப்பு வந்து நான் உங்களுக்கு வளையல் போடனும்மா." என்றாள்.

அப்போது எல்லோரும் எங்களை புதுமண தம்பதிகள் என்று எண்ணி இருத்தாலும், நான் என் முதல் குழந்தையை இழந்திருந்த விவரம் யாருக்கும் தெரியாது. முத்தம்மாவின் வார்த்தைகள்  எனக்கு தெய்வ வாக்காகவே தோன்றியது. 

அவள் மகன்களை என்னிடம் கொண்டுவந்து விட்டு, "அம்மா, இதுங்களுக்கு கொஞ்சம் இங்கிலீஷ் சொல்லிகுடுமா. எப்படியாவது இதுங்களை நல்ல படியா படிக்க வச்சிரணும்னு நினைச்சிருக்கேன். இவனுக அப்பன மாதிரி ஆவ கூடாதும்மா. அவன் குடிக்கிறான், கூத்தியா வச்சிருக்கான்." என்றாள்.

எதிர் வீட்டு மாமி வம்பாக,"அவள சித்தின்னு கூப்பிட சொல்லிக்குடுடி முத்தம்மா." என்றார்கள்.

உடனே அவள், "என் சக்களத்தி எப்படிம்மா இதுங்களுக்கு சித்தி ஆவா, என் தங்கச்சி தான் என் புள்ளைங்களுக்கு சித்தி. என்ன இருந்தாலும் ஆம்பள பசங்க அப்பன் இல்லனா தறுதலையா போய்டுங்க. அதனால வீட்டுல ஆம்பளைன்னு ஒருத்தன் இருக்கட்டுமேன்னு தான் என் புருசனையே வீட்ல விட்டு வச்சிருக்கேன்." என்ற புரட்சிகரமான பெண் முத்தம்மா.

ஒரு நாள் கதிரி கோபால்நாத் இன் மகுடி காசெட் போட்டிருந்தேன். முத்தம்மா
வழக்கம் போல் பூ விற்க வந்தாள். திடீரென்று,"அம்மா, அந்த பாட்ட நிறுத்துங்கம்மா, எனக்கு மகுடி கேட்டா சாமி வரும், நான் ஆட ஆரம்பிச்சிருவேன்." என்றவள் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் பாம்பு படமெடுப்பது போல் வைத்து கொண்டு ஆட தயாரானாள்.

பயந்து போன என் மாமியார்,"அய்யய்யோ.....! அந்த காஸ்செட்ட நிறுத்துங்கோ, இவளுக்கு சாமி வந்துடுது போலிருக்கே." என்று அலறவும், கேசட் நிறுத்தப்பட்டது. முத்தம்மாவின்னுள் இருந்த சாமி விடை பெற்றுக்கொண்டது.

இன்றும் அந்த கேசட் போடும் போதெல்லாம் தலைவர், "முத்தம்மா இருந்திருந்தா சாமி வந்து ஆடி இருப்பா." என்று சொல்லி சிரிப்பது வழக்கம்.

நான் பெரியவளை கர்ப்பமாக இருந்த போது முத்தம்மா அவளாகவே வந்து,"உனக்கு குழந்தை பொறந்த உடனே உன்வீட்டு வேலை எல்லாம் நான் செஞ்சுதறேன், நீ கவலையே படாதம்மா." என்றாள்.

எதிர் வீடு மாமியும்,"அவ நன்னா செய்வாடி, அவளையே வேலைக்கு வச்சிக்கோ. நல்ல மனசு, சூது,வாது தெரியாது." என்றார்கள்.

எல்லோரும் என் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்க்க கடவுளுக்கு என் மேல் அவ்வளவு கருணை இல்லை. நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த போதே மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி விட்டது. 

சென்னையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் கை குழந்தையை வைத்துகொண்டு திண்டாடிய போது முத்தம்மா இருந்திருந்தால் நம் குழந்தையை கொண்டாடி வளர்திருப்பாளே என்று நானும் தலைவரும் ஆதங்க பட்டுகொண்டோம்.

......தொடரும்.

கடைநிலை ஊழியர்கள் (தொடர் பதிவு)

எனக்கு எப்போதுமே வீட்டில் வேலை செய்யும் அம்மாள், அலுவலகத்தில் attender, peon போன்றவர்களோடு நல்ல நட்புறவுண்டு. அவர்களின் பாமரத்தனமான பேச்சிலும் ஒரு மேதமை இருக்கும். அவர்களின் வெகுளி தனமான அன்பில் உண்மை இருக்கும். அப்படிப்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.







பிரகாஷ்: நான் வேலை பார்த்த ஆடிட்டர் அலுவலகத்தில் attenderராக இருந்தவன். இளைஞன், எப்போதும் சிரித்த முகம். எல்லோரிடமும் நன்றாக பேசி பழககூடியவன். நான் வேலைக்கு சேரும் முன்பிலிருந்தே அவன் அங்கு வேலை பார்த்து வந்தான். 

நான் வேலைக்கு சேர்ந்து பலநாட்கள் ஆகியும் அவனுடன் அதிகமாக பேசி பழகவில்லை. ஒருநாள் என் அறையில் பல்பு பழுதாகி விட்டது. வேறு பல்பு கொண்டுவந்து மாற்ற சொன்னேன். அவனும் பல்பு மற்றிகொண்டிருந்தான்.

நான் அவனிடம் விளையாட்டாக, "ஏன் பிரகாஷ்... நீ மாற்ற இந்த பல்பு பிரகாசமா எரியுமா?" என்று கேட்டேன்.

திடீரென்று கேட்டதால் முதலில் விழித்து விட்டு, பின்னர் சிரித்தான். "silentஆ இருக்கியேன்னு நினைச்சா பயங்கர கிண்டல் பார்ட்டியா இருப்ப போலிருக்கே மேடம்?" என்றான்.

எல்லோரையும் ஒருமையில் தான் பேசுவான். ஒரு நாள் ஆடிடேர்ரிடம் ஜூனியர்ராக வேலை பார்த்தவர் இவனை "shabby gibbon" என்று திட்டி இருக்கிறார். இவனுக்கு ஏதோ திட்டுகிறார் என்று தான் புரிந்ததே தவிர் அர்த்தம்   புரியவில்லை. ஆனால் அவன் புத்திசாலி. அந்த வார்த்தைகளை ஞாபகம் வைத்துகொண்டு என்னிடம் வந்தான்(என்னை இங்கிலீஷ் புலவர் என்று நினைத்து கொண்டிருந்த அவன் அப்பாவித்தனத்தை என்னவென்று சொல்வது?).

"மேடம்,"shabby gibbon" ன்னா இன்னாது மேடம்?"

""shabby" ன்னா அழுக்கு தெரியும்,"gibbon" ன்னா என்னன்னு தெரியலையேப்பா. dictionary இருந்தா பார்க்கலாம்."

"auditor ரூம்ல dictionary இருக்கு. வா மேடம், வந்து இப்பவே பார்த்து சொல்லு" என்று என்னை வற்புறுத்தி  அழைத்து சென்றான்.

எங்கள் auditor ரோ பயங்கர உஷார் பார்ட்டி. யாரும் எடுத்து கொண்டு ஓடிவிட கூடாது என்பதற்காகவோ என்னவோ ஜனக மகாராஜரின் சிவ தனுசை போல் ஒரு பெரிய dictionary யை வாங்கி வைத்திருப்பார். அதை இருந்த இடத்தில் வைத்தே தான் அர்த்தம் பார்க்க முடியுமே தவிர தூக்க கூட முடியாது.

அதில் "gibbon" என்பதற்கு மனித குரங்கு என்று படத்துடன் தமிழிலும் அர்த்தம் போட்ருந்தது. "இதோ பாரு பிரகாஷ், கிப்பான்னா மனுஷ குரங்குன்னு அர்த்தம்."

"இன்னாது மன்ஸ கொரங்கா? அப்படியா போட்டிருக்குது?" எட்டி பார்த்தான்.

"இக்கும்....ஆமா அப்பிடித்தான் போட்டிருக்குது. அப்பிடின்னா நான் மன்ஸ கொரங்கா...?! அதுவும் அழுக்கு மன்ஸ கொரங்கா?!"

"ஏன் பிரகாஷ், உன்னை யாராவது அப்படி சொல்லிடங்களா?"

"ஆமா மேடம், என்னிய ஒருத்தன் அப்பிடி சொல்லிக்கிறான். அவன நா சொம்மா உடறதில மேடம்." என்றபடி விரைந்து சென்றான்.

அந்த ஜூனியர் வந்ததும் அவரை கும்மி எடுத்து விட்டான். நான் பயந்தே போய்விட்டேன்.

திடீரென்று அவனுக்கு தானும் கம்ப்யூட்டர் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தான். ஒரு நாள் என்னிடம் வந்து," இட் (IT)industry ன்னா இன்னாது மேடம்?" என்று கேட்டான்.

முதலில் புரியாமல் விழித்த நான்," ஒ...... ஐ.டி யா அது இட் இல்ல பிரகாஷ் IT."என்றேன்.

அவன் உடனே "ஒ....நம்ம ஆடிட்டர் அடிக்கடி IT office போறேன்,IT office போறேன், இங்கிறாரே அதானா இது."

"ஐயோ பிரகாஷ், அது income tax இது information technology." என்றேன்.

"என் அக்கா கூட இப்படித்தான் மேடம் உனைய மாதிரியே நிறைய படிச்சிருக்குது . நிறைய certificate எல்லாம் வாங்கி இருக்குது. அதெல்லாம் கொண்டுவந்து தரேன் நீ வச்சிக்க மேடம்."

"ஒருத்தர் பேர்ல்ல இருக்கிற certificates இன்னொருத்தர் உபயோக படுத்த முடியாது பிரகாஷ்.ஏன் அதெல்லாம் உன் அக்காவுக்கு வேண்டாமா? யாருகாவது கொடுத்தால் அவங்க திட்ட மாட்டாங்களா?"

"என் அக்கா தான் செத்து போச்சே மேடம். எங்க மாமா ரொம்ப கொடும பண்ணுனதால நெருப்பு வச்சிகின்னு செத்து போச்சு." என்றான்.

அதையும் அவன் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் சொன்னவுடன் அதிர்ந்து போனேன்.

இந்த அப்பாவி இளைஞனின் வாழ்வில் இப்படி ஒரு சோகம் இருக்கும் என்பதை  சற்றும் எதிர் பாராத நான் பேச்சற்று இருந்தேன்.

பின்னர் என் தோழிகளிடம் இது பற்றி பேசிய போது அவர்கள் சொன்னது. " ஆமா, உனக்கு தெரியாதா....? அவன் அக்கா குழந்தைகளும் அவன் வீட்டில் தான் வளர்கிறார்கள். அவன்னுக்கு அம்மாவும் கிடையாது. அவன் அப்பா ஏதோ ஒரு கம்பென்யில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார். அவன் வீட்டில் பெண்கள் யாரும் இல்லாததால் நம் ஆபீஸ் ஆண்கள் யாராவது ஒருத்தர் அவன்னுக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள்."

வேலையில் முழுகி என்னை சுற்றி இருக்கும் மனிதர்களை தெரிந்து கொள்ளாமல் இருந்த என் அறியாமையை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. ஒருவர் என்ன படித்திருந்தால் தான் என்ன, என்ன பட்டம் வாங்கி இருந்தால்தான் என்ன, எல்லாம் மரணத்தின் பின் பயனற்று தான் போகும். என்ற வாழ்கையின் நிலையாமையும் மனதில் எழுந்தது.

                                                                                                                           ........தொடரும்.

சனி, ஆகஸ்ட் 13, 2011

ரக்க்ஷாபந்தன் வாழ்த்துக்கள்





பதிவுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் உள்ளங்கனிந்த ரக்க்ஷா பந்தன் திருநாள் வாழ்த்துக்கள். 

உங்கள் அன்பு தானை தலைவி.

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

புவனேஸ்வரி மகாத்மியம் - பகுதி 3

 ம்ம்... கதையை எங்கே விட்டேன்? ஆங்... அந்த பள்ளி கூட வாசலில் நின்றிருந்த parents இடம் மொபைல் போன் தந்து உதவும் படி கேட்டேனல்லவா? ஒரு பெண்மணி அவரது போனை தந்தார். என் மொபைலுக்கு போன் அடித்தேன். போன் அடித்த போதுதான் ஆடோகாரருக்கு என் பை அவர் வண்டியில் இருப்பதே தெரிந்திருக்கிறது. அவர் போன் எடுத்து ஹலோ என்றார். பின் எனக்கும் அவருக்கும் இடையே நடந்த உரையாடல் கீழே.

ஹலோ ! ஆட்டோ மென்ங்களா? 

ஆமாங்க !

சார் ! நான்தான் சார் உங்க வண்டியில்ல இப்போ ஸ்கூல் வாசல்ல இறங்கினேனே! என் பையை உங்க வண்டியில தவற விட்டுடேங்க, கொஞ்சம் திருப்பி கொண்டு வந்து தரமுடியுமா? 

அதெல்லாம் இப்ப முடியாதுங்க. ஏழு மணிக்கு மேல வந்து வாங்கிகோங்க.

என்னது ! ஏழு மணிக்கு மேலயா ??? சார் நான் ஐந்து மணிக்கு ஊருக்கு போகணும் சார். இப்பவே என் பையை குடுதிடுங்க சார்.

அதெல்லாம் முடியாதுமா, ஏழு மணிக்கு மேல வந்து வாங்கிகோங்க. 

(இடையில் சுவிட்ச் ஆப் பண்ணு ! சுவிட்ச் ஆப் பண்ணு ! என்று குரல்கள் வேறு கேட்கிறது.)

சார், ப்ளீஸ் தயவு செய்து என் பேகை குடுத்திடுங்க. 

இத பாருங்கம்மா ! திரும்பி வந்து நான் பையை குடுக்கனும்னா அதுக்கும் முப்பது ரூபாய் குடுக்கணும்.

சரி ! தரேன் தயவு செய்து பையை குடுங்க சார்.

சரி ! ஒரு அஞ்சு மணிக்கு வந்து வாங்கிகோங்க.

நான் அஞ்சு மணிக்கு ஊருக்கு போகணும் சார். அதோட எங்க வந்து நான் வாங்கிக்கறது?

(மீண்டும் சுவிட்ச் ஆப் பண்ணு, சுவிட்ச் ஆப் பண்ணு குரல்கள் கேட்கின்றன.)

ஏன் போன் ஐ சுவிட்ச் ஆப் பண்ணி போட எனக்கு தெரியாது !?  நான் இப்போ கோமதி நகர்ல இருக்கேன். இப்போ எல்லாம் தரமுடியாது.

சார் ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க...(போன் கட் பண்ண படுகிறது).

சுற்றி இருந்தவர்களின் பரிதாப பார்வை என்னையே மையபடுத்தி நிற்கிறது. இப்போது என்ன செய்வது? அந்த அம்மாளிடமே அனுமதி பெற்று அவர் போனில் இருந்தே என் கணவருக்கு போன் அடித்தேன். வேறு ஒரு எண்ணில் இருந்து நான் கூப்பிடவும் குழம்பி போன அவர் பின்னர் விவரம் அறிந்து எரிச்சல் பட்டார்.

"நான் போன் பண்ணினா கட் பண்ணிடுவருங்க, நீங்க உங்க போன் ல்ல இருந்து எப்படியாவது நைசா பேசி வாங்கிடுங்க."

அவரும் போன் பண்ணி பார்த்திருக்கிறார். அடிக்கடி போன் அடிக்கவும் ஆடோக்காரர் போன் ஐ சுவிட்ச் ஆப் செய்து விட்டார். நல்ல வேளை யாக தலைவர் நான் இருந்த இடத்திற்கு அருகில் வந்து விட்டிருந்தார். அந்த பெண்மணிக்கு நன்றி கூறிவிட்டு புறபட்டோம். வழி நெடுகிலும் ஒரே லக்ஷார்ச்சனை, சஹாசர்ணாம அர்ச்சனை தான் எனக்கு.

"இப்படியா ஒருத்தி போன், எ.டி.எம் கார்டு, பணம் எல்லாத்தையும் பைல வச்சு இந்தா ஜாக்பாட் இங்கிரமதிரி விடுவா?"

"அந்த ஆட்டோ காரர் பையை திருப்பி தர ஐடியா யாலே இல்ல போலிருக்கே? நான் போன் பண்ணினதும் சுவிட்ச் ஆப் பண்ணிட்டான்." என்று திட்டிகொண்டே வந்தார்.

வீட்டுக்கு வந்து, "போன் காணோம் என்று போலீஸ் கம்ப்ளைன்ட் குடுங்க". என்றேன் . 

"ஆமா ! ஒரு நாளைக்கு ஊர்ல்ல ஆயிரம் போன் காணாம போகுது. உன் போன் ஐ கண்டு பிடிக்கிறது தான் போலீஸ் வேலையா? பேசாம ஊர்ருக்கு கிளம்பற வழியை பாரு." என்று சொன்னாலும் மொபைல் மிஸ்ஸிங் செல்லுக்கு போன் செய்தார். அந்த எண் பழுது பட்டிருந்தது. 

தலைவரிடம் மீண்டும் போன் செய்து பார்க்க சொன்னேன். அவரோ கோபத்தோடு ," அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை கிளம்பற வழியை பாரு. நீ பையை விட்டா கொண்டு வந்து குடுகிறது தான் அவன் வேலையா? " என்றார் 

எனக்கு ஆவேசமே வந்து விட்டது. தவறு நடப்பது சகஜம் தானே அதை தனக்கு சாதகமாக்கி கொள்ளுவது எப்படி சரியாகும்? "சரி, நான் கடவுளிடம் சொல்லி கொள்கிறேன்." என்று முடிவு செய்தேன். நேராக சமையலறை குள் சென்றேன். ஒரு தட்டில் ஒரு வெல்ல கட்டியை எடுத்து வைத்தேன். பூஜை அறையில் வைத்தேன் புவனேஸ்வரி படத்தை பார்த்தேன். "வேறு யாருக்காவது இந்த நிலை ஏற்படிருந்தால் நான் உதவி இருப்பேன் என்று நீ நினைத்தால், நான் உன் பேரை சதா உச்சரித்து கொண்டே இருப்பது பொய் இல்லை என்றால் என் பை நிச்சயம் கிடைக்கும்." என்று அவளிடம் மனதிற்குள் சொன்னேன்.

"என்கிட்ட அவர் ஸ்கூல் ஆட்டோ ன்னு சொன்னாருங்க, ஒரு வேளை ஸ்கூல் வாசலில் அவரை கண்டு பிடிச்சாலும் பிடிச்சிடலாம்."

"சரி, எப்படியும் பெரியவளுக்கு ஸ்கூல் விடும் நேரமாகி விட்டது. வா ! பார்க்கலாம்."

ஸ்கூல் வாசலில் ஒவ்வொரு ஆட்டோ வாக தேடினோம். நேரமாகி கொண்டிருந்தது .ஒவ்வொரு ஆட்டோ மேனிடமும் யாராவது சக ஆட்டோ மேன் வண்டியில் பை   கிடைத்ததாக கூறினார்களா? என்று விசாரித்தோம்.

யாருக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. தலைவரின் கோபமும் தன் அணைகளை உடைத்து கொண்டு பாய தயாராக இருந்தது. இதற்குள் பெரியவளும் அவள் தோழர்களும் (கண்ணன், குரு)வந்தார்கள். நான் எல்லோரிடமும் விசாரிப்பதை பார்த்து குரு ரொம்ப அக்கரையாக, " என்ன ஆன்டி பேக் தொலைச்சிடீங்களா? எங்கே? எப்படி?" என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டான். அவர்களை கண்ணனின் அம்மா ரமணி யிடம் ஒப்படைத்து விட்டு பெரியவளை அழைத்து கொண்டு கவலையோடு வீடு திரும்பினோம்.

குழந்தைகளுக்கு  பால் காய்ச்சி கொண்டிருந்தேன். பெரியவள் என்னிடம் வந்து "ஏம்மா sad ஆ இருக்க?"

"என் பையை ஆட்டோல்ல தொலைச்சிட்டேன். அந்த ஆட்டோ காரர் பையை திருப்பி தராம மழுபல்லா பதில் சொல்றாருடா."

"நாங்கல்லாம் ஸ்கூல்ல  எதாவது பென்சில் கீழே கிடந்தா எடுத்து, இது யாரது ? இது யாரது ன்னு கேட்டு குடுப்போமே? ஆனா இவ்வளவு பெரியவரான அந்த ஆட்டோ மேன் உன் பேகை அப்படி திருப்பி தரவேணாமா?" என்றாள்.

"உனக்கு தெரிந்த இந்த விஷயம் பெரியவர்களுக்கு தெரியவில்லையே?" என்று நினைத்து கொண்டிருக்கும் போதே தலைவர் யாருடனோ போனில் பேசுவது கேட்டது.

"சார், நான் தான் சார் உங்க ஆட்டோ ல்ல பேக் விட்டாங்களே, அவங்க வீட்டுக்காரர் பேசறேன். பை எங்க வந்து வாங்கிகட்டும்?" 

"---------------------------"

"சரி, வண்டி நம்பர் சொல்லுங்க, எங்க சங்கரா ஸ்கூல் வாசல்லையா?, சரி இப்பவே வரேன்."

என்னால் நம்பவே முடியவில்லை. தலைவர் எதற்கும் போன் செய்து பார்ப்போமே என்று என் போன் இற்கு போன் செய்து பார்த்திருக்கிறார். போன் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு இருந்தது மட்டுமல்ல ஆட்டோ மேன் போன் ஐ எடுத்து அவர் ஸ்கூல் சவாரிக்கு வரும் சங்கரா ஸ்கூல் வாசலில் வந்து பையை வாங்கி கொள்ளும் படி கூறியுள்ளார்.  தலைவர் பையை வாங்க கிளம்பி சென்ற உடன் கண்ணனின் அம்மா ரமணி போன் செய்தார்(லேன்ட் லைனில்). 

"என்னங்க, பையை ஆட்டோ ல்ல விட்டுடீங்கன்னு கண்ணன் சொன்னான். நான் உங்க மொபைல் போனுக்கு போன் பண்ணி பார்த்தேன். அந்த ஆட்டோ காரர் தான் எடுத்தார். அவர் கிட்ட, "சார்! என் தோழியோடது தான் சார் அந்த பை தயவு செஞ்சு கொஞ்சம் கொண்டு வந்து குடுங்க."  என்று சொன்னேன். 

அதற்க்கு அவர்,"அவங்களே வந்து வாங்கி பாங்க." என்று எரிச்சலாக சொல்லிவிட்டார் என்றார்.

உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த நான் நடந்த அனைத்தையும் விவரித்தேன்.

"சரி, எப்படியும் கிடைச்சிடும், கவலை படாதீர்கள்." என்று ஆறுதல் கூறி விட்டு வைத்து விட்டார்.

அடுத்த அரைமணி நேரத்தில் என் பை எந்த நிலையில் காணாமல் போனதோ அதே நிலையில் ஒரு பொருளும் தொலையாமல் அப்படியே கிடைத்து விட்டது.

தலைவர் சென்றவுடன் அந்த ஆட்டோ காரரே பையை கொடுத்து "நான் சாப்பிட போய்கிடிருந்தேன் சார். ரொம்ப பசி அதனால தான் பையை கொண்டு வந்து குடுக்க முடியலை. எல்லாம் சரியாய் இருக்கா பார்த்துகோங்க." என்றாராம்.

தலைவர் அவருக்கு நன்றி சொல்லி சிறு அன்பளிப்பும் வழங்கி விட்டு பையை வாங்கி கொண்டு வந்திருக்கிறார்.

பெரியவள்,"அப்பா, பையை குடுகாததுக்கு ஆட்டோ மேன் உன் கிட்ட சாரி சொன்னாராப்பா?" என்றாள்.

நான் அவளிடம்,"அவர் சாரி சொல்ல வேண்டாம்மா. பையை விட்டது நான் தானே. அதை அவர் நல்ல படியாய் திருப்பி தந்திருகின்றார். அவருக்கு நாம் தான் நன்றி சொல்ல வேண்டும்." என்றேன்.

மறக்காமல் போன் தந்து உதவிய அந்த பெயர் தெரியாத பெண்மணிக்கும், ரமணிக்கும் போன் செய்து நன்றி சொல்லிவிட்டு ஊருக்கு புறப்பட்டோம்.

சரி, கதை முடிந்தது. இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

* சமயத்தில் போன் தந்து உதவிய அந்த பெயர் தெரியாத பெண்மணி யார்?

* முதலில் எதிர்மறையாய் பேசிய ஆட்டோ காரர் மனம் மாறியது எப்படி?

* "போன் செய்து முயற்சிக்கவே மாட்டேன். பை கிடைக்காது." என்று சொல்லி கொண்டிருந்த தலைவர் மனம் மாறி போன் செய்தது ஏன்?

* கண்ணனின் அம்மா ஆட்டோ காரருக்கு போன் செய்தது ஏன்?

*ஆட்டோ காரருக்கு என்னை ஏமாற்றும் எண்ணம் இருக்கவில்லை என்று      தலைவர் கூறினார். 









"தனம் தரும், கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா 
மனம் தரும்,தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 
கனம் தரும், பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. "

ஆம்,அன்னையின் அருள் நமக்கு நல்லவர்களை நட்பாக்கி வைக்கும். நம்மை சுற்றி நல்லவர்களை வைத்து நமக்கு துன்பம் நேரும் போது அவர்கள் நமக்கு உதவுமாறு செய்வது அவள் அன்பு.

போன் தந்து உதவிய பெண், ஆட்டோகாரர், ரமணி, குழந்தை குரு எல்லோரும் நல்லவர்களே. இதை உணர்த்த தான் இந்த திருவிளையாடல்.

என் நம்பிக்கையை நானே உணர வைத்ததும் இந்த நிகழ்ச்சியே.

                                        

                                       நல்லதையே நினைப்போம்! 

                                       நல்லதையே சொல்வோம்! 

                                        நல்லதையே செய்வோம்!.

                                               நல்லதே நடக்கும்.



                                                              சுபம்



வெள்ளி, ஜூலை 29, 2011

முதல் கொடுமை



நான் முதல் முதலில் எழுதிய பதிவு இது. இதை படித்து விட்டு என் சகோதரிகள் என்னை ப்ளாக் எழுத தூண்டினார்கள். அதன் விளைவு தான் நீங்கள் இப்போது அனுபவித்து கொண்டிருக்கும் கொடுமைகள்.

தி ஹிந்து நாளிதழும் அவதார் ஐ வின் என்ற மனித வள மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து பெண்களுக்கான வேலை வாய்ப்பு விழா வை19.03.2011, சனிகிழமை கீழ்பாக்கத்தில்  நடத்தின. 
நிகழ்ச்சியின் சில காட்சிகள் உங்களுக்காக. 


ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் பதிவு செய்தவர்கள் ஆயிர கணக்கில் இருகிறார்கள் என்றதும் அதற்கேற்றவாறு ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும். ஆனால் விழா ஏற்பாடுகள் மிக மிக மோசம்.

1.  பதிவு சீட்டை யாரும் சரி பார்க்கவே இல்லை. ஆயிரகணக்கான பெண்கள் வந்ததால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.

2.  அந்த சிறு அரங்கில் எல்லோரும் முண்டியடித்து கொண்டு திணறியது பரிதாபம். அசம்பாவிதம் ஏதும் நிகழாதது விழா ஒருங்கினைபாளர்களின் அதிர்ஷ்டம். 

3. பல பெண்களுக்கு பெற்றோர்உடன் பிறந்தோர்தோழிகள்கணவன் ஆகியோர் உடன் வந்திருந்தார்கள்.
     சில பெண்களுக்கு அவர்களது ஆண் நண்பர்கள் உடன் வந்து வரிசையில் நிற்கும் போது கடலை போட்டு உற்சாக மூட்டினார்கள். சிலர் குடை பிடித்து கொண்டு கூடவே நடந்து வந்தார்கள். 

4. தற்சமயம் நகர்புற பெண்களிடம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து விட்டது. தர்புசனி இளநிர் போன்ற இயற்கை உணவு வகைகள் மிகுதியாக விற்பனை ஆயின.

5. No BE, B.TECH, MCA  என்று ஒரு கம்பெனி முகாம் வாசலில் கூவி கொண்டிருந்தார்கள். 

6. தலை நரைத்த மூதாட்டிகள் கூட பெங்களூர் ஆ நான் போகிறேன் என் பிள்ளை அங்கே இருக்கிறான்மும்பையா பரவா இல்லை என் தம்பி இருக்கிறான் என்று எந்த ஊருக்கும் போய் வேலை பார்க்கும் உற்சாக தோடு இருந்ததை பார்த்தால் உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள் பெண்கள் தான் என்பது புரியும்.

அதெல்லாம்  சரி உனக்கு வேலை கிடைத்ததாஎன்கிறீர் களாஹி... ஹி ...ஹி  உங்களுக்கு நல்ல கட்டுரை கிடைத்ததல்லவா?