திங்கள், ஏப்ரல் 23, 2012

ஆட்டோ கிராப் - பிரபலமாகாத ஒரு பிரபலத்துடன் ஓர் சந்திப்பு.

பேட்டியாளர் : வணக்கம்.

 பிரபலம் : வணக்கம்.

பேட்டியாளர் : நீங்கள் இன்னமும் பிரபலமாகவில்லையே உங்களை போய்                   பேட்டி காண சொல்லி உள்ளார்களே என்று எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.

பிரபலம் : அப்படியெல்லாம் சொல்லகூடாது. இந்த பேட்டிக்கு பின் நான் பிரபலமாகிவிட்டு போகிறேன்.

பேட்டியாளர் : சரி ! நீங்கள் பிறந்த இடம்.

பிரபலம் : சிங்கார சென்னையில் ஒரு பிரபலமான அரசு மருத்துவமனையில்.

பேட்டியாளர் : உங்கள் பிறந்த தேதி.

பிரபலம் : அது என்ன காந்தி ஜெயந்தியா ! அத நீங்க தெரிஞ்சுகிட்டு என்ன ஆக போகுது. 

 பேட்டியாளர் : உங்கள் உடன் பிறந்தவர்கள் ?

பிரபலம் : அவங்கல்லாம் என் கூட எங்க பிறந்தாங்க?, உஷாரா என்ன முன்னாடி விட்டுட்டு எல்லோரும் பின்னாடி இல்ல பிறந்தாங்க.

பேட்டியாளர் : உங்கள் கல்வி தகுதி

பிரபலம் : காமராஜர் என்ன படிச்சாரா. அவர் முதலமைச்சர் ஆகல?

பேட்டியாளர் : இந்த கேள்விக்கு இது பதில் இல்லையே?

பிரபலம் : பின்ன, நான் ரொம்ப படிக்கலைங்கிரத என் வாயாலையே சொல்லவைக்க நீங்க முயற்சி பண்ணினா...இப்படித்தான் பதில் வரும்.

பேட்டியாளர் : உங்கள் வாழ்க்கை துணையை பற்றி...?

பிரபலம் : எங்கிருந்தோ வந்தான்,இடை ஜாதி நான் என்றான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.

பேட்டியாளர் : உங்கள் பிள்ளைகள் பற்றி....?

பிரபலம் : இப்போதான் பரிட்சை எழுதி கிட்டிருக்கேன். இன்னும் பல வருடங்கள் கழித்து தான் தெரியும் நான் பாஸா, பெய்லா என்பது.

பேட்டியாளர் : உங்களுக்கு பிடித்த உணவு.

பிரபலம் : சைவ உணவு.

பேட்டியாளர் : நீங்கள் கவலைப்படுவது?

பிரபலம் : என் உடல் நிலை குறித்து.

பேட்டியாளர் : நீங்கள் கவலைப்படாதது?

பிரபலம் : என் நிதி நிலை குறித்து.

பேட்டியாளர் : நீங்கள் பெருமை படுவது ?

பிரபலம் : இந்திய பெண்ணாய் பிறந்ததற்கு.

பேட்டியாளர் : நீங்கள் வருத்த படுவது?

பிரபலம் : அதிகம் படிக்க முடியாமல் போனதற்கு.

பேட்டியாளர் : உங்கள் பலம்?

பிரபலம் : சலியாத மனம்.

பேட்டியாளர் : உங்கள் பலவீனம்?

பிரபலம் : சோம்பேறித்தனம்.

பேட்டியாளர் : உங்கள் சாதனை என்று நீங்கள் நம்புவது?

பிரபலம் : சுற்றி இருப்பவர்கள் என்னிடம் பல திறமைகள் இருப்பதாக நம்பும்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருப்பது.

பேட்டியாளர் : சமீபத்திய சாதனை?

பிரபலம் : மேல் சொன்ன விஷயத்தையே உலகளாவிய முறையில் செய்து கொண்டிருப்பது. 

 பேட்டியாளர் : உங்களுக்கு பிடித்த உடை?

பிரபலம் : என்னை இளமையாய் காட்ட கூடிய உடை(அதை இன்னமும் நான் கண்டுபிடிக்க வில்லை).

பேட்டியாளர் : இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்வது?

பிரபலம் : உங்களை யாரவது பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்க்காமல், உங்களை நீங்களே பாராட்டி உற்சாகபடுத்தி கொள்ளுங்கள்.

பேட்டியாளர் : பெரியவர்களுக்கு நீங்கள் சொல்வது?

பிரபலம் : "உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல", என்று இளையவர்களை பார்த்து சொல்லும் முன் உங்களுக்கு அது இருக்கிறதா என்று ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள். 

 பேட்டியாளர் : பெண்களுக்கு நீங்கள் சொல்வது ?

பிரபலம் : தன்னம்பிக்கைக்கும், கர்வத்திற்கும் வித்தியாசம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள். 

 பேட்டியாளர் : ஆண்களுக்கு நீங்கள் சொல்வது?

பிரபலம் : பெண்கள் புத்திசாலிகளாய் இருப்பதை நினைத்து பயப்படாதீர்கள். நீங்கள் அவர்களை பயன்படுத்தி கொள்ளும் சாமர்த்தியசாலிகளாய் இருப்பதை நினைத்து சந்தோஷ படுங்கள். 

 பேட்டியாளர் : உங்கள் அடுத்த திட்டம்?

பிரபலம் : உருப்படியாய் எதாவது எழுதி கிழிக்க வேண்டும்.

பேட்டியாளர் : உங்கள் நீண்ட கால திட்டம் ?

பிரபலம் : நாட்டிற்கு எதாவது உருப்படியாய் செய்ய வேண்டும்.

பேட்டியாளர் : இப்போது கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள்?

பிரபலம் : "உண்மையிலே நீங்கள் தான் கடவுளா?" என்று கேட்பேன். (பின்ன, என்னமாதிரி ஆசாமிங்களுக்கே காட்சி கொடுக்கிறார்ன்னா சந்தேகம் வராதா?)

பேட்டியாளர் : கடைசியாக ஒரு கேள்வி, நட்பு பற்றி உங்கள் கருத்து?

பிரபலம் : அது பயன் கருதாமல் வருவது,கலப்படம் இல்லாதது.

பேட்டியாளர் : உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி, 
பேட்டியளித்தமைக்கு மிக்க நன்றி.வணக்கம்.

பிரபலம் : இது ஒன்னும் பெரிய விஷயமில்ல, எப்பவுமே நான் இப்படித்தான் நேரத்தை வெட்டியா வீணாக்கிக்கிட்டு இருப்பேன்.

இந்த பிரபலம் வேறு யாருமல்ல, இந்த தளத்தின் ஆசிரியர் தான். இந்த தளம் தொடங்கி ஒரு வருடமாவதை(April 1 ஆம் தேதியோடு) கொண்டாடும் வகையில் இந்த உரையாடல் வெளியிடப்படுகிறது.

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

வந்தேன் ! வந்தேன் ! மீண்டும் நானே வந்தேன் !

அப்பாடி ! ஒரு வழியா வீட்டை மாத்தி, பசங்க பரிட்சை முடிஞ்சு, தம்பி நிச்சயதார்த்தம் முடிஞ்சு சீக்கிரமாஆஆஆஆஆஆஆஆஆஆ வந்துட்டேன் இல்ல !? 

கடைசியா நான் எழுதின ஜோதிட பதிவு யாருக்குமே புரியலைன்னு நினைக்கிறேன்.தங்கமணி எழுதிய accounts கவிதை மாதிரி ஆகிவிட்டது. 

என் தம்பி கூட "என்ன ராகு,கேது பெயர்ச்சி அது இதுன்னு என்னமோ தத்து பித்துன்னு எழுதி வச்சிருக்க!?" என்று கடுமையாக விமர்சித்தான். 

பின்னர் நான் விளக்கி சொல்லிய பின்தான் அவனுக்கும் புரிந்தது. "அதனால இப்போ என்ன பண்ணபோற....?" என்று நீங்கள் பயத்தோடு கேட்பது புரிகிறது. ஆமாம், அதே தான், ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை எழுதலாம் என்று ஒரு எண்ணம்.

இதனால் என்னை ஒரு தேர்ந்த ஜோதிடர் என்று நீங்கள் எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். என் ஜோதிட அறிவு நான் படித்த ஜோதிட, ஆன்மீக இதழ் களில் இருந்து பெற்ற தகவல்களின் தொகுப்பே. நான் ஜோதிடத்தை பற்றி எழுதுவது என்பது, மருத்துவ கல்லூரி வாசலில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணி திடீரென்று கல்லூரியின்னுள் சென்று பாடம் நடத்துவது போல்தான்.

இருந்தாலும் அடிப்படையான விஷயங்களை யார்வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதால் தைரியமாக அடுத்த பதிவில் இருந்து துவங்கலாம் என்று இருக்கிறேன்.

ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை அதை பார்த்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை போய் விடும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஜோதிடத்தை சரியாக தெரிந்து கொள்ளாததே இதற்கு காரணமாகும்.

அதனால் அடுத்த பதிவில் உங்களுக்கு "கெரகம்" புடிக்கும் என்பதை இப்போதே கணித்து சொல்கிறேன்.