வெள்ளி, நவம்பர் 25, 2016

உடலினை உறுதி செய்


நானும் என் தம்பியும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது, ஒரு சில நண்பர்களை பற்றிய பேச்சு எழுந்தது. 

"அவங்க ஏன் வரலை?"

"இவர் உடனே கிளம்பிட்டார் இல்ல?"

இப்படி பலவிதமாக பேசும் போது ஒரு விஷயம் பொதுவாக இருந்தது. 

அதுதான் "உடல்நிலை".

பலருக்கும் இதுதான் பிரச்சனை. விரதம் இருக்கமுடியாது?

என்னை ஒரு நிகழ்ச்சி நடத்த சொல்லி ஒருவர் கேட்டபோது, "எனக்கு பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது அக்கா, எனக்கு நிகழ்ச்சி நல்லபடியாக முடியவேண்டுமே என்ற பயத்தில் தலைவலி வந்துவிடும். அப்புறம் ரொம்ப கஷ்டம் ஆகிடும்", என்றேன். அவமானமாக இருந்தது.

பொறுப்பை ஏற்றுகொள்ள தயக்கம். காரணம் உடல்நிலை. "இப்படி இருந்தால் நாளை மகள் திருமண வேலைகளை எப்படி செய்வாய்?" என்று என் மனசாட்சி கேட்டது, 

நிறைய பேருக்கு சிறு வயதிலேயே நீரிழிவு நோய். அதனால், நிறைய நேரம் பசியோடு இருக்க முடியாது, இயற்கை உபாதைகளின் தொல்லை, பலருக்கும் உடல் பருமனால் மலை ஏற முடியாது இப்படி பல.

இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் "உடல் நிலை".

சில தலைமுறைகளாகவே நாம் உடற்பயிற்சியின் அவசியம் தெரியாதவர்களாவே வளர்ந்திருக்கிறோம். “படிப்பு தான் முக்கியம்!, படிச்சாத்தான் சோறு கிடைக்கும் !” என்பதாக நம் மனதில் பதிந்திருக்கிறது. வெறும் ஏட்டு படிப்பால் நிறைய பணம் சம்பாதித்தோம் ஆனால், அந்த பணத்தால் பயன் என்ன?

ஆண்களில் சிலராவது விளையாட வாய்ப்பு கிடைக்க பெற்றிருப்பார்கள். ஆனால், பெண்குழந்தைகள். “அடக்க ஒடுக்கமா வீட்டுல இரு!” “விளையாடி கைய கால ஓடிச்சிகிட்டியானா எவன் கட்டிப்பான்.” “எல்லாம் குனிஞ்சு நிமுந்து வேலை செஞ்சா போதும்!” தனியா என்ன விளையாட்டு வேண்டிகிடக்கு!” போன்ற கட்டளைகள் பெண்களுக்கு பிறப்பிக்கபட்டன. சொன்னவர்கள், வியாதியில் விழுந்த போது அவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டிய பெண்களும் நோயில் விழுந்திருந்தார்கள்.

பல வீடுகளில் பெற்றோர் காலமான போது, நீரிழிவு நோயால் தாக்கப்பட்டு இறுதி காரியங்களை செய்ய கூட பசி தாங்க முடியாமல் அவதிப்பட்ட பிள்ளைகளை பார்த்திருக்கிறேன்.

உடல் உறுதியாக இல்லாவிட்டால் நாட்டிற்கு ராணுவ சேவை செய்ய ஆள் கிடைப்பது எப்படி? கைலாஷ் மானசரோவர் யாத்திரை போவது எப்படி? பெற்றோருக்கு இறுதி கடமைகளை எப்படி செய்வது? பெண் குழந்தைகளின் பேறு காலத்தை கவனிப்பது எப்படி? அட ! இதெல்லாம் கூட பரவாயில்லை, நம் உடலை நாமே சுமப்பது எப்படி?   

 நான் பார்த்த பலரும் சிறுவயதிலேயே உடல் பெருத்து, மூன்று வேளையும் சாப்பாட்டைவிட அதிகமாக மருந்து சாப்பிடுகிறார்கள். சகல ரோகங்களும் மிக,மிக இளம் வயதிலேயே அவர்களிடம் முகாமிட்டு விடுகின்றன.எல்லாம் தெரிந்திருந்தாலும் உடலை பேணுவது என்பதை ஏதோ சுயநலமாக இருப்பதாக கற்பித்துக்கொண்டு தவிர்க்கிறார்கள். 

என் மகள்களை வெளியே விளையாடவிட்டால், ஏதோ பாவகாரியத்தில் அவர்களை நான் ஈடுபடுத்துவது போல் பார்ப்பவர்கள் பலர். குழந்தைகளை டிவி, டேப் முதலியவற்றுக்கு அடிமையாகவிட்டு விட்டு,” என்னங்க செய்யறது? வெளிய விளையாட அனுப்பினா சண்டை வருது.” என்கிறார்கள் சிலர். 

வரட்டுமே! அதை எப்படி கையாள்வது என்று சொல்லிக்கொடுங்கள். அதுக்கெல்லாம் எங்களுக்கு ஏது நேரம்? டிவி பார்க்கணும், நாங்களும் வாட்சாப், பேஸ்புக் என்று நேரம் ஓட்ட வேண்டும்.    
  
ஆக மொத்தத்தில் நாம் நோயாளிகளானது அறியாமையினால், அடுத்த தலைமுறையை நோயாளிகளாக்குவது சோம்பலினால். 

போதும் ! இத்தோடு இது நிற்கட்டும்! திருமணம் போன்ற விசேஷங்களுக்கு உடலுக்கு பட்டுடுத்தி, அரிதாரம் பூசிக்கொண்டு சென்றுவிட்டு பந்தியில் பரிமாறப்படும் இனிப்பை சுவைக்க முடியாத சங்கடம் இனிவேண்டாம். 

சாப்பிட்டு முடிந்ததும் அவரவர் கொண்டுவந்திருக்கும் நடமாடும் மருந்துக்கடையை திறக்கும் நிலை இனிவேண்டாம்.

“எனக்கு சுகர் ! உனக்கு பி.பீயா?” என்ற குசல விசாரிப்புகள் இனி வேண்டாம்.

“நான் பைபாஸ் பண்ணிண்டுட்டேன், நீங்க எப்போ பண்ணிண்டீங்க? எவ்வளவு செலவாச்சு?” என்று ஏதோ பெண்ணின் கல்யாணம், வீடு கட்டுவது மாதிரி அறுவை சிகிச்சையை அந்தஸ்தின் அடையாளம் போல் பேசுவது இனி வேண்டாம்.    

நம் உடல் நமக்கே பாரமாகும் அவலம் இனி வேண்டாம்.
     
நாலு நாள் வாக்கிங் போய்விட்டு ஐந்தாவது நாள் நொண்டி சாக்கு சொல்லிக்கொண்டு தட்டிகழிப்பது இனி வேண்டாம். 

இனி ஒரு விதிசெய்வோம் ! அதை எந்த நாளும் காப்போம் !
 
சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளையே பழக்குவோம், வெள்ளை சர்க்கரை,மைதா போன்றவற்றை தவிர்ப்போம்,
வெளியே மைதானத்தில் விளையாடும் விளையாட்டுகளில்  குழந்தைகளை ஈடுபடுத்துவோம், நாமும் சேர்ந்து விளையாடுவோம்.

நாம் அன்பானவர்கள், அறிவானவர்கள் மட்டுமல்ல ஆரோக்கியமானவர்களும் கூட என்று நிரூபிப்போம்.



செவ்வாய், நவம்பர் 01, 2016

சும்மா......! :)

ஏனோ இம்சை அரசன் இருப்பத்திரண்டாம் புலிகேசியின் அவை புலவர்கள் இரண்டு பேரும் நேற்று என் கனவில் வந்து "தானை தலைவி !இனி நீ சுசி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்." என்று வாழ்த்திவிட்டு சென்றார்கள். புலவர்கள் வாக்கு பொய்க்க கூடாதென்று என் ப்ளோகின் பெயர் இன்று முதல் "சுசி" என்று மாற்றப்படுகிறது. :)

ஏன்  மாற்றினாய் ? சுசி என்கிற பெயர் எதற்காக என்றெல்லாம் கேட்டீர்கள் என்றால் என் பதில் "சும்மா....!" :)